"சுதந்திரம் அடைந்த ஒரு நாடு தன் நாட்டைக் காக்கவும், பேணி வளர்க்கவும் உரிமையுண்டு; அதில் மற்றொரு நாடு தலையிட்டு மிரட்டுவதற்கும், அழிக்க எண்ணுவதற்கும் எவ்வித உரிமையும் இல்லை. சுகர்ணோ போன்றவர்கள் ஒரு நாட்டின் அரசியலில், முன்னேற்றத்தில் தலையிடுவது அநாகரிகமாகும்" என்று அறிஞர் அண்ணா அவர்கள், விமான நிலையத்தில் மலேசிய வானொலி இந்திய நிருபருக்கு அளித்த பேட்டியில் விளக்கினார்.
அண்ணா அவர்கள் மேலும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறியதாவது:-
"இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் நல்ல நெருக்கமான தொடர்பு - உண்டு - உறவு உண்டு.
"இந்தியா மீது சீனர் படையெடுத்தபோது மலேசிய நாட்டின் தலைமையமைச்சர் துங்கு அவர்கள் ஆதரவு அளித்ததும் நிதியளித்ததும் இந்திய சரித்திரத்தில் என்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.
"இந்திய மக்கள் தலைமையமைச்சர் துங்குவின் பெருமையை, அரசியல் பெருந்தன்மையை நன்கு அறிந்துள்ளார்கள்."
வெளிநாட்டுக்கு வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு அண்ணா கூறியதாவது:-
மலேசிய நாட்டின் அரசியல் முறை, இங்கு வாழும் மக்கள் நிலை இவற்றை அறியவே மாணவன் என்ற முறையில் நான் இங்கு வந்துள்ளேன்."
மலேசியத் தலைமையமைச்சர் துங்குவைக் காண ஆவல் கொண்டுள்ளேன். சிறந்த தலைவரான அவரைக் காணப்பெற்றால் பேருவகை கொள்வேன்"