அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


உயர்ந்த இலட்சியத்தை உள்ளடக்கியது!

கோவை மாவட்டத்தில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணத்தில் ஈடபட்டிருந்த அண்ணா அவர்களும் தோழர் கி.மனோகரன் அவர்களும் 5ஆம் நாள் காலை கோவை சாமி தியேட்டரில் நடத்ந சிறப்புக் கூட்டத்திலும் சிங்காநல்லூர் அம்பாள் அரங்கில் நடந்த சிறப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டுவிட்டப் பிற்பகல் 3.15 மணியளவில் உடையாம்பாளையம் வந்து சேர்ந்தனர். கொளுத்தும் வெளிலிலும் கூட்டம் ஏராளமாகக் கூடி நின்றது.

மாவட்டச் செயலாளர் தோழர் ப. நாராயணனும், மாவட்டத் துணைச் செயலாளர் இராசு, மாவட்டப் பொருளாளர் தேவசகாயம், வட்டச் செயலாளர் எஸ்.ஏ.இராசமாணிக்கம் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் மனோகரன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

வட்டச் செயலாளர் எஸ்.ஏ. இராசமாணிக்கம் தலைமையில் கூட்டம் தொடங்கியது. தோழர்கள் கி.மனோகரன், பா. நாராயணன் ஆகியோர் பேசியபின் தோழர் கேவை. க.இரத்தினம் நிதியளிப்பு பற்றிப் பேசினார்.
கோவை க.இரத்தினம் பேசியதாவது –

“தேனீக்கள் எப்படிச் சிறுகச் சிறுகத் தேனைச் சேர்க்கிறதோ, அதைப்போல நாங்கள் இந்த நிதியைக் காலணா அரையணாவாகச் சேர்த்திருக்கிறோம். அண்ணாவிடம் நாங்கள் தரும் தொகை மிகக் குறைவுதான். நாங்கள் சேர்த்த நிதி இன்னும் மீதி இருக்கிறது. அதை அடுத்துவரும் தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி, மக்களுக்குக் கொள்கை விளக்கம் கூறவைத்துக் கொடுக்க எண்ணியிருக்கிறோம்.

அதிக நிதி தரத் தயார்

“வட்டக் கழகம் எங்களுக்கு – கிளைக் கழகங்களுக்கு விதித்த தொகை நூறு ரூபாய்தான். இதற்கு முன்பு நெடுஞ்செழியன் அவர்களிடம் தேர்தல் நிதியாக ரூ.70 கொடுத்திருக்கிறோம். இப்போது இரண்டாவது பகுதியாக அண்ணா அவர்களிடம் ர.101 தருகிறோம். வட்டக் கழகம் விதித்தையும் விட அதிகமாக இன்னும்பல தவணைகளில் பணம் கொடுக்க உடையாம்பாளையம் தி.மு.க. தயாராக இருக்கிறது“ என்று கூறி ரூ.101 கொண்ட பணமுடிப்பை அண்ணா அவர்களிடம் கொடுத்தனர்.

பல அமைப்புகளின் சார்பில் கைத்தறித் துண்டுகளும் மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்ட பின்னர் அண்ணா அவர்கள் அரியதோர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது –

“எனக்கு முன்னால் பேசிய தோழர் இரத்தினம் என்னை அதிக நேரம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானோ, முடியாத நிலையில் இருக்கிறேன். காலையில் எழுந்ததும் சிறப்புக் கூட்டம் என்றார்கள். சென்றேன். அடுத்துச் சிங்காநல்லூரில் சிறப்புக்கூட்டம் என்றார்கள். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும், ‘காரில் எறுங்கள்‘ என்றார்கள். ஏறினேன். இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னும் எங்கெங்கோ கொண்டு போவார்களோ எனக்குத் தெரியாது.

நேரமில்லை... ஆவன செய்வீர்!

நண்பர்கள் இங்குத் தேர்தல் நிதி கொடுத்தார்கள். அதனை வழங்கிய இரத்தினம் தாத்தாவாகிவிட்டார் போலும். தாத்தாக்காள்தான் பேரனை அழைத்து, ‘இந்தா காலணா, போய் மிட்டாய் வாங்கிக் கொள்( நாளைக்குக் காலணா தருகிறேன்‘ என்பார்கள். அதைப்போல இரத்தினம், “தேர்தல் நிதியை அதிகமாகச் சேர்த்து வைத்திருக்கிறோம். அதைத் தலைவர்களை அழைத்து வைத்துக் கூட்டம் நடத்தித்தான் தருவேன்“ என்கிறார். நான் அவருக்குச் சொல்லிக்கொள்வேன் நாங்கள் வரவேண்டும் என்று காத்திருக்காதீர்கள் அதற்கு நேரமில்லை“ என்று.

தோழர்கள் இரத்தினம், தேனீக்களை உதாரணம் கூறினார். தேனீக்கள் தேனைச் சேகரித்து வைத்துக் கொண்டு, ‘கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவேன்‘ என்று கூறுவதில்லை.

பலம் பொருந்திய எதிரி

நம்மை எதிர்நோக்கியிருக்கும் பணிகள் மிகப்பல. தேர்தலுக்கு இடையே உள்ள நாட்கள் நூறுதான். நாம் பலம் பொருந்திய ஆட்சியை எதிர்த்து நிற்கிறோம். நமது எதிரி மிகச் சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான்.

தி.மு.கழகத்துக்கு நீங்கள் தரும் தேர்தல் நிதி எதற்காக? ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்குவதற்காக? அல்ல. அல்ல. தேர்தல் அத்தியாவசியச் செலவுகளைச் சரிக்கட்டத்தான் நாம் அதனைப் பயன்படுத்துகிறோம். காங்கிரசுக் காரர்கள் தேர்தல் நிதி திரட்டுகிறார்கள் என்றால் நோட்டுக் கொடுத்து ஓட்டுக்களை வாங்குவதற்கும், தொகுதிகளை விலைபேசுவதற்கும். நோட்டுக்களைக் கொடுத்தால் வாக்காளர்கள் கூட இப்போது வாங்க அஞ்சுகிறார்கள். ஒருவேளை அது கோயம்புத்தூர் நோட்டாக இருக்குமோ என்ற காரணத்தால்.

இந்தத் தொகையை அளிக்கவே நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பீர்கள். தேர்தல் நிதிக்காக நீங்கள் அளித்த நாலணா எட்டணா இருந்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்திருக்க உதவியிருக்கும். என்ன செய்வது, நாங்கள் உங்களிடம்தான் வரவேண்டியிருக்கிறது.

காங்கிரசுக்காரர்களும் தேர்தல் நிதி திரட்டுகிறார்கள் எப்படி? மிட்டா, மிராசுகளும், ஆலை அரசர்களும் இலட்சக்கணக்கில் நிதி வழங்குகிறார்கள். அதற்காகப் பெர்மிட், லைசென்ஸ் இப்படி ஏதாவது ஆட்சியிலுள்ளோர் அவர்களுக்குச் செய்து தீரவேண்டியிருக்கிறது.

உயர்ந்த இலட்சியத்தை உள்ளடக்கியது

திராவிட முன்னேற்றக் கழகம் மிட்டா, மிராசுகளின் கட்சி இல்லை. அது ஏழை மக்களின் கட்சி. அதனால்தான் உங்களிடையே தேர்தல் நிதி கேட்டு வருகிறோம். நீங்கள் தரும் தொகை சிறியதாக இருக்கலாம். ஆனால் அது உயர்ந்த இலட்சியத்தை உள்ளடக்கியது. அந்த இலட்சியம், இலட்சங்களை விரட்டியடிக்கும்.

சேலம் பாக்சைட் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தி.மு.கழகம் சொல்லி வருகிறது. ஆகாய விமானம் முதல், சின்னஞ்சிறிய பொருள்கள் வரை இன்று அலுமினியம் பயன்படுகிறது. ஆகவே, பொதுத்துறையில் அலுமினியம் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாம் பலமுறைசொன்னோம். இன்று அது வெங்கடசாமி நாயுடுவிடம் விடப்பட்டிருக்கிறது. அலுமினியத் தொழிற் சாலைக்கு லைசென்ஸ் அவருக்கு வழங்கப்படும்போது இலட்சக்கணக்கில் தேர்தல் நிதி அளிக்க அவர் ஏன் முன்வரமாட்டார்?

