அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 19

டி.ஏ.வி.நாதன் எனும் எனது நண்பரும், சன்டே அப்சர்வர் ஆசிரியரும், என்னை ஜஸ்டிஸ் கட்சிக்கு இழுத்துச் சென்றவருமான பி.பாலசுப்பிரமணியமும், ஜஸ்டிஸ் இதழில் வெளுத்து வாங்கினார்கள். திலகர் சுயராஜ்ய நிதி மோசடி பற்றி. (அறிஞர் அண்ணா - 05.02.1956)

தந்தை பெரியார் ஒருவர்தான் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர் என்ற என்னுடைய முடிவை மாற்றி அமைத்தது ஒரு நிகழ்ச்சி.

இந்து மகா சபைத் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி தந்தை பெரியாரைச் சந்திக்க திருச்சிக்கு வந்திருந்தார். இந்து மகாசபையின் தமிழ்நாட்டுத் தலைவர் டாக்டர்.வரதராசுலு நாயுடு, அங்கிருந்த அனைவரையும் முகர்ஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாவை அறிமுகப்படுத்தியபோது ழந ளை ஆச.ஹயேனரசய, வாந செய டிக வாந யீயசவல என்றார். இவர்தான் அண்ணாதுரை - கட்சியின் மூளை. அவர் அதை கூறிமுடித்தபோது என் உடலில் குருதி குதிரை போல ஓடுவதை உணர்ந்தேன். தலைவரை எதிரில் வைத்துக் கொண்டு அவருடைய தளபதியைக் கட்சியின் மூளை என்பது . . . அதுவும் அவருடைய நெருங்கிய நண்பரே கூறுவது . . . பெரியாரிடம் சினத்தை எதிர்பார்த்தேன்; அவர் சிரித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அண்ணா என்னுடைய ஆராய்ச்சிப் பொருளானார்.
(தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்)

1948 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மறியல் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. அப்போதெல்லாம் மறியல் என்றால், போலீசார் கழகத் தோழர்களை லட்டியால் நாயை அடிப்பது போல் அடித்து லட்டி சார்ஜ் செய்வார்கள். அந்தக் காட்சி கொடுமையின் சிகரமாகவே காணப்படும். கையொடிந்தவர்கள், காலொடிந்தவர்கள் தலையிலடிப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் கழகத் தோழர்கள் நரபலி இடுபவர்களைப் போலக் காணப்படுவர். போலீஸ் வேலையே இதுதான். இந்தி எதிர்ப்பு மறியலில் (1948-ல்) இந்தக் காட்சி நாள்தோறும் நடப்பதை அறிஞர் அண்ணாவால் தாங்கமுடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தஞ்சை மாவட்ட போலீஸ் பெரிய அதிகாரியாக இருந்த ஆதித்தன் என்பவர்தான் என்பதை அண்ணா அறிந்தார்.

பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் இந்தப் பிரச்சினையை லட்டி சார்ஜ் இல்லாமல் எப்படி நடத்துவது என்று சிந்தித்து பேச முற்பட்டார்கள். நீண்ட நேர பேச்சுக்குப்பிறகு, அண்ணா அவர்கள் நாளைய இந்தி எதிர்ப்பு மறியல் பெண்கள் ஈடுபடச் செய்யலாம். அப்போது போலீசார் லட்டி சார்ஜ் செய்யமாட்டர்கள் என்று அய்யாவிடம் கூறினார். பெரியார் இதற்கு சம்மதிக்கவில்லை. பெண்களை எப்படி இவ்வளவு பகிரங்கமாக மறியலில் ஈடுபடவைப்பது? ஆதித்தன் என்கின்ற போலீஸ் அதிகார் இரக்கமே இல்லாமல் பெண்கள் மீதும் லட்டி சார்ஜ் நடத்தினால் நாளை பழிச்சொல் அல்லவா ஏற்படும என்றார் பெரியார்.

இறுதியில் அண்ணா அவர்களின் யோசனையைப் பெரியார் ஏற்றார். பெண்கள் நாளை மறியலில் ஈடுபடுவர் என்றும், அதற்கு மறு நாள் பெரியாரும் அண்ணாவும் மறியலில் தலமை வகிப்பர் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

உடனே அண்ணா அவர்கள் ஆதித்தன் கனவு படமல்ல பாடம் என்ற தலைப்பில் தனது பத்திரிக்கையில் (திராவிடநாடு - கிழமை இதழ்) தஞ்சை மாவட்ட பெரிய போலீஸ் அதிகாரியின் கொடுமைகளை விளக்கி எழுதினார். அந்த நேரத்தில் ஆதித்தன் கனவு எனும் மார்டன் தியேட்டர்ஸ் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. தன்னைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த அந்த அதிகாரி பெண்கள் மறியலில் ஈடுபட்ட அன்று லட்டி சார்ஜ் செய்வதை நிறுத்தினார்.

