அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி:: 35


முன்பெல்லாம் அவ்வப்போது தில்லையில் நடக்கும் அண்ணாவின் கூட்டங்களுக்கு திரு.அன்பழகன் என்னையும் அழைத்துச் சென்று அண்ணாவின் அறிவுரைகளைக் கேட்டு அவர் வழி நடக்க வாய்ப்பு அளித்தமையோடு என்னை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தவும் செய்தார். இந்நிகழ்ச்சி எனது வாழ்க்கையில் மறக்க முடியாததும் பசுமையானதும் ஆகும்.

பேரறிஞர் அண்ணாவை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து வந்து பேருரை நிகழ்த்தச் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று சொன்னேன். இருப்பினும் விடாப்பிடியாக துணை வேந்தரிடம் ஒப்புதல் வாங்கும்படி என்னைப் பணித்தார். அச்சமயம், நீதிக் கட்சியின் தலைவருள் ஒருவரான சர்.கே.வி.ரெட்டிதான் பல்கலைக் கழகத் துணைவேந்தர். அவரிடம் சென்று கேட்டதில், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுமென்று பல ஆசிரியர்கள் சொன்னதாகம், அதனால் அண்ணாவை அழைக்க அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி 1941-ல் நடந்தது. பிறகு பேராசிரியர் எம்.இரத்தினசாமி அவர்கள், பல்கலைக் கழக துணைவேந்தரானார்.

ஓராண்டு இடைவெளிக்குப் பின் நானும், திரு.அன்பழகனும் இணைந்து, துணைவேந்தர் அவர்களை அணுகி மறுபடியும் எங்களது விருப்பத்தைத் தெரிவித்தோம்.

அண்ணவை அழைத்துப் பல்கலைக் கழக இலக்கிய மன்றத்தில் பேச வைத்தால் அண்ணாவின் பேச்சு மாணவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் அஞ்சினார்கள். மேலும் மாணவர்களிடையேயும் சலசலப்பு ஏற்படுமென்றும், அண்ணா வரும்போது கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்துவார்கள் என்றும் கூட்டத்திற்குப் போகும் நபர்களைத் தடுப்பது அவசியமானால், வேலை நிறுத்தம் செய்வது என்ற திட்டங்கள் இருப்பதையறிந்த துணைவேந்தர் என்னையும் திரு.அன்பழகனையும் அழைத்து எங்கள் விருப்பத்தைக் கைவிடச் சொன்னார். ஆனால் நாங்கள் இருவரும் விடாப் பிடியாக வாதிட்டு பதட்ட நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கொடுத்ததின் பேரின் துணைவேந்தர் எங்களுக்கு அனுமதி கொடுத்தார்.

ஆற்றோரம் என்ற தலைப்பில் தமிழ்த்துறைப் பேராசிரியர் தாகூர் விரிவுரையாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா உரை நிகழ்த்தினார். பேராசிரியர்களும் மாணவர்களும் இன்னும் பலரும் பட்டமளிப்பு விழா மண்டபம் நிறைய வந்திருந்து சொற்பொழிவை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றார்கள். எதிர்பார்த்தபடி சலசலப்பில்லை. கருப்புக் கொடியில்லை. கிளர்ச்சி ஏதும் இல்லை. மாறுபட்ட கருத்துள்ள மாணவர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள். இந்நிநகழ்சசி இன்றைய பேராசிரியர் அன்பழகனுக்கு அன்று கிடைத்த பெரும் வெற்றி என்று கூறலாம். இந்நிகழ்ச்சி 1942-ல் நடந்தது.

மறுநாளே தமிழ் இலக்கிய மன்றத்தில் அண்ணாவின் பேச்சு வெற்றிகரமாக நடந்தேறியதை அறிந்த துணைவேந்தர் நான் செயலாளராக இருந்த சங்கத்தில் ஆங்கிலத்தில் முதன் முதலாக (றுயீசடன டிடன யனே சூநற) உலகம் பழையதும் புதியதும் என்றதலைப்பில்அண்ணாவின் சொற்பொழிவுக்கு மனமுவந்து, துணைவேந்தர் எம்.இரத்தினசாமியே தலைமை தாங்கினார். அண்ணாவின் ஆங்கிலச் சொற்பொழிவு கேட்டு பலரும் வியந்தனர். துணைவேந்தரும் பாராட்டிப் பேசினார். முதன் முதலாக அண்ணாவின் ஆங்கிலச் சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு அன்றுதான் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைத்தது. அண்ணாவின் பேச்சுத் திறனையும், கேட்போரை ஈர்க்கும் பாங்கினையும் வியந்தவண்ணம் இருந்தார்கள்.

