அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிறைக் கூடம் அல்ல கழகக் கிளைக் கூடம்!

“யார் ஒத்துழைப்பதாகக் கூறினாலும் வரவேற்புக் கொடுங்கள், யார் நமது ஒத்துழைப்பைக் கேட்டாலும் தாரளமாகக் கொடுங்கள், யார் யார் அனுதாபப்பட்டாலும் மகிழ்ச்சி கொள்ளுங்கள், யார் ஆதரித்தாலும் நன்றி சொல்லுங்கள். ஆனால், யாரிடத்திலும் இரண்டறக் கலந்து விடாதீர்கள்.“

சிறைச்சாலை எங்களுக்குச் சிறைச்சாலையாகத் தோன்வில்லை கன்னம் வைத்தவன் கொள்ளையிட்டவன், கற்பழித்தவன் நமது தோழர்களுக்கு இடம் கொடுக்கின்றனர், அங்கே! நமது தோழர்களும், நாள்தோறும் நூற்றுக்கணக்கில் குவிகின்றனர். எனவே, சிறையும் எங்களுக்கு ஒரு தி.மு.கழகக் கிளையாகவே காட்சியளிக்கிறது. நீங்கள், நாட்டிலுள்ள கிளைக் கழகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, எங்களை நோக்கிச் சொல்வது போலவே தெரிகிறது என்று ஆகஸ்ட் 2ஆம் தேதி திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணாதுரை பேசுகையில் குறிப்பிட்டார்.

கல்லக்குடியில் கண்ணதாசன்!

அன்புள்ள தலைவரவர்களே, தோழர்களே, தாய்மார்களே! எங்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு நாளைய தினமே முடிவடைந்து, நாங்கள் சிறைக்கூடத்தில் வைக்கப்படலாம். அதற்கு முன்னால், உங்கள் அனைவரையும் சந்திக்கம் இதுபோன்ற வாய்ப்புக் கிடைத்தற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமக்கருகில் அமர்ந்திருக்கும் தோழர் கண்ணதாசன் கல்லக்குடியில் இருந்தார். அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதென்று கேள்விப்பட்டு துடித்துப் போனோம். அவர் இறந்தே போய்விட்டார் என்றுகூட நாங்கள் சிறையில் இருந்தபோது கேள்விப்பட்டோம். இப்போது அவரை நமகக்ருகலி் கணட்தும், நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைப் பற்றியோ, அதன் முடிவைப் பற்றியோ இப்போது எதையும் சொல்வது கூடாதாகையால், அதுபற்றிப் பேச அவசியமில்லை.

துப்பாக்கிக் குண்டு, தடியடி, சிறைவாசம் ஆகிய எதையும் லட்சியம் செய்யாமல் கடந்த 15ஆம் தேதி அறப்போரிலே, பெரும் உறுதிகாட்டி, மாபெரும் வெற்றியைக் கழகத்திற்குத் தேடித் தந்தீர்கள்.

யாரிடத்தும் இரண்டறக் கலந்து விடாதீர்கள்!

உங்கள் உறுதியைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது லட்சியத்தையுடைய, எதற்கும் தயாராகிவிட்டீர்கள், அந்த உறுதியை என்றும் இழக்காதீர்கள்.

காசியாத்திரை போகும் கனதனவான், தமது குடும்பத்தாருக்குச் சிலவற்றைச் சொல்லிப் போவார்கள்.

அவர்கள் சொல்வார்கள், ஆண்டவன் காப்பாற்றுவார், ஆனால், நேரத்திலேயே வீட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிடு, துஷ்டப் பயல்கள் பெருத்துவிட்டார்கள், என்று! நான் சொல்லுகிறேன் – யார் ஒத்துழைப்பதாகச் சொன்னாலும் வரவேற்பு அளியுங்கள், யார் நமது ஒத்துழைப்பைப் கேட்டாலும், தாராளமாகக் கொடுங்கள், யார் ஆதரித்தாலும் நன்றி சொல்லுங்கள், யார் அனுதாபப்பட்டாலும் மகிழ்ச்சி அடையுங்கள், ஆனால் யாரிடத்திலும் இரண்டறக் கலந்து விடாதீர்கள்.

இதே சந்தர்ப்பத்தில் சர்க்காருக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.

எங்களுக்கு எவ்வளவு பலம் இருக்கிறதென்பதை எங்களுக்கு அறியச் செயத் ஆச்சாரியாருக்கு நன்றி, 13ஆம் தேதியே எங்களைச் சிறையிடைத்தும், நாட்டில் நடைபெற வேண்டிய காரியங்கள் நடைபெறாமல் போகவில்லை, அன்று துப்பாக்கிக் குண்டுக்கு மகிழ்ச்சியுடன் மார்பைக் காட்டினர், சிறைச்சாலையை எள்ளி நகையாடினர்.

ஆச்சாரியாருக்கு நன்றி!

தடியினால் தாக்கப்படத் தாக்கப்பட அதனைத் தியாகத் தழும்புகளாகத் தடவிக் கொடுத்துக் கொண்டனர். இவைகளைக் கேட்டபோது 5 அடி 2 அங்குலமாக இருந்தவன், 6 அடி உயரமாகிவிட்டேன் – மகிழ்ச்சியால், பூரிப்பால்! அந்த அரிய பெருமையைத் தேடித் தந்த மக்களுக்கு என் நன்றி.

நாம் செய்யும் காரியங்கள் அத்தனையும் பலாத்கார வாடை அடிக்காதவை, ஆகவே, அதையே எப்போதும் கடைப்பிடியுங்கள்.

நான் சொல்கிறேன் – தூத்துக்குடி – கல்லக்குடி துப்பாக்கிப் பிரயோகத்திலே, உயிர் நீத்த தோழர்கள் குடும்பத்தாருக்க நஷ்ட ஈடு கொடுக்க அரசாங்கத்திடம் கிளர்ச்சி செய்ய வேண்டும். அப்படி அரசாங்கம் நஷ்ட ஈடு தர மறுத்தல். நமது தோழர்கள் – கூத்தாடத் தெரிந்தவர்களாக உள்ளவர்கள் கூத்தாடி, பிச்சை எடுத்து, உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு ரூபாய், அரை ரூபாய்கள் போட்டு, தொழிலாளிகள் காலணா, அரையணாக்கள் கொடுத்துப் பணம் சேர்த்துத் தர வேண்டும்.

பெருமழை பெய்யத் தொடங்கவே இத்தோடு பேச்சை முடித்துக் கொள்வதாகக் கூறினார்.

(நம்நாடு - 5-8-1953)