மறுநாள் அறிஞர் அண்ணாவும் பெரியாரும் மறியலில் ஈடுபடும் நிலையும் உருவாகாமல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஓமந்து இராமசாமி செட்டியாரும் பெரியாரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்தி எதிர்ப்பு மறியலும் நின்றது.
----------

அறிவுலக் மேதையிடம் மற்றோர் முறை உரையாடும்போது சுவையானதோர் சம்பவத்தைக் குறிப்பிட்டார். ஒரு முறை ஜனாப் ஜின்னா பேசும் கூட்டம் ஒன்று சென்னை கோகலே மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டபம் நிறைய மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பம் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. சரியாக காலை 9 மணி 57 நிமிடத்திற்கு ஜனாப் ஜின்னா அவர்களின் நேர்முக உதவியாளர் ஒருவர் மேடைமீது ஏறி ஜின்னா வேறு ஒருவர் அறுவல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிணயிருப்பதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்துவிட்டு இறங்கிப் போய்விட்டது.

பெருவாரியாக குழுமியிருந்த முஸ்லீம் பெருமக்களம், மற்றவர்களும் அமைதியாக கலைந்து சென்றுவிட்டார்கள். பெரியாரும், அண்ணாவும் தம் இருப்பிடத்திற்குத் திரும்பிவிட்டார்கள். பெரியார் தனது அறைக்குள் நுழைந்ததும் கைத்ததடியை பலமாக வீசி எறிந்தாராம். ஏன் இப்படி ஐயா செய்கிறார் என்று அண்ணாவுக்குப் புரியவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அண்ணா கேட்க, அதற்குப் பெரியார் இதைப் பாருங்கள் எல்லோரும் மண்டபத்தில் கூடியிருக்கிறோம். அந்தச் சமுதாயத் தலைவன் என்று கருதப்படும் ஜின்னா வரவில்லை என்று எவனோ ஒருவன் வந்து சொல்லியுதும் அமைதியாக முஸ்லீம் மக்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். இப்படி நாம் செய்தால் நம் கழகத் தோழர்கள்தான் சும்மா விடுவார்களா? முஸ்லும் மக்களின் ஒற்றுமையைப் பார்த்தீர்களா? எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாம் இப்படி செய்தால் என்று அண்ணாவைக் கேட்டாராம். என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று அண்ணா கேட்டவுடன்,

நாம் முஸ்லீம் மதத்தைத் தழுவிவிட்டால் என்ன? அப்போதுதான் திராவிட சமுதாயத்திற்கு விழிப்புணர்ச்சி ஏற்படும் - ஒரு வழி ஏற்படும் என்றாராம். அதற்கு அண்ணா அவர்கள் பெரியாரிடம் நாம் முஸ்லீம் மதத்தை தழுவிக்கொள்வதில் யாதொரு ஆட்சேபமும் இல்லை. நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்ற உறுதிப்பாட்டை நமது மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது ஐயத்துக்குறியது. நாம் அந்த மதத்தைத் தழுவாமலே அம்மதத்தினுடைய மேலான கொள்கைகளை ஏற்று பரப்பிக்கொண்டுவந்தால் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டு மதத்தை தழுவும் முயற்சி தேவையில்லை என்று அண்ணா சொல்ல, பெரியாரும் சமாதானமானாராம்.
(சி.எஸ்.பூஞ்சோலை - அண்ணாவின் நண்பர் - காஞ்சீபுரம்)


அரித்துவாராம் திவ்ய ஷேத்திரங்களில் ஒன்று! அதைக்காண கங்கையில் மூஷ்கி கதி நல்லதாகுக என வேண்ட பலப்பல ஆயிரம் மக்கள் ஆண்டுதோறும் வரும் இடம் அரித்துவாரம். ஊரிலே முக்கால் பாகம் சத்திரம் மக்களில் பாதிபேர் பண்டாக்கள். நமது தமிழகத்தார் கட்டியுள்ள சத்திரங்களும், ஆங்குள்ள பிற நாட்டவரின் பெரும் பெரும் கோட்டை அவர்கள் போற் மதில்கள் கொண்ட பழைய சத்திரங்களம் பல உள. காவி உடை கமண்டலமேந்திய கரங்கள், சடைமுடிதாரிகள், பட்டை நாமங்கள், உடல் முழுதும் நீறு பூதியோர், உடல் முழுதும் ஊண்பொதியர்களாக உல்லாச உபசிகள், ஆகியோரை, அரித்துவாரத்தில் சதா, காணலாம். அவர்கள் அவ்வளவு கம்பீரமாகவும், கவலையற்றும் கோயில் மாடுகள் வீதிகளில் உலவும். குரங்குக் கூட்டமோ அதிகம். கொசுத் தொல்லையும் அப்படியே, கும்பமேளாவுக்கு வரவேண்டும் இங்கு கூடும் சனங்களைக் காணவேண்டும் என்று பெருமையோடு கூருவார்கள், அரித்துவாரவாசிகள். அத்தகைய அரித்துவாரத்தில் பெரியாரைத் தேடிக்கொண்டு நான் சென்றேன். அவர் எங்கு தங்கியிருப்பதாக எனக்குத் தகவல் தரப்பட்டதோ அந்த விலாசம் விளக்கமற்றிருந்ததால் நான் வீதி பல சுற்றினேன். பல சாதி மக்களைக் கண்டேன். ஒவ்வொருவரும் இப்போதோ, அடுத்த வினாடியே இந்த உலகை விட்டு நீங்கிவிடவேண்டும் என்று திடமான எண்ணணம் கொண்டவர்கள் போலவே, அவசர அவசரமாக கங்கைக்குப் போவதும், முழுகியானதும் ஆடை உலராமுன்னம் பண்டாக்களின் பாதத்தை கும்பிடுவதுமாக இருந்தனர்.

மராட்டியத் தோழரொருவர், இடையே என்னைக் கண்டார். ஆங்கிலத்தில் பேசி அவரிடம் ஒரு ஏற்பாட்டடுக்கு வந்தேன். முதலிலே மராட்டியச் சத்திரத்திற்குப் போவது, சாமான்களை அங்கே வைத்துவிடுவது, சா சாப்பிடுவது பிறது டாஸ்கா பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றுவது விலாசதாரைக் கண்டுபிடிப்பது இது அவர் ஏற்பாடு. செலவு முதலிலே அவர் பேச்சின்படி ஒன்றும் கிடையாது தர்ம சக்கரம், கைங்கரியம் என்றார். முடிவிலே ஒரு முழு ரூபாய். ஆனால் அவர் தந்த சா வை நான் இப்போது ஒன்பது முழு ரூபாக்கள் கொடுத்தாலும் கொடுத்தாலும் பெறமுடியாது. புனாவிலிருந்து அங்கு வந்திருந்த குடும்பத்தாரிடம், சென்னையிலிருந்து ஒரு பக்தர் வந்திருக்கிறார். பசி, ஆகவே சா கொடுத்தால் புண்ணியம் என்று கூறி சா வாங்கிக் கொடுத்தார். என்னிடம் மிகப் பழைய அந்தச் சத்திரத்தின் மேன் மாடியில் ஒரு அறைக்கள் நின்றுகொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சத்திரத்தின் சுவரை முத்தமிட்டுக்கொண்டு கங்கை செல்கிறது. அதைக் காப்பதுதான் கடன் என்று கருதிக்கொண்டிருப்பதுபோல் மறுகரையில் மா, பலா முதலிய மரங்கள் அடர்ந்த சாலை. அந்தச் சாலைக்க அரண்கள்போல், சிறுசிறு குன்றுகள். அவைகளைத் தமது செல்லப்பிள்ளைகள் என்று கூறிக்கொண்ட நிற்பதுபோல பெரிய மலைகள். அந்த மலைகளை மேடையாக்கிக்கொண்டு நர்தனம் புரிவதுபோல, மேகங்கள், இதற்கு கீதம் போல் கங்கை பாய்வதில் ஒலி, இக்காட்சியை காணவந்த பெண்கள் போல, மரக்கிளையில் பச்சை நிறக் கிளிகள் பஞ்சவர்ணக்கிளிகள், நாடக மேடையில் காலரியில் அமர்ந்து தாளமிட்டும் ஆரபரித்தும் அட்டகாசம் செய்யும் உற்சாகத் தோழரகள் போல், குளிக்க வருபவர்கள் மந்திரமோதியும், துணி துவைத்தும் செய்யும் சத்தம். கட்டணம் தராததால் கொட்டகைக்கு வெளியே அமர்ந்துகொண்டு கற்களை வீசும் குறும்பர்கள் போல குரங்கினங்கள் குதித்தும், தாவியும், கீச்சிட்டும், கிளைகளை முறித்தெறிந்துகொண்டும், சேட்டைகள் செய்தன. கையில் இருந்த, சா ஆறிவிட்டது, குளிர்ந்த காற்று வீசினதால். ஆனால் சாவின் வெப்பம் ஆறிவிட்டதைவிட விரையிலே, பியாண அலுப்பினால் உடலிலும் உள்ளத்திலும் எனக்கிருந்த வெப்பம் தணிந்துவிட்டது. ஆகா, மேனாடுகளில் இத்தகைய இயற்கை எழில் நிரம்பிய இடம் இருப்பின் அது மன்னரும், மனோகரிகளும், மக்களும் குடும்பமும், நோயுற்றோரும், நொந்தோரும் சென்று தங்கி உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெறத்தக்க, சுக வாசஸ்தலமாக்கி சுவைப்பர். இங்கு அரித்துவாரம் மதவாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாதபாடுபடுகிறது. அதை காப்பாற்ற யார் முன் வருவார்கள்!
(திராவிடநாடு - இதழ் - 05.04.1942)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai