அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


பழமையை விடுத்துப் பண்பினைக் காப்பீர்!

தமிழ்நாடு டாக்ஸி, ஆட்டோ, ரிக்ஷா டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னைக் கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு –

“நான் இந்த மன்றத்துக்கு வந்து சேரும்வரை, இங்கு என்ன பேசுவது என்ற திகைப்பு எனக்கு இருந்து வந்தது. பிறகு எதைப்பற்றி வேண்டுமானாலும் அந்தத் துறையில் ஈடுபட்டிருக்கின்றவர்களே கேட்க ஆசைப்படும் அளவுக்கு பேசக்கூடிய நல்ல ஆற்றல் உள்ளவர்கள் நம் கழகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

வேலை செய்ய நேரமில்லை

“இந்தச் சங்கத்தை ஆரம்பித்த நேரத்தில்இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வந்து தி.மு.கழகத்தில் உள்ள ஒருவரை, இச்சங்கத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்று நேரத்தில் நான் தயக்கடைந்தேன். தொழிற்சங்கங்களை நடத்தும் அளவுக்குக் கழகத்தில் நேரடியாக ஈடுபாடு கொண்டு பணியாற்றுபவர்களைத் தவிர்த்து மிச்சமுள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால், அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிது. சில கட்சிகளில் இருப்பவர்கள் செய்வதற்கு ஏதேனும் வேலையிருக்கிறதா என்று தேடுவார்கள். நம்மிடம் நிறைய வேலை செய்ய வாய்ப்பிருக்கிறது. செய்ய நேரமில்லை. நம்மிடமுள்ளவர்கள் – கழக வேலைகளிலும் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்கள் தொழிற் சங்கங்களில் ஈடுபடவில்லை. எனினும் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே நம்மில் பலர், தொழிற்சங்கங்களை நடத்திச் செல்லும் திறமையும் அதற்கே உரிய பொறுமைக் குணமும் அறிவாற்றலும் பெற்று வந்திருக்கிறார்கள். இருந்தாலும் நான் இந்தச் சங்கத்தவரிடம், வேறு அரசியல் கட்சியினரையும் இதில் ஈடுபடுத்தித் தி.மு.கழகத்தைச் சேர்ந்த ஒருவரையும் ஈடுபடுத்தி இணைந்து பணியாற்ற வழியிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். ஆனால் வேறு கட்சியினர் இதில் ஈடுபடமுன்வரவில்லை. அதனால் நான் நாம் இதில் ஈடுபட்டோம். நம்முடைய கழகத்தில் உள்ள தோழர் இராசாராம் அவர்களை இச்சங்கத்திற்குத் தலைவராக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டேன்.

இராசாராம் பொருத்தமானவர்்

இராசாராம் அவர்களைத் தலைவராக இருக்கச் சொன்னதற்கு மூன்று நான்கு காரணங்கள் உண்டூ. ஒன்று – அவர் தலைவரான பிறகும் என்னை வந்து சந்தித்து, யோசனைகளைக் கேட்பார். இரண்டாவது – அவர் படித்தவராதலால் அதிகாரிகளிடம் நல்ல மரியாதையாகப் பேசி காரியங்களைச் சாதிக்கக் கூடியவர் என்பது எனக்குத் தெரியும். மூன்றாவது சிர் தொழிற்சங்கத்தில் நல்ல செல்வாக்கைப் பயன்படுத்திக் கழகத்தையே மிரட்டக் கூடும். இராசாராம் அப்படி மிரட்டமாட்டார். நான்காவது – இவர் வீணான ஆசைகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திவிடாமல் நல்ல அடக்க உணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படுத்தக்கூடியவர்.

மாட்ட வைத்து விட்டீர்களே

“இப்படிப்பட்டவரை இச்சங்கத்துக்குத் தலைவராகக்க நான் நினைத்த போது இவர் அதற்குச் சுலபத்தில் இடம் கொடுக்கவில்லை. நான் மேலும் வலியுறுத்தித் தலைவராக இருக்கும்படிச் சொல்லிவிட்டுச் சேலம் சென்றிருந்தேன். சேலத்திலுள்ள இராசாராம் அவர்களின் வீட்டுக்குச் சென்ற போது முத்ன் முதலில் அவருடைய அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வி ‘என்ன என் தம்பியை இதில் மாட்ட வைத்துவிட்டீர்களே? என்பதுதான்! எதில் மாட்ட வைத்திருக்கிறேன் என்று கேட்டேன். அதற்கு அவர், டாட்சிக்காரர்களைத் திட்டுபவர்களெல்லாம் இனி என் தம்பியைத் திட்டுவார்கள்‘ என்று சொன்னார். அதற்கு நான் ்அப்படிப்பட்ட நிலையை மாற்றத்தான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னேன்.

“எனக்கு முன்பு பேசியவர்களெல்லாம் பல யோசனைகளைத் தெரிவித்தார்கள். தங்கள் அனுபவம் மூலம் டாக்ஸி தொழிலைப் பற்றி அறிந்துள்ள உண்மைகளையும் தெரிவித்தார்கள். நல்ல வேலையாகவோ, கெட்ட வேலையாகவோ எனக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்.

இடைக்காலத் தொழிலாக மேற்கொள்ளக்கூடாது!

“இது வளரக்கூடிய தொழில் – பொருளாதாரம் வளர வளர எல்லாருக்கும் ஆளுக்கொரு கார் ஏற்பட்டால் இத்தொழில் குறைந்து விடும் என்று நினைக்கவேண்டாம். பொருளாதாரம் வளர வளர போக்குவரத்து வாய்ப்பும் வளரும். மக்கள் நடமாட்டம் அதிகமாகும். இன்னும் ஒரு பத்தாண்டில் ஒன்றுக்குப் பத்தாகக் கார்க்ள் பெருகும். ஆகவே, இது வளரக்கூடிய தொழிலே தவிர நசிந்துவிடக் கூடியதல்ல. இதை ஆரம்பித்திலேயே முறைப்படுத்திப் பக்குவப்படுத்தி விட்டால் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்குப் பக்குவப்படுத்தி விட்டால் நல்லவர்களை யெல்லாம் புகுத்திக் கூட்டுறவு முறையில் இத்தொழிலை வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள் வேறு ஓர் நல்ல தொழில் கிடைக்கும் வரை இதை ஓர் இடைக்காலத் தொழிலாகக் கொள்ளாதீர்கள்.

இக்கரைக்கு அக்கரை போன்றதுதான்!

“தமிழ்நாட்டில் ஒரு தொழிலிலே ஈடுபட்டுள்ளவர்கள் அதில் நிம்மதி பெறுவது கிடையாது. அடுத்த தொழில் மீதுதான் ஆசைப்படுவார்கள்.

பஸ் ஓட்டுபவர், லாரி ஓட்டுவதுதான் இலாபகரமானது என்று நினைக்கக்கூடும். லாரி ஓட்டுபவர் பஸ் ஓட்டுவது பெருமைத் தரக்கூடியது என்று கருதுவார். டாக்சி ஓட்டுபவர் சொந்தக் கார் ஓட்டுவதை விரும்புவார். தனிப்பட்டவர்களிடம் கார் ஓட்டுபவருக்கு டாக்சி ஓட்டுவதிலே நாட்டம் ஏற்படலாம். இப்படி அவரவரும் நினைப்பதில் எது உண்மை? எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போலத்தான். ஆகையினால் ஒரு தொழிலில் இருப்பவர் வேறு தொழிலில் நாட்டம் செலுத்துவது நல்லதல்ல. இந்தத் தொழில் நல்லதா அந்தத் தொழில் நல்லதா என்று நினைக்காமல் டாக்சி ஓட்டும் தொழில் வளரக்கூடியது என்பதை நம்பி இருந்த இடத்திலேயே நீங்கள் இருக்க வேண்டும். அதற்க இந்தத் தொழில் நியாயமானது – நிம்மதி தரக்கூடியது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கவேண்டும்.

சத்திரத்துக் கதவல்ல

“கல்யாணச் சத்திரத்துக்குக் கல்யாணம் செய்யப் போகிறவர்கள் கல்யாணம் முடிந்ததும் சத்திரத்தின் கதவைச் சாத்துவதிலே அக்கறை செலுத்த மாட்டார்கள். ‘அடுத்துக் கல்யாணம் செய்பவர்கள் அதைப் பார்த்துக் ்கொள்வார்கள்‘ என்று கருதித் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறிவிடுவார்கள். சத்திரத்துக் கதவுபோல இந்தத் தொழிலை நீங்கள் கருதக்கூடாது.

“இது வளரக்கூடிய தொழில் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும். இது வளரக்கூடிய தொழில் மட்டுமல்ல –வளர வேண்டிய தொழில். இதில் உள்ள பல தொல்லைகளையும் தோழர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதற்கான சட்டப் பாதுகாப்புகளைப் படிப்படியாகக் கிளர்ச்சி நடத்திப் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த வசதி இங்கே இல்லை

“அமெரிக்காவில் பணக்காரர்கள் வீட்டிலே கார் ஓட்டிகளாக வேலை செய்பவர்கள் தாங்களும் சொந்தத்தில் கார் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தங்கள் சொந்தக் காரிலேயே வேலைக்குச் செல்கிறார்கள். தாங்கள் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றவுடன் சொந்தக் காரை அங்கு நிறுத்தவிட்டு முதலாளியின் காரை ஓட்டுகிறார்கள். வேலை முடிந்ததும் சொந்தக் காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள். அதைப்போன்ற வசதி நமது நாட்டில் இல்லை. செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் ஒருவருக்கு மூன்று நான்கு என்ற விகிதத்தில் கார் ்இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏற்பட, இந்தத் தொழிலிலும் நிம்மதி ஏற்படும்.

அரசியலில் ஏற்பட்ட ‘விபத்து‘ போனற்தல்ல

“திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்திலே அங்கே அரசாங்கம் பஸ் தொழிலை நடத்த ஆரம்பித்த போது பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் படித்தவர்களாக இருந்தார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் நான் அங்கே சென்றபோது நன்கு படித்துப் பட்டம் பெற்றவரெல்லாம் அத்தொழிலில் ஈடுபட்டுப் பணியாற்றிக் கொண்டிருந்ததை நேரில் கண்டு வியந்தேன். உயரும் ‘ஆளும் பொறுப்பேற்பவர்களுக்கே படிப்பு தேவையில்லை என்ற நிலை பிறந்துவிட்ட பிற இந்தத் தொழிலுக்கு ஏன் படிப்பு?‘ என்று என்னைத் திருப்பிக் கேட்க வேண்டாம். ஏனென்றால் அது அரசியலில் ஏற்பட்டுவிட்ட ஒரு விபத்து.

பழைய கால வழக்கத்தை அறவே விட்டுவிடுவீர்!

“மரியாதைக்குரிய மதிப்பு நம் நாட்டைவிட அயல்நாடுகளில் அதிகம் உயர்ந்திருக்கிறது. ‘நன்றி‘ என்ற ஒரு சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதறிய எத்தனையோ லட்சம் டாலர்களை அமெரிக்கா செலவிட்டது என்று புத்தகத்தில் படித்தேன்.

“உண்மையிலேயே மேல்நாடுகளில் ‘தேங்ஸ்‘ என்ற சொல் நாளொன்றுக்கு அதிக அளவிலே சொல்லப்படுகிறது. ஓர் அறிஞர் ‘தேங்ஸ்‘ என்ற சொல்லுக்குச் சரியான பொருள் தரும் சொல்கள் இந்திய மொழிகளில் இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்ததாகவும் – ஒரு மொழியில்கூட அப்படிப்பட்ட சொல் இல்லையென்றும் கூறியதாகவும் ஒரு நூலில் படித்தேன்.

“உருது மொழியில் மட்டும் ‘சுக்ரியா‘ என்ற சொல் ஓரளவு அந்தப் பொருளைத் தருவதாக இருக்கிறதே ஒழிய மற்ற மொழிகளில் இல்லை.

“டாக்சி டிரைவர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறார்கள் என்ற குறை இருக்கிறது. அந்தக் குறைகள் கூட பழைய காலப் பழக்கத்தினால் ஏற்பட்டதே ஒழிய உங்கள் குற்றமென்று நான் கூற மாட்டேன். அந்த பழைய காலப் பழகக்கத்தை அறவே விட்டு, வரும் தலைமுறையிலே உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளம் முறையில் பண்போடு நடந்துகொள்ள வேண்டும்.

சிக்கல் தீர வழி என்ன?

“உங்கள் பிரச்சனையை மூன்று முறைகளில் அணுக வேண்டும். ஒன்று அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு. இரண்டாவது முதலாளிகளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு. மூன்றாவது உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு. இந்த மூன்று தொடர்புகளையும் ஆராய்ந்து பார்த்தால் இருக்கின்ற சிக்கல் தீர வழி பிறக்கும்.

“இப்பொழுது டாக்சிகள் குறைவாகவும் அவற்றில் ஏறுபவர்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது ஏறுபவர்கள் கிடைக்க வில்லையே என்ற பிரச்சனை இல்லை. இன்னும் கொஞ்சக் காலம் போனால் இதில் வந்து ஏறுங்கள் என்று டாக்சி டிரைவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வந்து அழைப்பார்கள்.

“நண்பர் கே.ஆர்.இராமசாமி பேசுகையில் சொன்னார் ‘முன்பெல்லாம் நான் கார் ஓட்டினால் அண்ணா ஏறப்பயப்படுவார். இப்பொழுது நான் ஓட்டினால் அண்ணா பயமில்லாமல் ஏறுவார்‘ என்று கூறினார். இப்பொழுது நான் பயமில்லாமல் ஏறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவர் இப்பொழுது கார் ஓட்டுவதில் அதிகத் திறமை பெற்றிருக்கிறார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் – பத்தாண்டுக்கு முன்பு உயிர் மீது எனக்கு இருந்த ஆசை இப்பொழுது இல்லை.

பொதுமக்கள் உணர!
“சமுதாயத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லாதபடி பாதுகாப்புடன் ஓட்டக்கூடியவர்கள் டாக்சி டிரைவர்கள் டாக்சி ஓட்டுபவர்கள் மிகப் பொறுப்பான காரியம் என உணர்ந்து பணியாற்றினால் அவர்கள் சமுதாயத்துக்க எவ்வளவு தேவையானவர்கள் என்பது மக்களுக்குப் புரியும்.

“இந்தச் சங்கத்துக்கு நமது இராசாராம் தலைவரான பிறகு நான் போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் – உங்கள் கழகத்தைச் சேர்ந்த படித்த ஒருவர் இச்சங்கத்துக்குத் தலைவராகியிருக்கிறார். இனி தகராறு எதுவுமிருக்காது, அப்ப தகராறு ஏற்பட்டாலும் நேரடியாகப் பேசினால் அது தீர்ந்துவிடும் என்று, அவர் சொன்னபடி நடந்ததா? நேரடியாகப் பேசித் தீர்க்கப்பட்டதா இல்லையா என்பது இருக்கட்டும், நம்மைப் போன்றவர்கள் ஈடுபட்டு இச்சங்கத்தை நடத்தினால் இது நாகரிகமாக வளரும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருருக்கிறது. அந்த நம்பிக்கை வளரவேண்டும். அதற்கேற்றபடி நீங்கள் பணியாற்ற வேண்டும்.

