அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 28

கங்கையின் மழலை! - அண்ணா
எழும்பூரில் இரவு 9.40க்குப் புறப்படும் வணிடியில் புறப்படவும், அந்த வண்டி கும்பபோணத்துக்குக் காலையில் 7-மணிக்கு வருகிறது. நான் இரயிலுக்கு வந்திருக்கிறேன். இரயில் தவறிவிடப் போகிறது. 9.40க்கு வண்டி புறப்படுகிறது. 9-க்குள் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுவிடுங்கள்..அன்பர், குடந்தை கே.கே.நீலமேகம் இதுபோன்ற பல கடிதங்கள் எழுதியிருப்பார் எனக்கு. கடிதத்தைப் படிக்கும்போது முதலிலே எனக்குச் சிரிப்பும் பிறகு திகிலும்வரும். இவ்வளவு விளக்கமாக எழும்பூரில் வண்டிபுறப்படும நேரத்தைக் கும்பபோணத்திலிருந்து எழுதுகிறாரே என்று சிரித்துக்கொள்வேன். ஆமாம் இவ்வளவு விளக்கமாக அவர் எழுதியும் வண்டி தவறிவிட்டால் என்ன செய்வது என்று திகில்கொள்ளுவேன். பலமுறை இரயில் தவறியதுண்டு. வழியும் தவறியதுண்டு. எனது வாழ்க்கை எண்டி எப்படி வளைந்த தண்டவாளங்களின் மீது ஓடுகிறதோ அத போலவே பெரும்பாலும் எனது ஊர்ப் பிரயாணங்களும்! இத்தகைய எனக்கு உடனே புறப்பட்டு அரித்துவாத்தில் வந்து என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள் என்று பெரியார், சண்டே அப்சர்வர் ஆசிரியரிடம் தகவல் அனுப்பினார், டில்லியிலிருந்துகொண்டு. பம்பாயில் தோழர எஸ்.முத்தய்ய முதலியார் அவ்ரகளின் தலைமையிற் கூடிய நேஷனல் டிமோகிராடிக் மாநாட்டுக்குச் சென்றிருந்த பெரியாரை, தோழர் எம்.என்.ராய், வடநாடு சுற்றுப்பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நான் உடனிருக்க வேண்டுமென்று விரும்பி பெரியார் அனுப்பிய அன்பழைப்பு எனக்கு அச்சத்தை உண்டாக்கிவிட்டது. நாம் எங்கே, அரித்துவாராம் எங்கே! இரயிலில் இடம் கிடைப்பதேது? கிடைத்தாலும் டில்லிபோய், அங்கிருந்து வேறு வண்டி பிடித்து அரித்துவாரம் வரவேண்டுமே, அந்தக் கஷ்டம் வேறு என்று எண்ணினேன். மணவறைக்குப் புது பெண்ணைத் தைரியங்கூறி அழைத்து வறுகிறார்களே, வைதிகக் கலியாணங்களிலே, அது போல நண்பர்கள் தைரியமளித்தனர்! சிலர் புத்தகம்! சிலர் பழம்! சிலர் வெற்றிலைபாக்கு! பலர் தமது புன்சிரிப்பு ஆகியவைகளை அளித்தனர் வண்டி நகருமுன்பு சென்னை சென்ட்ரலில் தோழர் எஸ்.குருசாம் மூன்று சாத்துக்குடிகள் தந்தார்! அவற்றை வண்டியில் சாமான் வைக்கும் இடத்திலே வைக்க எழுந்தேன். ஏற்கனவே காலை ஓரளவு நீட்டிப் படுத்துக்கொண்டிருந்த இஸ்லாமிய சிப்பாய் காலை பூராவும் நீட்டிவிட்டார். வண்டி நகர்ந்தது. நண்பர்கள் மலர்ந்த முகத்துடன் செலவு தந்தனர். சிப்பாயின் காலுக்கும், மறுபக்கத்துப் பிரயாணி வைத்திருந்த பெட்டிக்கும் இடையே கிடைத்த சிறு இடத்தில் உட்கார்ந்தேன். இது இண்டர்கிளாஸ் வண்டியின் இலட்சணம்! வண்டி செல்லச் செல்ல சிப்பாயின் நீட்டிய கால்கள் மடங்க ஆரம்பித்தன. சில ஸ்டேஷனுக்குப் பறிகு இருவருமாகச் சாயா சாப்பிட்டோம். அவர் தமது மலாய் நாட்டு அனுபவங்களை உடைந்த ஆங்கிலத்தில் கூறினார். இருவரும் நண்பர்களானோம். டில்லிபோய்ச சேர்ந்தேன். இடையே என்னென்ன கண்டீர்கள், ஒரே அடியாக டில்லி போய்ச் சேர்ந்தேன் என்று கூறிவிட்டீரே என்று தோழர்கள் கேட்பர். புறப்பட்டோம், போய்ச் சேர்ந்தோம் என்றிருக்கக் கூடாதா, எவ்வளவு நேரம் இரயிலில் இருப்பது மணிக்கணக்குப் போய், நாட்கணக்கில் வந்து விடுகிறதே, என்று சலிப்புத் தோன்றம்படி, இரயில் மூன்று நாட்கள் ஓடி, மனித மூட்டைகளை (ஆம்! அந்த ஸ்திதிக்குப் பெரும்பாலான பிரயாணிகள் வந்துவிடுகின்றனர்) டில்லியில் தள்ளுகிறது இரயில்வண்டி. ஆகையால், எழுதும்போதாவது சென்னையில் புறப்பட்டேன் டில்லிபேய்ச் சேர்ந்தேன் என்று இருக்கட்டும் என்று எண்ணியே இடையே நடந்த சம்பவங்கள், நினைவுகள் ஆகியவைகள் பற்றி எழுதவில்லை. உங்களுக்கு தெரியாதா, நீண்ட பயணத்திலே நேரிடக் கூடிய நவரசங்கள்!

டில்லியில் ஒட்டலில் தங்கினேன் - சென்னைப் பார்ப்பனருடையது - டில்லி செகரடேரியட்டில் வேலையில் உள்ள பல சென்னைவாசிகள் (வழக்கப்படி அங்கிரகார சொரூபங்களே அதிகம்) அந்த ஓட்டலில் வருவதும் போவதுமாக இருந்தனர். சிலர் அங்கேயே தங்கியுமிருந்தனர். காலையில் போனேன் டில்லிக்கு. இரவு புறப்பட்டேன் அரித்துவாரத்துக்கு. மறுதினம் காலையில் அரித்துவாரம் சேர்ந்தேன். இடையே தூங்கவில்லை, தூங்கியிருந்தால், அரித்துவாரம் என்னை வந்தெழுப்பி, இறங்கு என்று கூப்பிட்டா இருக்கும்!

இந்த வாழ்க்கையை மாயமென்று எண்ணி, பிறவியைச் சுமை எனக் கருதிக் கெண்டு, எப்படியாவது விரைவிலே இறைவன் திருவடி நிழலில் இரண்டறக் கலக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்ளும் இயல்புடையவர்கள், மோட்ச சாம்ராச்யத்தில் சீட் ரிசர்வ் செய்யவும், பாவங்களைக் கழுவவும், புண்ணியத்தைத் தேடவும், புராணிகர்கள் கூறியுள்ளபடி பல ஷேத்திரங்களுக்குச் செல்கிறார்களல்லவா! பரிதாபம், அவர்கள் ஏனோ வாழ்க்கையைக் கண்டு இப்படிப் பயப்படுகிறார்கள்! மானிடப்பிறவிகள், மகத்தான் எவ்வளவோ பணிகளை மக்களக்காற்றி, உலகைப் புன்னகைப் பூந்தோட்டமாக்க எத்தனையோ விதத்திலே உழைக்கவேண்டியதிருக்க, காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்று கருதிக்கொண்டு கதறுகிறார்கள். செடிகொடி, மிருகங்கள் முதலியன மானிடருக்குப் பயன்தரும் அளவுக்கு, மானிடர் மானிடருக்குப் பயன்பட்டால், அவர்கள் தேடித்தேடி, கால்களம் நோகுதே கடும்பசி ஆகுதே என்று பாடி, எந்த மகேஸ்வரனைக் காண, யாத்திரை, பூசை, ஆராதனை அபிஷேகம், பாராயணம் பஜனை போன்றவைகளைச் செய்கினறனரோ, அந்த மகேஸ்வரன், நான் பூலோகத்திலேதான் இனிவசிப்பேன், என்று கூறிவிடத்தக்க அற்புதமான நிலை, இலகில் ஏற்படும். ஆனால் புல் பூண்டு பய்னபடும் அந்த அளவுக்குக்கூட மனிதர் மற்ற மனிதருக்குப் பயன்படத்தக்க முறை உலகில் இல்லை. அதுமட்டுமா? மனிதரை மனிதர் நிந்திப்பது, கெடுப்பது, எதிர்பபது, அழிப்பது, இவை நடக்கிறது. இத்தகைய கேடுகளைக் களைய தீர்த்தமாடி, திரப்பல்லாண்டு பாடி திவ்ய ஷேத்திர யாத்திரைகள் செய்வதல்ல வழி. வாழ்க்கை மாயம் என்றுரைக்கும் வறட்டுப் பேச்சு ஒழிக்கப்பட்டு, வாழ்க்கை பலருக்குப் பாலைவனமாகவும், சிலருக்கு மட்டுமே சிங்காரத் தோட்டமாகவும் இருக்கிறதே அந்தக் கொடுமையைப் போக்கவேண்டும். அது செய்யக் கங்கையில் மூழ்கி, காசியில் தொழுது மாசிலாமணியைக் காண்பதற்குக் கடுந்தவம் செய்வது வழியல்ல. பக்தி, அருளைத் தரும், செய்வோருக்கு என்பர் மதபோதகர்கள். ஆனால் இஒரு பக்தர் அருள்பெற்றால், அதனால் அமைத்துயிர்க்கும் அருள் கிட்டுமென்றுரைக்கவோ, அவனியில் உள்ள சீர்கேடுகள் அழிந்துபட்டு சாந்தமும் சுபீட்சமும பெருகிவிடும் என்றோ கூறுமுடியாது.
(அண்ணா - திராவிடநாடு - 05.04.1942)


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai