அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 54


அண்ணாவின் நண்பர் குழு என்றால் பேச்சு மன்றங்களில் ஒரு அச்சம் இருந்தது. அந்த நண்பர் குழு வருவதற்குள் சிலர் அவசர அவசரமாகத் தங்கள் கூட்டத்தை முடித்துவிடுவார்களாம். ஏனென்றால், அவர்கள் வந்தால், பிறகு கூட்டம் அவர்களுடையதாக ஆகிவிடும் என்ற அச்சம். ஒரு தடவை, ஒரு மன்றத்தில் அண்ணாதுரையின் நண்பர் குழு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்து கூட்டம் நடத்தியவர் அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு. கிளம்பிவிட்டார். ஆனால் அண்ணா வருவதைக் கேள்விப்பட்ட கூட்டத்தில் ஒரு பகுதியினர் காத்தினர் அண்ணா வரும்வரை! அண்ணா வந்ததும் கூட்டத் தலைவர் போய்விட்டதையும் கூட்டம் கலைந்து போவதையும் கவனித்து, திரும்பிவிடலாம் - வேறு கூட்டம் செய்லலாம் என்ற நிலையில், கூட்டம் சிறிது காத்திருப்பது அறிந்து, அண்ணா உள்ளே வந்தார். அண்ணாவின் நண்பரே தலைமை வசித்தார், பிறகு அண்ணா பேசினார்! பிற்காலத்தில் மாதக் கணக்கில் காத்திருந்து கூட்டத்திற்கு நாள் கேட்டு நாள் கூட அல்ல, மணிநேரம் கேட்டு அண்ணாவிடம் மன்றாடி நின்றனர். முதலில் அவரே வலிய சென்று கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அப்பொழுதுகூட, வன்முறையாகவோ, அருவருக்கத்தக்க நிலயிலேயோ, அவர்கள செல்வதில்லையாம் கட்சிக் கூட்டங்களிலோ, தனிப்பட்டவர் கூட்டத்திலோ அண்ணாவின் நண்பர் குழு தலையிடுவதில்லை. விவாதம் நடத்தும் பொதுமன்றங்களில் மட்டும் இவர்கள் சென்று இடம் பேட்டனர். அண்ணாவின் குழுவினரைப் பற்றி அப்பொழுதிருந்த கேலியான விளம்பரம்! கட்டி மாத்திரை கணேசன் சிட்டிகைப் பொடி சின்னக்கண்ணு ராப்பட்டினி ரங்கனாதம் அலைந்து திரியும் அண்ணாதுரை இந்தப் பட்டியலை அண்ணா அவர்களே பிற்காலத்தில் வேடிக்கையாகச் சொல்வார்கள். இதில் சிட்டிகைப் பொடி சின்னக் கண்ணு என்று வருவதால் அவரிடமிருந்துதான் அண்ணாவுக்குப் பொடிபோடும் பழக்கம் வந்தது என்று நினைக்கத் தேவையில்லை அண்ணா அவர்கள் காஞ்சீபுரத்தில் பள்ளியில் படிக்கும்பொழுதே அந்தப் பழக்கம் ஆரம்பித்துவிட்டது, காஞ்சிபுரத்தில் அண்ணாவின் தாத்தா ஒருவருக்கு, அண்ணா பொடிமட்டை வாங்கி வருவாராம். அப்படி வாங்கி வரும்பொழுது, அதில் என்னதான் இருக்கிறது என்று மெதுவாக முகர்ந்து பார்ப்பாராம்; பிறகு சிறிது போட்டுப்பார்ப்பாராம். இப்படி மெதுவாகப் பழக்கம் வந்ததாம். அப்புறம், தாத்தாவுக்குப் பொடி வாங்கிவரும்பொழுது, தனக்கு அதில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒரு சிறு மட்டையில் வைத்துக் கொள்வாராம். ஒரு நாள் அண்ணாவின் சட்டைப் பையில் பொடிமட்டை இருப்பதைக் கண்டுபிடித்த தொத்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது; இது தாத்தாவின் பொடிமட்டை! என்று அண்ணா கூறி, தப்பித்துக் கொண்டார். திரு.