அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 23

1947 ஆகஸ்டு 15

இந்தியத் துணைக் கண்டத்தை - இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கு 1947 ஆகஸ்டு 15-ல் விடுதலை வழங்குவது என்று பிரிட்டிஷ் வல்லரசு முடிவு செய்து அதனை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சினரும், முஸ்லீம் லீகினரும் அந்த முடிவை முழுமனதோடு வரவேற்றனர். நாட்டிலுள்ள பிற பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சார்ந்தோரும், பொது மக்களும் இந்தியத் துணைக் கண்டத்திற்கக் கிடைக்கும் விடுதலையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றவில்லை; திராவிடக் கழகம் மட்டுமே இருந்துவந்தது. கழகத்தினர் எல்லோரும் ஆகஸ்டு 15-ம் நாளை வரவேற்பதா? அல்லது வெறுப்பதா? என்ற குழப்பமான நிலையில் இருந்தனர். அப்பொழுதி திராவிடக் கழகத் தலைவராக இருந்த பெரியார் இராமசாமி அவர்கள், கழகச் செயற்குழுவைக் கூட்டாமல், கழக முன்னணியினர் யாரையும் கலக்காமல், ஆகஸ்டு 15-ம் நாளைத் துக்க நாளாகக் கொள்ளும்படி அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.

ஆகஸ்டு 15ஆம் நாளில் நடைபெறுவதாக இருந்ததெல்லாம், இந்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெள்ளை ஏகாதிபத்தியம் விலகுவது என்பதும், இந்திய யூனியன் ஆட்சிப் பொறுப்பைப் பெரும்பான்மையான அரசியல் கட்சியான காங்கிரசு ஏற்பது என்பதும் ஆகும். இவற்றில் முக்கியமான நிகழ்ச்சி வெள்ளை ஏகாதிபத்தியம் விலகுகிறது என்பதுதான். அந்த நிகழ்ச்சியைப் பொறத்ததுத்தான் பிற நிகழ்ச்சிகளெல்லாம். வெள்ளையர் விட்டுப்பொகும் பொறுப்பை, ஏற்கும் சூழ்நிலையைக், காங்கிரசைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அப்போழுது உருவாக்கவில்லை. காங்கிரசு பொறுப்பை ஏற்பது என்பது அப்பொழுது தவிர்க்க முடியாததொரு சூழ்நிலையாகும். ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரசிடத்தில் விட்டுப்போவதா என்பதுதான் அப்பொழுது நிலவிவந்தநிலைமையாகும். இவற்றையெல்லம் நன்கு ஆராய்ந்து பார்த்த அறிஞர் அண்ணா அவர்கள், வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது என்பது, உடனடியாக நிறைவேறவேண்டிய தலையாய நிகழ்ச்சியாகும் என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தார்கள். காங்கிரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பது விரும்பத்தகாததொன்று என்றாலும், அது தவிர்க்க முடியாததொன்றாக இருந்ததாலும், என்றைக்கேனும் ஒரு நாளைக்கு பிற முற்போக்குக் கட்சிகள் அந்தப் பொறுப்பை தாங்கும் நிலைமை ஏற்பட வழியிருந்த காரணத்தாலும வெள்ளையர் ஆட்சி வெளியேறுவது எல்லா வகையிலும் வரவேற்க வேண்டியதொன்றே என்று அறிஞர் அண்ணா அவர்கள் எண்ணினார்கள்.

மேற்கண்ட அந்த முடிவோடு அண்ணா அவர்கள் சென்னை வந்து, செம்புதான் நேரு, 79-ஆம் என் கட்டிடத்தில், 30ஆம் எண் அறையில் இருந்த தோழர இரா. நெடுஞ்செழியன், இரா.செழியன், ப.வாணன் ஆகியோரைக் கலந்தாலோசித்தார்கள். வெள்ளையர் ஆட்சி வெளியேறுவதிலே நமக்குள்ள மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் கடைசி வாய்ப்பு 1947 ஆகஸ்டு 15 ஆம் நாளே ஆகும். ஆகவே அதனை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொள்ளவேண்டும் என்று அவர்கள் அணணாவிடம் தெரிவித்தார்கள்.

ஆகஸ்டு 15 துக்கநாள் அல்ல, மகிழ்ச்சிக்குறிய நாளே என்ற கருத்தைப் பெரியாரிடம் தெரிவித்து அதற்காக முறையில் அவரிடம் விளக்கந் தந்து, எல்லோரும் கலந்து செய்யும் முடிவு ஒன்றினைக் காணவேண்டும் என்று விரும்பி அண்ணா அவர்கள், பெரியாரிடம் ஒரு நண்பரை இது குறித்துத் தூது அனுப்பினார்கள். பெரியார் அவர்கள், தாம் செய்துகொண்ட முடிவை மீண்டும் பரிசீலிக்க இணங்கவில்லை என்று அண்ணாவுக்கு விலை வந்து சேர்ந்தது. பிறகு வேறு வழியில்லாமல் அறிஞர் அண்ணா அவர்கள் ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாளே என்னும் கருத்துப்பட நீண்டதொரு கட்டுரை எழுதி திராவிட நாடு இதழில் வெளியிட்டார். அதில், கழுகத் தலைவர் தம்மீது குற்றங் கண்டு நடவடிக்கை எடுக்க முனைந்தாலும், அதனை ஏற்கத் தாம் கயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்களின் முடிவே சரியான அறிவுக்கொத்த முடிவு என்று ஆன்றோராலும் சான்றோராலும் அன்றும் போற்றப்பட்டது; இன்றும் பொற்றப்படுகிறது.
(மன்றம்: 01.05.1956)

தூத்துக்குடி மாநாடும் ஈரோடு மாநாடும்

1947 ஆகஸ்டு 15ஆம் நாள் வெள்ளையர் ஆதிக்கம் வெளியேறிய நாளாதலால், அது மகிழ்ச்சிக்குரிய நாளே என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூற, காங்கிரசால் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் அது துக்கத்திற்குரிய நாளே என்று பெரியார் இராமசாமி அவர்கள் கூற அப்பொழுது கழகத்திதோழரகள் கருத்தில் இரு வேறு பகுதியினராக பிரிந்தனர். பெரியார் கூறினாலும் அதைப் பற்றிச் சிந்தித்து அதில் தெளிவு பெற வேண்டும் என்று கருதினவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் கூற்றையும், பெரியார் கூறிவிட்டதால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதினவர்கள் பெரியார் அவர்கள் கூற்றையும் ஆதரித்து நின்றனர். அண்ணாவைப் பின்பற்றுவோர், பெரியாரைப் பின்பற்றுவோர் என்று இரண்டு பிரிவினராகக் கழகத் தோழர்கள் பட்டும் படாததுமாகப் பிரிந்திருந்தனர்.

1948 இரடப்பகுதியில் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாடு கூட்டப்பெற்றது. பெரியார் அவர்களே முன்னின்று மாநாட்டிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். அண்ணாவும் அவரைச் சார்ந்தோரும தம்மைக் கவிழ்க்கத் திட்டம் போட்டிருப்பதாகவும், அவர்கள் மாநாட்டிற்கு வந்து குழப்பம் செய்ய இருப்பதாகவும், அவர்கள் குழப்பம் செய்யும்போது தம்ப் பின்பற்றுவோர் அடி, உதை ஆகியவைகளை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும் என்றும் பெரியார் அவர்கள் மாநாட்டிற்கு முன்பு பொதுக் கூட்டங்களில் பேசியும், விடுதலையில் எழுதியும் வந்தார்கள்.

இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு பேசியும், எழுதியும் வந்த பெரியாரின் கோக்கைக் கண்டு மனம் வருந்திய அண்ணா அவர்களும் அவரைச் சார்ந்த பிறரும் மாநாட்டிற்குப் போகாமல் இருந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு வந்தனர். மாநாட்டில் கூடியிருந்த மக்களில் பெரும்பாலோர் அண்ணாவின் வரவை எதிர்பார்த்திருந்த தன்மையும் அண்ணா ஏன் வரவில்லை? என்று பலர் கேட்ட கேள்வியும் பெரியார் அவர்களுக்கு பொறாமையையும், எரிச்சலையும், சினத்தையும் மூட்டிவிட்டன. அது காரணமாகப் பெரியார் அவர்கள் மாநாட்டில் பேசம்போது அண்ணாவைக் கண்டவாறு இழித்துக்கூறவும் செய்தார்கள்.

மாநாடு முடிந்ததற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுவோர், அறிஞர் அண்ணாவையும், அவரைப் பின்பற்றுவோரையும் கண்டகண்ட இடங்களில் ஏசவும், தூற்றவும், வெறுக்கவும் தலைப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாகக் கடமையைய் ஆற்றி வந்தார்கள்.

பிறகு 1948 ஆகஸ்டு திங்கள் வாக்கில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மூண்டது. அறிஞர் அண்ணா பிறரும் தீவரப் பங்குகொண்டனர். கிளர்ச்சியின் படைத் தலைவராக அண்ணா அவர்கள் பொறுப்பேற்றார்கள். பெரியார் அவர்கள் அண்ணாவிடம் நெருங்கிய தொடர்பும், மிக்க பற்றம் வைக்க முற்பட்டார்கள்.

அதே ஆண்டில் தூத்துக்குடி மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் வராததனால் ஏற்பட்ட குறையைப் போக்கப், பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனி மாநில மாநாடு ஒன்றைக் கூட்டி, அதற்கு அண்ணா அவ்ரகளை தலைமை தாங்கும்படி செய்தார்கள்.

பெரியார் போக்கு அண்ணாவிற்குப் பல தடமைகளில் மனக்கசப்பை உண்டாக்கியிருந்தாலும், கடமையாற்ற கழகம் அழைக்கும்போதெல்லாம் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னணியில் நின்றே பணியாற்றி வந்திருக்கிறார்கள். எனவேதான் தூத்துக்குடி மாநாட்டிற்குக் கண்ணியம் காரணமாகச் செல்லாத அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோடு மாநாடு கடமை காரணமாக வருந்தி அழைத்தது.
(மன்றம், 15.05.56)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai