சிறப்புக் கட்டுரை


பொதுவாழ்வு ஒரு பொன்னேடு

அறிஞர் அண்ணா

தூக்குமேடை! கேலிச் சிரிப்பு காட்டினர்; கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை. அம் மாவீரர்கள் துணிவோடு ஏறினர். அவர்கள் கண்களிலே புது ஆவேசம் பிறந்தது. தூக்கு அவர்களது உயிரைப் போக்கியது. பிணமாயினர். ஆனால் அவர்களது புகழ்மணம், மறையவில்லை; மாறாக எங்கும் வீசலாயிற்று.

சித்திரவதை அவர்கள் சிந்தையைக் குலைக்கவில்லை. சிறிதும் தயங்கவில்லை. இதெல்லாம் வரும் என்று எதிர்பாத்தது போல அவர்கள் கண்களிலே புது ஒளி கிளம்பிற்றே தவிர, நீர் எழும்பவில்லை.

துப்பாக்கிகள் கர்ஜித்ததுண்டு பல முறை; ஆனால் குலைந்து போனதில்லை அந்த வெற்றிச்செல்வர்கள் வீரம். அவர்கள் இதயத்திலே விளையாடிற்று. மயங்கியதில்லை; தயங்கியதில்லை; மார்பைக் காட்டினர்.

தடியடி எத்தனையோ தடவைகளில். அவர்கள் தலைகளை உடைத்ததுண்டு. இரத்தத்தைக் கீழே ஓடச் செய்ததுண்டு.

நச்சுக் கோப்பைகள் ஒரு சமயம்; தீச்சுழல் வேறொரு நேரம்! சாட்டையடி, இன்னொரு வேளை! உயிரோடு சாவுக்குழியில் தள்ளப்பட்ட கோரம் மற்றொரு நேரம்! மக்கள் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்காகக் கிளம்பியோர் பெற்ற, கொடுமைகளும் தீங்கும் பலப்பல காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றபடி. அவர்கள் உடலையும் உள்ளத்தையும் அவர்தம் கொள்கைகளை வெறுத்தோரும் ஆள்வோரும் செய்த கொடுமைகள் ஒன்று இரண்டல்ல!

சமுதாய சீரமைப்புக்காக, சுய வாழ்வை ஒதுக்கி, பொது வாழ்விலீடுபட்ட அப்போர் வீரர்கள் ஆங்காங்கு அனுபவித்த கொடுமைகள் உலக வரலாற்றைப் பார்ப்போரின் உள்ளங்களைக் குலுக்கும்.

அவ்வளவு வேதனைகள், அவ்வீரர்களுக்கேற்பட்டதுண்டு. அரசாங்கம் தந்த அரியணையின் மீது அமர்ந்தோர், ஒரு சமயம், அம்மாவீரர்களின் எதிரிகளாயிருப்பர். இன்னொரு சமயம், அம்மாவீரரின் பேச்சும் செயலும் பிடிக்காதோர், விரோதிகளாயிருப்பர். மதங்கள் ஒரு நேரம் பாயும்! பலிபீடங்கள் இன்னொரு நேரம் உறுமும்! அரசு அதிகாரம் மற்றொரு சமயம் தூக்குமேடை, துப்பாக்கி, தடியடி ஆகியவைகளைக் காட்டி கர்ஜிக்கும். ஆனால், இதையெல்லாம் கண்டு, பொதுமக்களுக்காக உழைக்க முற்பட்டோர் கலங்கியதில்லை மிரண்டோடியதுமில்லை.

சரியென்று நினைத்தமைக்காகப் போராடும்போது சாவு தடுத்ததில்லை அவர்களை. அதற்காகப் போராடிச் சாவதே தமது வீரத்துக்குக் கிடைக்கும் விருது என்று அவர்கள் கருதியதால்.

பசிக்கொடுமை தாங்க முடியவில்லை. உணவின்றி உலர்ந்த சருகுபோலானாள் மனைவி. அவளது கண்களோ கீழே செத்துக்கிடக்கும் குழந்தையை, கண்ணீரால் கழவிக்கொண்டிருக்கின்றன. அவனோ அருகே உள்ள மேஜையின் மீது அமர்ந்து எழுதுகிறான் கடிதம் - தனது நண்பனுக்கு. பாலில்லை எனினும் பசி தாங்காமல் என் குழந்தை தாயின் மார்பைச் சப்புகிறது. பாலிருந்தாலன்றோ அது வர! ஆனால் குழந்தை அதை எப்படி அறியும்! ஆவலோடு சப்புகிறது. பாலுக்குப் பதில் வறண்டுபோன என் மனைவியின் மார்பிலிருந்து இரத்தம் வடிகிறது. அதையும் விடவில்லை என் குழந்தை குடிக்கிறது! செத்தது! எவ்வளவு கொடுமை? நான் என்ன செய்வேன். ஏங்கெல்ஸ், அருமை நண்பா ஆறாத்துயரோடு நிற்கும் மனைவியின் கண்ணீர் என்னைச் சுடுகிறது. துடிக்கிறாள் அவள். நானென்ன செய்வேன்?

உலகின் பேரறிஞனாம் காரல் மார்க்ஸ், பட்ட கஷ்டங்களிலே ஒரு காட்சி இது.

இதுபோல, மக்கள் வாழ்வைப் பெரிதென மதித்து, தம்மை அதற்கு அர்ப்பணித்த வீராதி வீரர்களின் குடும்பங்களெல்லாம், வேதனையால் மூழ்குபவைதான். பட்டினிக் கொடுமையும் பணத் தொல்லையும், உற்றார் தூற்றலுர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கிடந்ததுண்டு.

ஒரு பக்கம், தனது கொள்கைகளை எதிர்ப்போரும் மறுப்போரும் விரோதிகளாயிருப்பர்!

இன்னொரு பக்கம், குடும்பத்தில் புயல் வீசும்!

இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளித்தாலும் இலட்சிய வீரர்கள் ஏங்கியதில்லை; அடங்கியதில்லை அவைகளை நினைத்து.

மனைவியின் ஐயோ என்ற அழுகுரல்; மக்கள் எழுப்பும் வாழ்க என்ற முழக்கத்தால் மறைந்துவிடும். பட்டினிக் கொடுமை மக்கள் தன்னை ஆதரிக்கின்றனர் என்ற மகிழ்ச்சி முன் சிறு துரும்பாகிவிடும்.

பொதுவாழ்வு ஒரு சிலந்திக் கூடு. ஆனாலும் அதிலீடுபட்டோர் தளர்வதுமில்லை; அயர்வதுமில்லை.

உலகத்தை உற்றுப்பார்த்து, அதன் வேதனை தாங்காது அவைகளை ஒழித்து, நல்வாழ்வு காணவேண்டும் என்ற ஒரே எண்ணம் அவர்கள் உள்ளத்தில் குடியேறிவிடுவதால், அந்த எண்ணமே, அவர்களோடு இரண்டறப்பிணைந்துவிடுகிறது.

பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்தில் தாங்களும் ஒரு துளியாக, தங்கள் காலத்தைத் தள்ளிவிட்டுப் போவது என்பது கஷ்டமானதல்ல.

ஆனால் இலட்சிய வீரர்களோ, தம்மைப்பற்றி நினைப்பது இல்லை. நினைப்பதே தவறு. சமுதாயத்தை நினைத்துப் பிறகு தன்னை நினைக்கவேண்டுமென்பது அவர்கள் சித்தாந்தமாகிவிடுகிறது.

பொதுவாழ்வு மகிழ்ச்சி ததும்பும் மலர்த்தோட்டமல்ல; கொளுத்தும் வெய்யிலும், குமுறி வீசும் காற்றும் நிரம்பிய பாலைவனம்.

இது, அவர்களுக்கு, நன்றாகத் தெரியும். ஆனாலும் ஈடுபடுகிறார்கள் தொல்லைகளைப் பெரிதென மதியாது.

இலட்சிய வெறி கொண்டோர், இதுவரை ஆளாகியிருக்கும் கொடுமைப் பட்டியலைப்பார்த்தால், மிகப்பெரியதாகும்.

நமது வாழ்வைப் பொருட்படுத்தாது, சமுதாயத்தையே, பெரிதென எண்ணி, அதன் சுழற்சிக்குப் பலியானோர் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கிளியைத் துரத்துகிறது பூனை; கதறுகிறது அப்பைங்கிளி! காப்பாற்றுவது மிகவும் முக்கியம். தன்னைக் காப்பாற்ற வருவோரைக் கண்டு கிளி மகிழும். ஆனால் பூனை? கோர நகங்களால் பிறாண்டாமல் விடாதே! இதைப் போலத்தான் சமுதாயக் கேடுகளைப் போக்கும் எண்ணத்தோடு ஈடுபடுவோர் பெறும் பலனும்.

போக போக்கியங்களிலே புரளுவோரானாலும், குடிசைக்குள்ளே கொந்தளிக்கும் குடும்பத்தைப் பெற்றோரானாலும், பொதுவாழ்விலே ஈடுபட்டுவிட்டால், அவர்கள் ஒரே வரிசையில்தான் நிற்பார்கள்.

பணம் படைத்தவன், தனது பணிக்காக, அதிகப் பலனை எதிர்பார்ப்பதும், தன் குரலுக்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமென நினைப்பதும் வாழமுடியாத வறியோன் அவன். ஆகவே அவனுக்கு உரியது கொஞ்சம் பலன்தான். எனவே அவன் பேச்சு எடுபடவில்லை என்பதுமான வித்தியாசம் பொதுப்பணி கொண்டோரிடையிலே நிலவாது.

கிளியைப் பூனையிடமிருந்து விடுவித்துப் பறக்கவிடவேண்டும் என்று எண்ணுவோரும் உண்டு. அதே நேரத்தில் பூனையிடமிருந்து கைப்பற்றி தன் வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டுமென்று முனைவோரும் உண்டு.

இருவரும் கிளியை விடுவிக்கப் போராடினாலும், முதல் நபரே உண்மையுள்ளமும் நல்லெண்ணமும் கொண்டவரென மதிப்புப் பெறுவார்.

எனது பணியும் கிளியை விடுவிப்பது தானே என்று விடுபட்ட கிளியை வீட்டிற்குக் கொண்டுபோக எண்ணுபவன் கூறினால் அதை எவரும் ஒப்பார்.

துரோகி!

பொதுப்பணியின் பேரால் தன் வாழ்வை வளமாக்க நினைப்பவன்

சுதந்திரம் தரப்போவதாகச் சொல்லி, கிளியைத் தன் மகிழ்ச்சிக்காக எடுத்துக் கொண்டவன் என்ற பழியே பரிசாகக் கிடைக்கும்.

பொதுப்பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளைக் கூறினாலும் அது செம்பாகுமே தவிர, பொன்னாக மதிக்கப்படமாட்டாது.

வேதனைளைத் துச்சமென மதித்து, தூக்குமேடையும், துப்பாக்கியும் சீறியபோதும் சிந்தை கலங்காது, மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போராடுபவனே உண்மைத் தியாகி. அவனே மக்களின் இதயத்தில் மங்காத நிலவாவான்.

பொதுப்பணி, கஷ்டமானதுதான். ஆனால் அத்துன்பங்களைத் தாங்குவதில் இன்பம் உண்டு; கடலுக்குள் சென்று முத்தையெடுத்தபோது எழுவது போல்.

பொது வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள் மறைந்து போய்விட்டார்கள். ஆனால் அவர்களது பெயர்கள் உலகினர் நாவிலே நர்த்தனமாடுகிறது இன்றும்.

மனிதன் பிறக்கிறான் - வாழ்கிறான் - சாகிறான். அவன் சாவோடு, அவனுருவமும் அவனைப்பற்றிய நினைவும் அஸ்தமித்து விடுகிறது. ஆனால் மக்கள் நல்வாழ்வுக்காக, வீரச்சாவு பெற்றவன் பெயரோ என்றும் அழிவதில்லை.

உண்மைப் பொதுப்பணியாளனுக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசு இதுதான்!

பொதுவாழ்வுத் தோப்பில் இலையுதிர்காலம் மட்டும் ஏற்படுவதில்லை; கனி குலுங்கும் காலமும் தோன்றுவது உண்டு.

பொதுப்பணி புரிவோரின் உண்மையுள்ளமும் தூய்மை எண்ணமும் துலாக்கோல் ஏறும் சந்தர்ப்பம் அதுதான்!

காங்கிரசு அந்த தராசில் தன்னை ஏற்றி நிறுத்தியுள்ளது!

அதன் விளைவுகளைத்தான் இன்று காண்கிறோம்.

பொதுவாழ்வு காமவேள் நடன சாலையெனக் கருதியோரின் தொகை அதிகம். இன்று நிலைமை மாறியுள்ளது.

பொதுவாழ்க்கையில் மக்கள் மனதைக் கவரும் வகையில், பணி புரிந்துவிட்டு, பணியின் பலன் கிடைத்ததும், அதனால் தனக்கென்ன லாபம்? என்று கணிப்போரின் கதி இன்றைய காங்கிரசு போலத்தான் ஆகும்.

நல்லதுக்குப் போராடி அந்நன்மை கிடைத்ததும் அதைத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்தினால், பேரும் புகழும் மறைவது மட்டுமல்ல - மக்களின் கண்டனத்துக்கும் துரோகி என்கிற பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள்.

பொதுவாழ்வு இன்பம் தேங்கும் சுனையல்ல! ஆனால் தன் பெயரை உலகுள்ள மட்டும் பொறித்துக் காட்டும் பொன் ஏடு!
(பொதுவாழ்வின் சிறப்பு பற்றி அண்ணா)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai