பினாங்கு நகராட்சியின் சார்பாக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 19.7.65 பிற்பகல் ஒரு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
விருந்துக்குப் பினாங்கு நகராட்சி மேயர் திரு.சி.எஸ்.சோய் தலைமை தாங்கினார்.
"மலேசியாவுக்கு நல்லெண்ணத் தூதுவராக வந்திருக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு.அண்ணாதுரை அவர்களை மனமுவந்து களிப்போடு வரவேற்கிறேன்" என்றார் மேயர்.
"மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையே கலாசாரச் சின்னங்களாக வந்திருக்கும் இவர்களை வரவேற்பதிலும் சிறப்பிப்பதிலும் இவர்கள் ஆற்றும் உரைகளைக் கேட்பதிலும் அக்கறை உடையவர்களாக இருக்கிறோம்.
"அண்ணாதுரை சிறந்த அறிஞர்; தலைசிறந்த எழுத்தாளர்; தத்துவஞானி; காந்தசக்தி கொண்ட சொற்பொழிவாளர்; சமுதாயப் புதுமைவாதி; தென்னாட்டு பெர்னாட் ஷா" என்று புகழப்படுபவர்.
இவ்வாறு அண்ணா அவர்களுக்குச் சொல்லாரம் அணிவித்து மேயர் அவர்கள், 'இலக்கியம், பொருளாதாரம், சரித்திரம், பூகோளம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அவர் சிறந்தவராக இருக்கிறார்' என்றார்.
கௌரவிப்புக்கு நன்றி தெரிவித்து அண்ணா அவர்கள் பேசினார்.
பாராளுமன்ற சனநாயகத்தைப் பற்றிப் பேசிய அவர், "மலேசியா - இந்திய உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட தொடர்பு இது; தொன்றுதொட்டு இருந்து வரும் கலை - கலாசாரப் பண்பாட்டுத் தொடர்பு நின்று நிலைக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு நாங்கள் தூதர்களாக வந்திருக்கிறோம்" என்றார்.