காங்கிரசுக்குப் புரியாது

காங்கிரசு பணக்காரர்களின் கூடாரம். ஏழைகளின் துயரம் அதற்குப் புரியாது. இதை நான் சொன்னால், காமராசர், ஊருராக வந்து, காங்கிரசு ஏழை எளியவர்கள் கட்சிதான் என்று கூறுகிறார். மன்மதன் எரிந்தானா இல்லையா என்று விவாதம் நடத்துகிறார்கள். அதைப்போலத்தான் இருக்கிறது இது.

இன்று நாட்டிலே அரசர்கள், பஸ் முதலாளிகள், ஏற்றுமதி இறக்குமதி காண்டிராக்டர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அன்று ஜஸ்டிஸ் கட்சியின் தூணாக இருந்த சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரின் குமாரத்தி இன்று காங்கிரசில் வெங்கடசாமி நாயுடு காங்கிரசுக் கட்சியில், எது ஏழையர் கட்சி, எது பணக்காரர் கட்சி? நீங்களே முடிவுக்கு வாருங்கள்.

பணம் படைத்தவன் நிலை

நாட்டின் மக்களின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கிறது என்பதைச் சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். பணக்காரனிடம் பணம் குவிந்து கொண்டே இருக்கிறது. இன்று ஒரு பணக்காரனின் பங்களாவைப் பார்க்கிறோம். அதையே அடுத்த ஆறு மாதத்திற்குப் பின்னால் பார்த்தால் அது வேறு மாதிரி மாற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. பணக்காரனுக்குப் பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதேதோ செய்கிறார்கள்.

இதைத் தி.மு.கழகம் சொன்னால், ‘அவர்களிடம் பணம் சேர்ந்தால் என்ன? நாங்கள்தான் வரிபோட்டு வசூல் பண்ணி விடுகிறோமே?‘ என்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலத்தான்.

பணக்காரனிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு அவனிடமிருந்து வரியை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதா? தோட்டத்தை இன்னொருவனிடம் கொடுத்துவிட்டு, பழத்துக்கு ஏங்குவதா? ஆகவேதான் பொதுமக்களாகிய நீங்கள் சற்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு வருமானால். அது பணக்காரனுக்குத்தான் இலாபம். இந்த நாட்டு மக்கள் மீது உள்ள கடன் சுமை மேலும் அதிகமாகும். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். விலைவாசிகள் உயரும்.

எது தேவை? எண்ணுவீர்

வரிகள் குறைய வேண்டும், நாட்டு மக்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என்றால், தி.மு.கழகத்திற்கு ஓட்டு போடுங்கள்.

நல்வாழ்வு தேவையில்லை என்றால், மூன்று ரூபாய்க்கு படி அரிசி கிடைத்தால் போதும் என்றால் நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போடலாம். எது தேவை என்பதை உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

உடையாம்பாளையம் தி.மு.கழக அவைத்தலைவர் தோழர் க. அய்யாவு நன்றி கூறினார்.

பெருந்துறை தி.மு.கழகச் சார்பில் கோவை மாவட்டச் செயலாளர் ப.நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்களும் கி.மனோகரன் எம்.ஏ., அவர்களம் கலந்து கொண்டனர்.

அண்ணா அவர்களிடம் தேர்தல் நிதியாக ரூ.111 அளிக்கப்பட்டது.

பல கிளைகளின் சார்பில் மலர் மாலைகளும் கைத்தறி ஆடைகளும் அண்ணா அவர்க்ளுக்கு அணிவிக்கப்பட்டன. தனிநபர்களும் நிதி கொடுத்தனர்.

அண்ணா அவர்கள் வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளை எந்த முறையில் பயன்படுத்த வேண்டுமென்பது குறித்து விளக்கமாகப் பேசினார்.
வி.கே.பெரியசாமி நன்றி கூறினார்.

(நம்நாடு - 26.10.61)