பி.பாலசுப்பிரமணியர் அவர்களின் யோசனையின்பேரில், அண்ணா அவர்கள் விடுதலை இதழின் துணையாசிரியராகச் சேர்ந்தார். அப்பொழுது விடுதலை ஜஸ்டிஸ் கட்சியின் நாளேடாகச் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. தோழர் டி.ஏ.வி.நாதன் ஆசிரியராக இருந்தார். முதல் மந்திரியாக இருந்த பொப்பிலி அரசர் அவர்களின் பொறுப்பில் அது இருந்தது. அண்ணா அவர்களுக்கு பொப்பிலி அரசரின் அறிமுகம் மற்ற ஜஸ்டிஸ் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தன. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் நல்லவர்களாக இருந்தார்கள்; சுயநலத்துக்காக எதையும் செய்து கொள்வதில்லை. அவர்கள் மீது தனிப்பட்ட எந்த பழியையும் யாரும் கூற முடியாது. நாம் நல்லவர்களாக இருக்கிறோம். நமது கட்சி நல்ல காரியங்களைச் செய்திருக்கிறது; மக்கள் ஆதரவு நமக்குத் தானே இருக்கும்! என்ற நம்பிக்கையில் அவர்கள் இருநதார்கள். மக்களிடம் தொடர்பு இல்லை காங்கிரசுக்கு வளர்ந்து வந்த செல்வாக்குக்கு ஈடாக இவர்கள் பணி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவில்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், அப்பொது, தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக அரசியல் வேகத்தில் அரசியல் யூகத்தில் மக்களிடமிருந்து விலகியவர்களாக இருந்தார்கள். ஆனால் நீதிக் கட்சியின் பல கோரிக்கைகள், பின்பு காங்கிரசிலேயே புகுந்தன. அண்ணா அவர்கள் கல்லூரியை விட்டு வெளிவந்து அரசியல் கூட்டங்களில் கலந்து பொதுவாழ்வில் ஈடுபட்டபொழுது அவர்கள் ஆதரித்த கட்சி அரசியலில் சரிவடைய ஆரம்பித்தது. 1935-ல் நடைபெற்ற மத்திய சட்டசபையுத் தேர்தல்களில் ஏ.ராமசாமி முதலியார், சண்முகம் செட்டியார் போன்றவர்கள் தோல்வி கண்டனர்; மாவட்டங்கள் தோறும் நடைபெடற்ற தேர்தல்களிலும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் தோல்வி அடைந்தனர். கட்சியில் பிளவுகள் ஏற்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும ஒரு பிரமுகர் மற்றவருக்கு எதிராகப் போட்டியிடுவது மறைமுகமாக வேலை செய்வது, வெளிப்படையாக காங்கிரசிலேயே சேர்ந்துவிடுவதுபோன்ற வேலைகள் நடைபெற்றன. 1935-ல் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் மத்திய சட்டசபைத் தேர்தலில் தோல்வி கண்டதுமட்டுமல்ல. 1936-ல் அண்ணா அவர்களே ஒரு தேர்தலில் நின்று தோல்வி கண்டார்! அதுதான் சென்னை மாநகராட்சித் தேர்தல். அண்ணா அவர்கள் அப்பொழுது தங்கசாலைத் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தார்கள். அப்பொழுது இருந்த தேர்தல் விதிமுறைப்படி, இந்த அளவு வரி செலுத்துபவர்கள்தாம் வாக்குரிமை பெறுவார்கள். அண்ணா அவர்கள் வாடகை வீட்டில் இருந்ததால், அந்த வாக்குரிமை கிடைக்கவில்லை. தேர்தலில் நிற்க முடிவு செய்தபிறகு, வாக்குரிமை