நிங்கள் தொடர்ந்து நல்ல முறையில் பணியாற்றி வந்தால் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் தொழிலை நாடே ஏற்றிப் போற்றி மதிக்கத் தக்க அளவு பெருமையை – நாகரிக நிலையை உண்டாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுவேன்.

தொடர்பை ஒழுங்காக்குக!

“முதலாளிகளிடம் உங்களது தொடர்பு முறையும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். நீங்கள் அவர்களிடம் வேலை செய்வதால் அவருக்கு முதலாளி என்ற பெயர் ஏற்படுகிறதே தவிர உண்மையில் அவர்கள் முதலாளிகள் அல்ல. ஒண்டுக்குடித்தனம் செய்பவர் ஒரவர் தன்னிடம் ஒர வேலைக்காரனை வைத்துக் கொண்டால் அவருக்கு முதலாளி பட்டம் கிடைத்து விடுகிறது.

“கடையிலே சோடா பாட்டிலை எடுத்துக் கொடுப்பதற்காக ஒரு பையனை வைத்துக் கொள்ளும் கடைக்காரர் தான் வெளியே சென்று திரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது யாராவது அந்தப் பையனைப் பார்த்து எங்கப்பா அவர்? என்று கேட்டால், ‘யார் எங்கள் முதலாளியா?‘ வெளியே போயிருக்கிறார். வந்து விடுவார் என்று அவன் கூறிக்கொண்டிருக்கும்போது இவர் கேட்டுக் கொண்டே வந்துவிட்டால் தன் ஜென்மமே சாபல்யமாகி விட்டது போன்று பெருமிதமடைவார். மனதிற்குள் டாடாவும், பிர்லாவும் முதலாளிதான், நாமும் முதலாளி நான்‘ என்று நினைப்பார். ஆனால் உண்மையில் அவருக்க ஆயிரம் அல்லல்கள். அதுபோன்று தான் உங்கள் முதலாளிகள். அவர்களை ‘முதலாளி‘ என்று கூப்பிட்டு அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுத்து விடாதீர்கள். அதனால் அவர் நெஞ்சு நிமர்ந்து தான் ஒரு முதலாளிதான் என்று கர்வம் வரக்கூடும். ஆகவே அதற்கு இடம் கொடாதீர்கள்.

சங்கத்தைப் பலப்படுத்துக!

“அதுபோலவே நீங்கள் பொது மக்களிடம் மரியாதைப் பண்போடு நடந்து கொள்ளவேண்டும். பொதுமக்களும் டாக்சியில் ஏறியதும் தங்களைவிட டாக்சி ஓட்டுபவர்கள் கீழ்த்தரமானவர்கள் – என்ற நிலையில் தவறாகப் பேசக்கூடாது.

“உங்களை நீங்களே பலப்படுததிக் கொள்ள வேண்டும். அதற்குச் சரியான வழி சங்கத்தில் அங்கம் வகிக்காத ஆளே வேண்டும். நீங்கள் நாளொன்றுக்கு ஓரளவு பணம் சேர்த்தால்.

‘அறிவகத்திலே நாளொன்றுக்கும் வரும் வருமானத்தை விட உங்களுக்கு வருகிறதென்று நான் கணக்கிட்டுப் பார்த்தபோதே தெரிந்தது. ஆகவே, அம்முறையில் நீங்கள் சங்கத்தைப் பலப்படுத்திக் கட்டிக்காத்து வாருங்கள். உங்களுக்கு வேண்டியவைகள் என்னென்ன என்பதைச் சொல்ல எங்களை ஆளாக்கி விட்டுவிட்டீர்கள்.

நேரம் வருகிறது

உங்களுக்கு வேண்டியதைச் செய்வதற்கு மனமில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்களும் உங்களிடம் வரவேண்டிய நேரம் வந்து கொண்டிருக்கிறது – 1962 வருகிறது. உங்களுக்கு வேண்டிய நலன்களைச் செய்து தரவேண்டுமென்றும் தங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து வெற்றி தரவேண்டுமென்றும் கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 5.4.61)