தம்பிக்கு அண்ணாவின் கடிதம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1
1

தம்பி!

குழல்மொழி, கயல்விழி, துடியிடை, புன்னகை பூத்திடும் பொன்னவிர் மேனியாள், ஏழிசைவல்லி, ஆடலழகி எனும் அணங்குகள், தத்தமது திறனத்தனையையும் தங்கு தடையின்றித், தரக்குறைவின்றிக், காட்டிப் பார்த்தனர் - காவலன், கடுகடுத்த முகத்தோனானானேயன்றிக் கலகலப்புப் பெற்றானில்லை.

மாற்றார்கள் களத்தில் போட்டோடிச் சென்று, மாமல்லர் களால் எடுத்துவரப்பட்ட, குருதிதோய்ந்த கொடிகள், உடைந்து கிடந்த யானைத் தந்தங்கள், வாட்பிடிகள், வேற்கம்புகள் இவையெல்லாம் கொண்டுவந்து எதிரே குவித்துக் காட்டினர், கோமான், வீரச்செயல் பற்றிய நினைவுபெற்று, மகிழ்ச்சிப் பெறுவான் என்று எண்ணி; மாமன்னனோ, அப்பொருட் குவியலைக் கண்டு புன்னகையும் செய்தானில்லை.

கன்னியரின் கடைக்கண் ஊட்டிடாத சுவையைக் கனிவகையா தந்திடும்! எனவே, பழவகைகளைக் கொணர்ந்ததும், பட்டத்தரசன், எட்டிப்போ! என்று கட்டளையிட்டான் பணியாட்களை நோக்கி.

மன்னன் மனமகிழ வேண்டும் - அவையினர் ஏதேதோ எண்ணினர்; தெளிவு பிறந்திடவில்லை.

தொகுதி மூன்று 103 "யானறிவேன், அவருக்குக் களிப்பூட்டும் வகை'' என்றால் கவிதை வல்லானொருவன்.

"ஐயா புலவரே! எதுகை மோனையைக் காட்டியா, மன்னனை மகிழ்விக்க முயல்கிறீர். வானவில்லென வளைந்து நின்றாள், வடிவழகி; மன்னன் ஏறெடுத்தும் பார்த்திட மறுத்தான். கரம் இரண்டன்றி வேறோர் துணை தேடிடாது, வேங்கையுடன் போரிட்டுக், கழுத்தை நெறித்தானே, வேங்கையை - வெற்றி வேலன் பெற்றெடுத்த வீரமைந்தன் - அதன் பற்களைக் கொட்டிக் காட்டினோம் - சுற்றுமுற்றும் பார்த்தானேயன்றி, மன்னன், அதனை உற்றும் பார்த்ததுண்டா? இந்நிலையில் உள்ளான் ஊராள்வோன்; நீவிர் ஏடு தூக்கிக் காட்டிடின் வேந்தன் கொண்டுள்ள கசப்பெலாம் கரைந்தோடிப் போகும், களிப்பு மலரும் என்று கருதுவது, எத்துணைப் பேதைமை!'' என்று எடுத்துரைத்தனர், அவை அமர்ந்த முதியோர்.

"ஐயன்மீர்! அருங்கவிதைத் திறன்காட்டி அல்ல, மகிழ்ச்சி யூட்ட விரும்புவது. என் கவிதையும், அரசர்க்குச் சிரிப்பூட்ட அல்ல; அவனிக்கு அறிவூட்ட! அதனையும் அறிமின்! யான் நினைப்பது முற்றிலும் வேறு!'' என்றான் புலவன்.

"வாதிட்டுப் பொழுதினை ஓட்டிடுவதைக் காட்டிலும் அவர் வகுத்திடும் முறையேனும், மன்னனின் சோகத்தை நீக்கிவிடுகிறதா என்பதைக் கண்டிடுவதே சாலச் சிறந்தது'' என்றனர் ஆன்றோர்.