பெற ஒரு வழி செய்தார்கள். சென்னை கருப்பண்ண முதலித் தெருவில், அண்ணாவின் மனைவியார் - ராணி அண்ணியின் - மாமாவான சிவப்பிரகாசம் அவர்களின் வீடு இருந்தது. அவசர அவசரமாக அந்த வீட்டுரிமையை அண்ணவின் பேரில் மாற்றி, அவர்பேரில் வரி செலுத்தச் செய்து, வாக்குரிமை பெற்று, பிறகு பெத்துநாயக்கன் பேட்டையில் அண்ணா மாநகராட்சிக்குப் போட்டியிட்டார். காங்கிரசு வேட்பாளராக திரு.எம்.பாலசுந்தரம் முதலியார் என்பவர் நின்றார். அண்ணாவை எதிர்த்துக் காங்கிரசுக் கூடாரத்தின் பிரசாரத்தில் முக்கியமானவர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் பெத்துநாயக்கன் பேட்டை பிரமுகர் என்.வி.நடராசன்! (இப்பொழுது பின்தங்கிய துறையினர் மந்திரியாக தி.மு.கழக முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்குகிற இதே என்.வி.நடராசன்தான், அவர் பெத்துநாக்கன் பேட்டைத் தேர்தல் மும்முரமான பேச்சில்தான், காங்கிரசுப் பிரமுகராக விளங்கிய என்.வி.நடராசன் ஒரு பொதுக்கூட்டத்தில் யார் இந்த அண்ணாதுரை? ஜாக்கிரதை! மஞ்சாசோறை எடுத்துவிடுவேன்! என்று எச்சரித்தார்! பின்பு இந்தி எதிர்ப்பு காலத்தில், காகிரசைவிட்டு விலகி, அண்ணாவுடன் சேர்ந்து, அவர் பணிபுரிந்தார். பிற்காலத்தில் அண்ணாஅவர்கள் நடராசன் அவர்களைப் பார்க்கும்பொழுது கேலியாக, மஞ்சாசோறு பேச்சைக் கவனப்படுத்துவார். காங்கிரசுக்காரர்களுக்கு அண்ணாவின் மீது தனிப்பட்ட முறையில் கோபம் இருந்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அப்பொழுது பண்டித ஜவர்கர்லால் நேரு தென்னாட்டுக்கு வந்திருந்தார். துடிப்பான பேச்சுக்குப் பேர்போன நேரு அவர்கள் சென்னையில் இருந்த ஜஸ்டிஸ் கட்சி பற்றி இழிவாகப் பேசி விட்டார். இதனைக் கண்டு வெகுண்ட அண்ணா அவர்கள், பண்டித நேரு அவர்களையே சொற்போருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் துண்டறிக்கை மூலம்! இது சென்னை அரசியல் வட்டாரத்ரில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது பண்டித நேரு அவர்கள் மோதிலால் நேருவின் திருமகனாராக கேம்பிரிட்ஜ் பட்டம் பெற்ற திரும்பியவராக-காங்கிரஸ் தலைவராக காந்தியாரின் செல்லப் பிள்ளையாக அப்பொழுது திகழ்ந்தார். காங்கிரசின் தீவிரவாதியாக ஏராளமான மக்களைக் கவர்ந்திடும் காந்த சக்தியாக அவர் விளங்கினார். அவரை வாதத்துக்கு அழைத்து ஒரு சவால்வந்தது பலருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சொற்போர் ஏற்பாட்டுக்குச் சிலர் தயாராக இருந்தார்கள். ஆனால் சென்னைக் காங்கிரஸ்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அண்ணாவும், பண்டித நேருவும் அப்பொழுது சந்திக்கவில்லை. 30 ஆண்டுகள் கழித்துத்தான் சந்தித்தார்கள் டெல்லியில் மாநிலங்கள் அவையில்!
(இரா.செழியன் - மன்றம்,1969)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai