எந்தாய் நறு நாட்டின்
இன்னருமைச் சோதரர்கள்
நொந்தே யழிந்திருக்கும்
நோவிதனுக்கா யிரங்கிச்
சிந்தாத தேன் வார்க்கும்
சிந்தனைகள் செந்தமிழின்
கந்த மடை தான் திறந்து
சாய்த்திடுவான் காணீரோ!
பேச்சுக்கு ஒருகலைஞன்
பேசுங்கால் அதிரவரும்
ஏச்சுக்குப் பணிவறியா
எண்ணத்து ஒரு சிற்பி
விந்தையவன் உள்ளத்தே
விளைந்துவரும் எண்ணங்கள்
வந்தணையச் சொற்களெலாம்
வழிபார்த்து நின்றிருக்கும்
சொல்லின் சிலம்பசைத்தாற்
சோதி மணிப்பரல் சிதறும்
சொல்லிற்கருவுயிர்க்கும்
செம்பொருளிற் சொல்சிறக்கும்
பேச்சிற் கனலடிக்கும்
பெய்யுமழை காலிரங்கும்
வீச்சொன்றில் அறியாமை
விழும் அலறித்துடிக்கும்
கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே
காணுகின்ற காட்சிகளில்
கருதும் பொருள்களிலே
பேறமுயர் சிந்தனைகள்
பேசவரும் சித்திரங்கள்
அளந்து வரும் சொற்கள்
ஆழ்ந்த பொருள், இருளூடே
பிளந்துவரும் மின்வெட்டுப்
பேச்சுக் கொரு புலவன்
அண்ணாவென்றே இளைஞர்
அன்போடரு கணைவார்
பண்புடைய சொல் ஒன்றாற்
பச்சையன்பு பாய்ச்சிடுவார்
சிந்தனையே மாந்தர்க்குச்
சிறப்பருள்வ தாதலினால்
சிந்தனையும் சொல்திறனும்
சேர்க்குமவர்ப் போற்றுகிறோம்.
|