புலவர் எழுந்தார்; பணியாளிடம், ஏதோ, மெல்லிய குரலில் கூறினார்; அமர்ந்தார்! அரசனை விளித்தார்.

"கோமானே! எட்டுத் தளபதிகளைக் கீழே வீழ்த்தி, பதினாறு வேற்படை வீரரின் பற்களைத் தட்டிப்பறித்து, பழம் பெரும் போர்க்கலை ஆசானின் இடுப்பிலே, ஈராண்டும் தீராத வலி ஏற்படத்தக்கதான உதை கொடுத்து, கரிப்படைத் தலைவனின் கண்ணைக் கலங்கிடச் செய்த, வீராதி வீரன், குரலெடுத்துப் படை நடுங்கிட வைத்திட வல்லோனாம் வெஞ்சமர்ச் சூரன், தங்களைக் காண வருகிறான் - கட்டளைக்குக் காத்திருக்கிறான் - அனுமதி அருள்வீரா?'' - என்று கேட்டார். மன்னன், "ஈதென்ன விந்தை! இத்துணை வீரச் செயல் புரிந்தோனை, யான் ஏன் இதுவரை, காணவில்லை'' என்று எண்ணிப் புலவரை நோக்கி, "தளபதிகள் எண்மர், வேற்படை யாளர் பதினாறுபேர், மற்றும் கரிப்படைக் காவலன், ஆகியோரைத் தாக்கியவனா - யார் அவன்? எங்குள்ளான்? கொண்டுவந்து நிறுத்தும், அவனை, நம்முன் - தாமதமின்றி!'' என்று முழக்கமிட்டான்.

பவனிக்கான இசைமுழக்கம் எழும்பிற்று.

பராக்குக் கூறுவார் பதின்மர் வந்து நின்றனர்.

பந்தல் அமைத்ததுபோன்ற பட்டுப் போர்வையைப் பலர் முறைப்படி ஏந்திவந்தனர்.

மன்னர் எதிர்ப்புறம் அந்தப் பந்தற் போர்வை வந்தடைந் ததும், "இனிக் காணீர், தளபதியின் பல் உடைத்து, வீரனின் விலாவை நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய, மாவீரனை!' - என்று கூறிக், குறி காட்டினான் புலவன்; போர்வையை நீக்கினர்; கோவேறு கழுதை ஒன்று, நின்றது, மன்னன் எதிரில்; மன்னன், இடிஇடியெனச் சிரித்து, "ஏடா! வீராதி வீரா! நீதானோ, புலவர் போற்றிய மாவீரன்! எட்டி உதைத்து இத்தனையையும் செய்ததன்றோ, நம் பாடி வீட்டுக்குக் கொட்டிலில் கிடந்திடும் இக் கோவேறு கழுதை! பலே! பலே! எறி ஈட்டிக்கும், கொடுவாளுக்கும் அஞ்சாது போரிடும் என் தளபதிகள், இதனிடம் படாதபாடு பட்டனர்; பல் உடைபட்டனர்; ஆம்! புலவரே! ஆம்!'' - என்று கூறிக் கூறிச் சிரித்தான் கோமான்; அவையினர் அனைவருமே, புலவர் செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

ஆடலும் பாடலும், அருங்கவிச் சுவையும், வீரமும் வெற்றிப் பொருட்களும் பெற்றளிக்க முடியாத பெருஞ் சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது.

***

முடி ஆட்சியிலே, மூதறிஞர்களாகவும், வெற்றி வீரர் களாகவும் விளங்கிய மன்னர்கள் இருந்தனர் - கொலைபாதகத் துக்கு அஞ்சாத கொடியவர்களும் கோலேந்திகளாகி இருந்தனர் - மடமை மிக்கவர்களும், மன்னன் மகனானதால் மன்னனாயினர்!

கொடுமை புரிந்தவர்கள் கோல் முறிக்கப்பட்டது.

மடமை கொண்டோரின் அரசு, மதியிலிகளின் மந்தகாசக் கூடமாகவும், நத்திப் பிழைப்போரின் புகலிடமாகவுமாகி, மக்களால் எள்ளி நகையாடப்பட்டது!

இந்நிலைக்கு முடி அரசு சரிந்ததும், முறை மாற்றியாக வேண்டும் - ஒருவனிடம் அதிகாரமத்தனையையும் ஒப்படைத்து விட்டு, அவன் அறிவாற்றலுள்ளவனானால், அவதிக்கு ஆளாகாமல் இருக்கவும், கொடியவனானால், அஞ்சி அஞ்சிக் கிடக்கவும், மதியற்றவனானால் கேலிப் பொருளாகி இருக்கவுமான, நிலைமையைத் தாங்கித் தாங்கிப் பார்த்து, இனி அது ஆகாது என்ற முடிவுக்கு வந்த பிறகே, பேரறிவாளர் பலர் எண்ணிப் பார்த்து, எடுத்தியம்பியது மக்களாட்சி முறை என்பது.

முடி ஆட்சிக் காலத்திலே, மன்னனிடம் மக்கள் அச்சத்துடன் அடங்கிக் கிடக்க நேரிட்டது; கொடுமை செய்யும் போது குமுறிச் சாக நேரிட்டது; மடமைக்காரனாக இருக்கும்போது வெட்கப்பட்டுக் கிடக்கவேண்டி நேரிட்டது; எனினும், மன்னன் சரியில்லை, எனவே, அவனை நீக்குவோம், வேறு தகுதியுள்ளவனை ஆட்சிப் பீடம் அமர்த்துவோம் என்று கூறிடும், ஆற்றலும் உரிமையும், மக்களிடம் இல்லை.

பெய்யெனப் பெய்யும் மழை வளமளிக்கிறது; பேய்மழை நாட்டை அழிக்கிறது. பூங்காற்று இனிமை பயக்கிறது; சூறைக் காற்று ஊர் அழிக்கிறது.

ஆனால், இயற்கையின் செயலைக் கட்டுப்படுத்த இயலாமல் மாமழை போற்றியும், பேய்மழை கண்டு துயருற்றும், பூங்காற்றுப் பெற்று இன்புற்றும், அழிவூட்டும் காற்றால் அவதியுற்றும், நாம் யாது செய்யவல்லோம்; இயற்கையை நாம் எங்ஙனம் கட்டுப்படுத்த இயலும்! - என்று எண்ணிக் கிடந்திடும் போக்கினர் போன்றே, மக்கள் முறை தவறும் மன்னன், முறை அறியா மன்னன் என்போர் ஆட்சி நடாத்தி, அவதியை மூட்டிய காலத்திலும், இயற்கை சிற்சில வேளைகளில் கொடுமையை ஏவுவதுபோல, ஆண்டவன் எக்காரணம் குறித்தோ நமக்குக் கேடு சூழ்ந்திடக் கொடுமையாளனைக் கோலேந்தியாக்கினான்; மடமை மிக்கவனை மன்னனாக்கி மகிழ்கிறான்! நாம் எங்ஙனம், இதனைத் தடுத்திட, முடியும்! எங்ஙனம் மாற்ற இயலும்! நமக்கு ஏது அந்த ஆற்றல்! - என்று எண்ணிக் கிடந்தனர் நீண்ட காலம்.

கண்ணீர் முழுதும் வற்றிய பிறகு, கனல் பிறந்தது கண் களில்; தொல்லையின் எல்லைவரை துரத்தப்பட்ட பிறகு, துணிவு பிறந்தது நெஞ்சத்தில்; பிறகே, முடி ஆட்சி முறை, திட்ட வட்டமாக, இன்ன குணமுள்ளதாக இருக்கும், இன்ன பலன் தரும் என்று அறுதியிட்டுக் கூற இயலாததாகவும், மாற்றி அமைக்க முடியாததாகவும் இருப்பதனால், அதனை நம்பி மக்கள் தமது வாழ்க்கையை ஒப்படைப்பது கூடாத காரியம் - எனவே மக்கள், கண்டறியத்தக்கதும், தேவைப்பட்டபோது மாற்றி அமைக்கத்தக்கதுமான ஓர் ஆட்சிமுறை வேண்டும்; நோக்கம் குறித்து அமைத்திடவும், எதிர்பார்த்த நலன் பெற்றளிக்க இயலாது போயின், மாற்றிவிடவும் தக்கதான ஆட்சி முறை இருத்தல் வேண்டும், என்ற முடிவுக்கு மக்கள் வந்தனர் - குடியரசு கண்டனர்.

தம்பி! குடிஅரசு கண்டனர், என்று மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டேன் - ஆனால், மிக நீண்ட, பயங்கரப் பயணம் நடாத்தியே, மக்கள் குடிஅரசு கண்டனர்.

***

முடி அரசு, கேடு பயப்பினும், மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டுமேயன்றி, மாற்றிவிட இயலாது.

குடிஅரசு, கேடு தந்திடின், மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது.

முடிஅரசு, கோணல் வழி சென்றிடினும், கண்டித்துப் பேச, மக்களுக்கு உரிமை கிடையாது - உயிரைப்பற்றிய கவலை இருக்கும்வரை!!

குடிஅரசு, தவறு செய்வதாகத் தோன்றும்போதே, மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக் கூடச் செய்யலாம்.

முடி அரசுக்கும், குடிஅரசுக்கும் இடையே உள்ளது இந்த வித்தியாசம். பல நூற்றாண்டுகள் சிந்தனையாளர்களும் வீரத் தியாகிகளும், அரும்பாடுபட்டு ஈட்டிய முறை, குடிஅரசு.

முடி அரசுக் காலத்தில், மன்னனை மகிழ்விக்கவேண்டியது தமது கடமை என்று கிடந்தனர் மக்கள்.

அந்த மகிழ்ச்சி, கதை காட்டினேனே, அதுபோல் கோவேறு கழுதையின் வீரம்பற்றி, நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிக் களிப்பூட்டும் வகையினதாகத்தான் இருக்கும் என்பதல்ல பொருள் - மதியிலி மன்னனாக இருக்கும்போது இது போதும்! மமதையாளன் மன்னனானாலோ, அவன் மனம், குடி மகனொருவன் பெற்றெடுத்த செல்வத்தின் கற்பைச் சூறையாடு வதிலேதான் மகிழ்ச்சி பெறும் என்றால், அதுதான் நடக்கும்; மானமுள்ளோருக்குப் புகலிடம், சிறைக்கோட்டம், வெட்டுப் பாறை, அல்லது மரக்கிளை!

முடி அரசுக் காலத்து முறை, மக்கள் மன்னனுக்கு மகிழ்ச்சி யூட்டிப் பிழைத்துக் கிடப்பது.

குடிஅரசுக் காலத்திலோ, மக்களுக்கு மகிழ்ச்சியூட்டி, ஆள வந்தார்கள், இடம்பெற்றிருப்பர்.

பசிப்பிணி போக்கி, வளம் உண்டாக்கி, நல்வாழ்வு அளித்து, மக்களை மகிழவைக்கும், குடிஅரசுகளும் உண்டு. ஒரே நாளில் அமைச்சர் என்பது ஊர் உலா வந்தார், உமக்காக!! என்றுரைத்தும், உமக்காக இன்னின்ன திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன என்று ஏடு காட்டியும், பசிகண்டு பதறாதீர்! பாலாறு தயாராகிறது, பாரீர்! என்று புள்ளி விபரம் வீசுவதுமான, வேடிக்கை காட்டியும் பொழுதை ஓட்டிடுவோர்! நடாத்தும் குடிஅரசும் உளது.

கேடளிக்கும் முடி அரசு மாற, முடி தரித்தோன் மாய்ந் திடல் வேண்டும்; ஆனால் கேடளிக்கும் குடிஅரசை மாற்ற, மக்களுக்கு உரிமை இருக்கிறது

அறிந்து, ஆற்றலுடன் அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையினால்தான், குடிஅரசு முறையே வகுக்கப்பட்டது; பல நாடுகளிலே, இந்த நம்பிக்கை வீணாகிப்போகவுமில்லை.

***

தம்பி! ஒரு நாட்டை ஆள்வது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. . .? அதற்கேற்ற அறிவாற்றல் அனைவருக்கும் ஏற்பட்டுவிடுமா? ஆண்டவன் யாரோ சிலருக்கு மட்டுமே, அத்தகைய தகுதியை அருள்கிறான். மன்னர்கள், மகேசனின் அருள் பெற்றோர்! அவனுடைய பிரதிநிதிகள்! என்று கூறப்பட்டதுபோய், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிடத்தக்க காலம் இன்று பிறந்துவிட்டிருக்கிறது; என்றாலும் குடிஅரசு ஏற்பட்டான பிறகு, எதிர்பார்த்ததனைத்தும் கிடைத்து விட்டது என்று எவரும் கூறிவிடுவதற்கில்லை.

இது குடி அரசுக்காலம் என்று குதூகலத்துடன் கூறிக் கொள்பவர்களை நோக்கிக் கேலி செய்து கொண்டல்லவா, ஸ்பெயின் நாட்டுப் பிராங்கோவும், போர்ச்சுகல் நாட்டு சலாசரும் உள்ளனர்! எகிப்து நாட்டு நாசரும், பிரான்சின் தெகோலூம், இந்தோனேசிய நாட்டு டாக்டர் சுகர்ணோவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் எனினும், சர்வாதி காரிகள் எனும் நிலையில்தானே உள்ளனர். பக்கத்து நாடான பாகிஸ்தானில், பட்டாளத்துத் தலைவர்தானே, ஆட்சி நடத்துகிறார்!

இன்றைய உலகில், முடி மன்னர்களும் உள்ளனர், பிடியை பிரபுக்களிடம் விட்டுவிட்டு இருக்கும் முடி தாங்கிகளும் உள்ளனர்.

குடிஅரசுத் தலைவர்களும் உள்ளனர்; குடிமக்களை நல்லபடி நடத்திச்செல்ல நான் எல்லா அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுரைக்கும் சர்வாதிகாரிகளும் உள்ளனர். பாராளுமன்ற முறை மூலமே, குடிஅரசு முறையிலே பக்குவம் ஏற்படுத்த முடியும்; அந்தப் பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது, அரசியல் கட்சிகள் - அந்த முறைதான் இங்கு உள்ளது என்று கூறும் நாடுகள் உள்ளன; சோவியத்தோ, அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது, நேரக்கேடு, வீணாட்டம்; அத்தகைய கட்சிகள், பணம் படைத்தோரின் உடைமைகளாகி விடுகின்றன; எனவே மக்களாட்சி என்பது வெறும் கேலிக் கூத்தாகிவிடுகிறது! எனவே இங்கு ஒரே கட்சிதான் உண்டு, அது மக்கள் கட்சி! ஒரே தேர்தல்தான் - அந்தக் கட்சி மட்டுமே ஈடுபடும் தேர்தல் - இதுதான் உண்மையான மக்களாட்சி! மற்றது போலி! புரட்டு! - பகட்டு!- என்று செப்புகிறது.

இது ஆட்சி முறையிலே ஒருவகை என்று கூறத்தக்கதே யன்றிப், பாராளுமன்ற ஆட்சிமுறை ஆகாது என்று கூறிடும், அரசியல் தத்துவவாதிகள் நிரம்ப உள்ளனர்.

முடி ஆட்சி, ஒரு அருள் பெற்ற குடும்பத்துக்கு மட்டுமே, ஆட்சி நடாத்தும் தகுதி, வழி வழி கிடைத்திடும் என்ற நிலையை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

குடிஅரசு முறையோ, கொல்லன் மகனாயினும், உழவனாயினும், சிறுகடை நடாத்துவோனாயினும், செருப்புத் தைப்போனாயினும் - ஆட்சி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிட இயலும் என்ற நம்பிக்கையையும், அந்த உரிமை அவனுக்கு உண்டு என்ற நிலையையும், ஏற்படுத்தித் தருகிறது.

***

எல்லோரும் இந்நாட்டு மன்னர் - என்பதிலே, மன்னர், என்ற வார்த்தை, ஆட்சி, நடாத்தும் உரிமையைக் குறிக்க மட்டுமே பயன்படுதல் வேண்டுமேயன்றி, மன்னன்போல், "அருள் பெற்றேன், அமுல் நடத்துவேன், எது செயினும் முறையே என்று எவரும் இருத்தல்வேண்டும்' என்ற மனப்போக்கை, மண்டைக் கனத்தைக் குறித்திடப் பயன்படுத்தப்படுமானால், குடிஅரசு முறை, கொடுமைகளை மட்டும் மூட்டுவதாக அல்ல, மடைமைப் படுகுழியில் மக்களைத் தள்ளிடும் மாபெரும் சதியாகிப் போகும்.

***

இந்த நிலையில், இன்று நடைபெறும் அரசு முறை ஆகிவிட்டது என்றுதானோ என்னவோ, குடிஅரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத், மனம் வெதும்பியது போலவும், கேட்போர் மனம் புண்படும் முறையிலும், சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பத்ரிநாத் போய்வந்தவர், பாபம் போக மார்க்கம் ஏதேனும் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருப்பர் - ஆனால் பாபுவோ, இன்றுள்ள ஆட்சி முறை பற்றி, கேலியும் கண்டனமும், வியப்பும் வேதனையும் நெளியும் விதமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

***

சட்டமன்றங்களில் அமர்ந்து, சட்டமியற்றுவோருக்கு, அதற்குத் தேவையான அறிவாற்றல் இல்லை; அவர்களுக்கு உள்ள ஒரே தகுதி, அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதுதான். அப்படித் தேர்ந்தெடுத்த மக்கள் யார் எனில் இவர்களைப் போலவே அறிவாற்றலற்றவர்கள் - என்ற கருத்துப்படப் பேசிவிட்டார்.

குருடும் குருடும் குருடாட்டம் ஆடுவதுபோல என்பார்களே, அதுபோல, இன்று ஆட்சிமுறை இருப்பதாக, அவர் கருதுகிறார்.

இவ்விதமான கருத்துக் கொண்டுள்ள இவரே, குடிஅரசுத் தலைவராக, இன்று அமர்ந்திருப்பது, கேலிக்குரிய, கண்டிக்கத் தக்க, தரம் கெட்ட ஒரு அரசியல் முறையின் மூலமாகத்தான் என்பதை அவர் மறந்துவிட்டிருக்க முடியாது. சிலராகிலும் இதைச் சுட்டிக்காட்டுவார்களே என்பதைத் தெரிந்திருந்தும் தான், குடிஅரசுத் தலைவர் அவ்விதம் பேசியிருக்கிறார். பேசியதோடு நிற்கவில்லை, சட்டமன்றங்கள் செல்வதற்குச் சில தகுதிகள் இருத்தல் வேண்டும்; சில தகுதிகளைக் குறிப்பிட்டு, அத்தகுதிகள் உள்ளவர்கள் மட்டுமே, சட்டமன்றங்கள் செல்லலாம் என்று முறை ஏற்படுத்துவது மிக நல்லது என்றும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.