முதன்முறையாக அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய இரு பேருரைகளும், தமிழ்நாட்டில் உள்ள ஏனைய கல்லூரிகளுக்கு அண்ணாவைப் பேருரை நிகழ்த்த அழைக்க ஒரு முன்னோடியாக அமைந்து மாணவரிடையே மறுமலர்ச்சியைத் தோற்றுவித்துப பெரியதொரு திருப்பத்தை உருவாக்கியது எனலாம். ஆகவே அண்ணாவும் அந்நிகழ்ச்சியை அடிக்கடிச் சுட்டிக் காண்பிக்கத் தவறியதில்லை.
(காந்திமதிநாதன்)

 

தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிடர் மாணவர்கள் கழத்தின் இரண்டாவது மாநாடு 1946 பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெற்றது. அண்ணா வெள்ளைச் சட்டையில் இருந்தார். அண்ணா கருப்புச் சட்டை எங்கே என்று நான் கேட்க, அவர் திராவிடர் மாணவர் மாநாடுதானே என்று அண்ணா சொன்னார். அதற்கு நான் அண்ணா ஐயா வழக்கப்படி(சுநளடிடரவடி) தீர்மானத்தை விட (ஊடிஎநவேடியேட) கன்வென்ஷனுக்குத்தானே மதிப்பு அதிகம் என்றேன்.

அதற்கு அண்ணா இது கன்வென்ஷன் இல்லை, கம்பல்ஷன், விருப்பத்துக்கு விரோதமா, கட்டாயப்படுத்துவது. என்கிட்டே கருப்புச் சட்டையில்லை. மேடைக்கு வராமே இருந்திடுகிறேன் என்றார் அண்ணா. நான் சரவணன் என்பவரிடம் கருப்புச் சட்டையை கடன் வாங்கி அண்ணா அதை அணிந்துகொண்டார். மே திங்கள் 11, 12, தேதிகளில் மதுரையில் கருப்புச் சட்டை மாநாட்டை அண்ணா திறந்து வைத்தார். அங்குதான் வைத்யநாத அய்யர் கும்பல், தீ வைத்து பந்தலைக் கொளுத்தி, குண்டர்களை விட்டு கழகத் தோழர்களை அடித்தனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் திராவிடர் கழகக் கொடிகளை அறுத்து காங்கிரசார் கலகம் விளைவித்தனர். இதற்கு மறுவாரமே கும்பகோணத்தில் இரண்டு நாள் மாநாடு, ஆசைத் தம்பி தலைமையில் அண்ணா காலில் ஒரு ரிங்கு கட்டியோடு மாநாட்டில் பங்கேற்றதுடன், இரு இரவுகளிலும் தன்னுடைய சந்திரோதயம் நாடகமும் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் இரு நாடகங்களையும் நடத்தினார்.

இங்குதான் அய்யா, அண்ணாவை மனதில் நினைத்து இன்னும் இங்கு சிலர் கருப்புச் சட்டை அணிய தயங்குகிறார்கள், அவர்கள் குள்ளநரிகள் என்று பேசினார்.

1948-ல் காந்தியார் சுடப்பட்டதன் விளைவாக கருப்புச் சட்டை படையை ஓமந்துரார் ஆட்சி தடை செய்தது. அப்போது அண்ணா பகலிலும், இரவிலும் கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கண் வரும்போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார்.
(கவிஞர். கருணானந்தம்)

 

புரட்சிக் கவிஞருக்கு நிதி
(1946-ம் ஆண்டு)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு இருபதாண்டுகளுக்கு முன்னாலே பரிசளிப்பு நடத்தி, அவரிடத்தில் பணமுடிப்பு கொடுத்தான பிறகு அந்தப் பணமுடிப்பை எடுத்துக் கொண்டு அவரோடு நான், ஒரு குதிரை வண்டியில் ஏறிக் கொண்டு திருவல்லிக்கேணியில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் எனக்கும் பெரியாருக்கும் ஓரளவுக்குச் சிறு மனத்தாங்கல். அதைப் போலவே பாரதிதாசன் அவர்களுக்கும் பெரியாரிடத்திலே ஓரளவு மனத்தாங்கல் இருந்த நேரம். அந்த இரண்டு சூழ்நிலைக்கும் இடையில் பாரதிதாசன் அவர்கள் வண்டியிலே போய்க் கொண்டிருந்த நேரத்தில், நீ கொடுத்திருக்கின்ற இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாம் தமிழர்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம். நீயும் நானும் இருந்து நடத்தலாம் என்று என்னிடத்திலே சொன்னார்கள். நான் அவர்களிடத்திலே, ஐயா! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நீங்கள் கவிதை உலகத்திலே நடமாடுங்கள். கவிதை உலகத்திலே நீங்கள் நடமாடுகின்ற உயரத்திற்கு எந்த அரசியல்வாதியும் வரமுடியாது. அரசியல்வாதிகளின் மத்தியில் வந்து இருந்துகொண்டு கவிதை எழுதுவது என்றால், அது அரசியல் கவிதையாகத்தான் இருக்கும். அதற்கு வயது ஆறு மாதமாகத்தான் இருக்கும். ஆகையினாலே நீங்கள் இந்த அரசியல் காரியத்தில் ஈடுபட வேண்டுமென்று கருதாமல், நீங்கள் நாங்கள் கொடுத்திருக்கின்ற இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிலே உள்ள பெரிய மலைகளுக்கெல்லாம் சென்று வாருங்கள்; நதிகளுக்கெல்லாம் சென்று வாருங்கள்; பொழிலெல்லாம் கண்டு வாருங்கள்; மக்களையெல்லாம் பார்த்து வாருங்கள்; அவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து நீங்கள் பெறுகின்ற நல்ல கருத்துகளை கவிதை வடிவத்திலே கொடுங்கள். அதற்குத்தான் இந்த விழா நடந்தது என்று சொன்னேன். என்னை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அண்ணாதுரை தடுத்துவிட்டானே என்று அவர்கள் வருத்தப்படமாட்டார்கள். இந்த அரசியலில் இருந்துகொண்டு நான் படுகின்ற அல்லலை அவர் பார்த்திருப்பாரானால் அவருக்குச் சொன்னதை - அது எவ்வளவு நல்லது என்பதை உணர்ந்திருப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகும் அவர்கள் பாண்டியன் பரிசு போன்ற பல அரிய ஏடுகளை நமக்குத் தந்து சென்றிருக்கிறார்கள்.
(அண்ணா - பச்சையப்பன் கல்லூரி பொழிவு, 1968)


. . . . அண்ணா அப்போது கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி ஒன்று அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். குயில் என்ற ஏடு நடத்திக்கொண்டிருந்த திரு.டி.என்.இராமன், டி.எம்.பார்த்தசாரதி, ஜலகண்டபுரம் ப.கண்ணன், நாமக்கல் கிருஷ்ணராஜ் அடங்கிய குழு இந்தப் பொறுப்பை மேற்கொண்டிருந்தது. அண்ணா அவர்கள் தன்னை கலந்து செய்யவில்லை என்கிற ஆதங்கம் அய்யாவுக்கு ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மதுரை மாநாட்டுக்கு வராதது ஓரளவுக்கு இந்த ஆதங்கத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. பாரதிதாசன் நிதி பற்றி மலேயா, சிங்கப்பூர் தமிழர்கள் வசூலித்து அனுப்புவதாக உற்சாகத்தோடு (திருவாரூரிலிருந்து சிங்கப்பூர் குடியேறி தமிழ் முரசு எனும் ஏட்டை நடத்திக்கொண்டிருந்த) சாரங்கபாணி, அய்யாவிடம் கூற, அய்யா சீற . . . இது பற்றி குமுறி, இப்படியெல்லாம் போனால் இயக்கம் என்ன ஆவது? என்று கடல் கடந்து வாழும் அந்தத் தோழர் வேதனையோடு கடிதம் எழுதியிருந்தார். . . . . பாரதிதாசன் நிதி தனக்கு தொடர்பில்லாமல் நடைபெறுவதால், நொந்த உள்ளம் கொண்டு அய்யா கொட்டிய வார்த்தைகளும், என் பிஞ்சு மரக்கிளையை ஆட்டிவிட்டது.
(இராம. அரங்கண்ணல்)


மாவீரன் அண்ணன் அழகிரி அவர்கள் காசநோயால் அவதிப்பட்டு தாம்பரம் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டிருந்தார்கள். தன்னை யார் கூட்டத்திற்குக் கூப்பிட்டாலும் நூறு ரூபாயை அழகிரிசாமி அண்ணனுக்கு மணியார்டர் செய்துவிட்டு அந்த ரசீதை காட்டினால் பொதுகூட்டங்களில் கலந்துகொள்வதாக அறிவித்தார் அண்ணா. அதன்படி பல இடங்களில் இருந்து பணம் வந்தது நண்பர்கள் மூலமும் 1000 ரூபாய் வசூல் செய்து கொடுத்திருந்தார்கள். அப்படியும் நோய் குணமாகவில்லை, இறந்துவிட்டார்கள். அழகிரி சவ அடக்கத்திற்கு சென்னையிலிருந்து அய்யா அவர்கள் செல்லவில்லை. மயானத்தில் அய்யா வராததை கண்டித்து, எப்பொழுதுமே துடிப்பு அதிகமுள்ள கருணாநிதி அவர்கள் பேசிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அய்யாவின் கோபத்தை அய்யாவை கொள்ளிடத்திலே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யாவை வைத்துக்கொண்டே, தடியைத் தட்டித் தட்டி எங்கள் பேச்சை நிறத்தச் சொல்லாதீர்கள். கொஞ்ச நேரம் தடியை கூட்டத்துக்குப் புறப்படும் முன்பு வீட்டிலேயே வைத்துவிட்டு வாருங்கள் என்று க.அன்பழகன் எம்.ஏ அவர்கள் பேசியது அதிகமாவிட்டது. மறுநாள் சென்னைக்கு வந்த அய்யா அவர்கள் அண்ணன் குருசாமியையும், என்னையும் அழைத்து இனிமேல் இந்த கருணாநிதி, அன்பழகன் இரண்டு பேர் பற்றி எந்த நியூஸ் வந்தாலும் போடாதீர்கள் என்று கண்டிப்பான உத்தரவு போட்டார்கள்.

. . . . சென்னை கோவிந்தப்ப நாய்க்கன் தெருவிலுள்ள டபிள்யு.கே.தேவராச முதலியார் வீட்டில் தங்கியிருந்த அண்ணாவை பார்த்து முறையிட (திரு.குருசாமி அவர்களும், அரங்கண்ணல் அவர்களும்) இரண்டு பேரும் (அண்ணாவும், குருசாமியும்) ஒரு கார் வைத்துக்கொண்டு, பண்ருட்டி கூட்டத்துக்குப் போயிருந்த பெரியார் அவர்களைப் போய்ப்பார்த்துப் பேசினார்கள். அப்போதைக்கு அய்யா சமாதானம் சொல்லி அனுப்பினாலும் அய்யாவின் கோபம் இதனால் அதிகமாயிற்றே ஒழிய குறையவில்லை.
(இராம. அரங்கண்ணல்)

 

மக்களின் அண்ணா!
திராவிடர் கழகத்தில் இருந்து பணியாற்றியபோது தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்து போவது ரயிலில்தான். பெரியார் அவர்கள் சென்னைக்கு வரும்போதும், ஈரோட்டுக்குத் திரும்பிச் செல்லும்போதும் ரயிலடிக்கு அண்ணா அவர்களும் அவருடன் நானும் மற்ற நண்பர்களும் செல்லுவோம். பெரியார் அவர்கள் கொண்டு செல்லும் பெட்டி படுக்கை உள்ளிட்ட சாமான்களை நாங்கள் ஆளுக்கொன்றாக எடுத்து வருவோம். ரயில் நிலையத்திலுள்ள போர்ட்டர் தோழர்கள் ஒடோடி வருவார்கள். பெரியார் அவர்களோ எட்டு அணா மிச்சம் என்று மகிழ்ச்சியடைவார். ஆனால் அண்ணா அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாரில்லை என்பது சில நாட்கள் சென்று தெரியவந்தது.

ஒரு சமயம் அண்ணா அவர்கள் எங்களிடம் சொன்னார்: நாளெல்லாம் மூட்டை சுமந்தால் போர்ட்டருக்கு ஒரு ரூபாய் கிடைக்கலாம். (இது 1940ஆம் ஆண்டில்) அந்தப் பிழைப்பையும் நாம் கெடுக்க வேண்டுமா? ஓரளவு வசதி படைத்த அய்யா அவர்கள் எட்டு அணா கொடுப்பதால் என்ன நட்டம் வந்துவிடும? வசதியில்லாதவர்கள் அவரவர்களே தங்களின் மூட்டை முடிச்சுக்களைச் சுமந்துதான் செல்லவேண்டும். அய்யாவுக்கு தொண்டு செய்வதாய் எண்ணி ஏழை போர்ட்டர்களின் பிழைப்பை இனிமேல் கெடுக்காதீர்கள்!

அதிலிருந்து நாங்கள் பெரியார் அவர்களை அழைத்து வரச்சொல்லும்போது போர்டரிடமே படுக்கை - பெட்டி முதலியவைகளைக் கொடுத்து எடுத்து வரச்சொல்லுவோம்.

அப்போதெல்லாம் அண்ணா காஞ்சியிலிருந்து சென்னைக்குப் பஸ்ஸில்தான் வந்து போவார். பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து கருப்பண்ணன் வீதிக்கு (இராணி அண்ணியின் பாட்டி இல்லம்) நடந்தே வருவார். அப்படி வரும்போது ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையைக் கண்டு அதைப் பற்றியே எங்களுடன் பேசி வருவார். அவரது பொது வாழ்வின் துவக்கக் கட்டத்திலிருந்தே ஏழை மக்கள் வாழ்க்கையின் அவல நிலையை எண்ணி எண்ணி அவற்றைக் களைந்தெறியாமல் சமுதாம் ஒழுங்குறாது என்ற உறுதிப்பாட்டினை உள்ளத்தில் பதியவைத்துள்ளார்.
(என்.வி.நடராசன்)

------

1946ஆம் ஆணடு மே 10, 11 தேதிகளில் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவன் நான். அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அண்ணாவுக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அண்ணா பெரியாருடன் சிறிது கருத்து வேறுபாட்டினால் சற்று ஒதுங்கியது போலிருந்தார்கள்.

அண்ணா என்கோர் கடிதம் எழுதினார். தங்கள் கடிதங்கள் கிடைத்தன. நான் உடலாலும் உள்ளத்தாலும் சற்று சோர்ந்துபோய் இருக்கிறேன். யாரைப் பார்த்தாலும் தாங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும், தங்களுக்காகத்தான் சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்று எழுதுவதைக் காணும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஆம்! ஒரு தனி மனிதனின் பேச்சுத்திறன் மட்டுமே ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு காரணமாகிவிடக் கூடாதென நான் அஞ்சுகிறேன். தற்போது நம் இயக்கத்தில் அருமையான பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழையுங்கள். எனக்கு ஓராண்டு ஓய்வு கொடுங்கள். அந்த ஓய்வை 11 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு கேட்கிறேன் என்று எழுதியிருந்தார்கள்.
(புத்தனேரி நா. நடராசன் - மதுரை)

------

திராவிடநாடு அலுவலகம், முதலில் ஆடிசன் பேட்டை எனும் இடத்தில் வாடகைக்கு ஓர் இடத்தில் சிலகாலம் நடந்தது. பிறகு காஞ்சீபுரம் திருக்கட்சி நம்பித் தெருவில், ஓர் சொந்த வீட்டிற்கு மாற்றப்பட்டது. திரு.பொன்னுசாமி முதலியார் (காஞ்சி. அ.க.தங்கவேலரின் அண்ணன்) அப்போது அர்பன் வங்கியின் தலைவர். அந்த வங்கியில் அண்ணா அவர்களின் நிலத்தை (காஞ்சீபுரத்துக்கு அடுத்த தேனம்பாக்கம் எனும் கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் பூர்வீக நன்செய் நிலம்) வங்கியில் வைத்து ரூ.500 கொடுத்து திராவிட நாடு இதழ் தொடங்கிட உதவினார் என்று தொத்தா என்னிடம் (அரங்கண்ணலிடம்) சொல்வார்கள். அடிக்கடி பொன்னுசாமி முதலியாரை நான்றியோடு நினைப்பபார்கள். திராவிடநாடு இதழ் நன்றாக நடைபெறுகிறது என்றும், தன்னிடம் விற்றுவிடுமாறும், தான் ரூ.2,500 தந்துவிடுவதாகவும், தன் மனைவி ஆதிலட்சுமியை ஆசிரியராகப் போட்டுக்கொள்ளுமாறும், மாதாமாதம் அண்ணாவுக்கு ஒரு தொகை தந்துவிடுவதாகவும் அ.க.தங்கவேலர் முன் வந்ததாகவும், அண்ணா ஒரு புன் சிரிப்போடு அதை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தொத்தா அடிக்கடி என்னிடம் சொல்வார்கள்.
(இராம. அரங்கண்ணல்)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai