அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் தந்த இரத்தக் காணிக்கை!

வழக்கு முடிவடைகிறது! சிறை அழைக்கிறது, சென்று வருகிறேன், செயலாற்றுங்கள்!

தன்னந்தனியே அல்ல – எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தரும் நால்வருடனும், சென்று வருகிறேன், எதிர்பார்த்ததுதான், எனவே, ஏக்கம் எழக் காரணமில்லை, அறப்போரின் விளைவு இது, எனவே, அகமகிழ்வே காரணமிருக்கிறது.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபடுகிறோம் – கஷ்ட நஷ்டம் ஏற்றுக் கொள்ளுதல் எனும் மிகச் சாமான்யமான விலையைக் கூடவா தராமலிருக்க முடியும்?

நாங்கள் ஐவரும், சிறை செல்வது குறித்து மனக் கொதிப்போ கஷ்டமோ கொள்ள வேண்டாம் – ஏறத்தாழ ஐயாயிவர் சிறை காலிழந்தார் மற்றொருவர், திராவிடம் இரத்தக் காணிக்கை‘ விடிவெள்ளி முளைக்கும் கட்டம்.

மகத்தான மக்கள் சக்தி!

நாம் கொண்டுள்ள கொள்கை சிலாக்கியமானது. மேற்கொள்ளும் முறைகள் அறநெறியினின்னும் வழுவதான நமது ஒபம் கண்ணியத்தையும், அமைதியும் கடைப்பிடித்து ஒழுகும், மகத்தானதோர் மக்கள் சக்தி. எனவே, நாம், நமது கடமையைச் செகய்கிறோம், ஆதிக்காரர் அஞ்சுகின்றனர், முறையிலே, நடக்கமுறைய வரவேற்கிறோம் – வெற்றிப் பாதை கருத்துக்குப் புலனாகிறது – தெளிவாக!

சிறை சென்று வருகிறோம், செல்லும் முன் எமது ஐவரிடம் நீங்கள் அனைவரும் கொண்டுள்ள நீங்காப்பற்றும், பிறர் கண்டு பொச்சரிப்புக் கொள்ளக்கூடிய அளவினதான பாசமும், எங்கள், நெஞ்சை நெகிழச் செய்கின்றன. நீங்கள் காட்டும் ஆர்வமும் ஆதரவும் எமக்கு ஆற்றலை வழங்கி, நம்பிக்கையை வளமாக்கி, எம்மைக் களிப்புக் கடலிலே தள்ளுகின்றன. வேறு எந்த கழகத்திலும் கட்சியிலும் காணக்கிடைக்காத ‘குடும்பப் பாசம்‘, தி.மு.கழகத்தில இருக்கிறது, கழகத்தின் வலிவும், பொலிவும் பெரும் பகுதி இதிலேதான் இருக்கிறது. எனவே, நாங்கள் சிறை சென்று திரும்பும்போது, இந்தக் “குடம்பப் பாசம்“ மேலும் இனிய தன்மையுடனும், பயனளிக்கம் உருவிலும் இருக்கும்படியான முறையிலே பணியாற்றி வந்தீர்கள் என்ற வெற்றியைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இறுதி வெற்றி நமக்கே!

கண்ணீருடன் பிறந்தோம் – காடு மேடுதான் நம் எதிரில் – தூய நோக்கமும் – தளரா ஊக்கமுமின்றிப் பிறிதோர் துணை இல்லை, துவக்கத்தில் – இன்றோ ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் விட்டு இருக்கிறது, தி.மு.க.கழகம். இந்த அரிய பணியிலே, பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற நாங்கள் உண்மையிலேயே பூரிப்படைகிறோம். இனி, நாங்கள் மேற்கொள்ளம் சிறைவாசமும், இந்தப் பணியிலே ஒரு பகுதியே என்று நம்புகிறோம் – அந்த நம்பிக்கையே, எமக்குச் செந்தேன்.

நாடு – கொந்தளிப்பிலேயே இருக்கிறது – அறப்போர்க் கோலத்தில் இருக்கிறது – ஆத்திரக்காரர்களின் ஆர்ப்பரிப்பும் சாகசமும் மாறி மாறிக் கொட்டியபடி உள்ளன – திராவிடம் எதையும் தாங்கிக் கொள்ளும் உரம் படைத்திருக்கிறது, எனவே இறுதி வெற்றி நமக்கே – அஞ்சேல்!

இப்போதே கூடத்தான், வெற்றி நமக்குத்தான் ஆதிக்கக்காரருக்கு அல்ல. நாடு அவர்களின் போக்கைக் கண்டிக்கிறது. நல்லவர்கள் கண்டிக்கின்றனர் – உலகம் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறது.

ஒரு இனம், !திராவிட) தன் விடுதலைக்காக அறப்போர் துவக்கி விட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் செய்தி, உலகுக்குத் தரப்பட்டாகி விட்டது – முக்கியமான செய்தி, தோழர்களே! மிக முக்கியமான செய்தி.

அலட்சியம், நெறித்த புருவம் இவை போதுமானதாகத் தோன்றவில்லை ஆட்சியாளருக்கு, அடக்கு முறையைத் துணைக்கு அழைத்திட வேண்டி இருக்கிறது – நமது வளர்ச்சியின் அறிகுறி இதுவென்பேன்.

நயவஞ்சக நரி – புன்னகைப் புலி!

எனவே, சிறை புகுமுன், செய்த பணியும், பெற்ற வெற்றியும் சாமான்யமானவை அல்ல, என்ற திருப்தியுடன் செல்கிறோம் – விட்ட இடத்திலிருந்து தொடங்கி வெற்றிப் பாதையிலே நடந்து, வாகை சூடிடும் ஆற்றல் படைத்த உங்களிடம், கழகத்தை ஒப்படைத்துவிட்டு, கழகத்தின் அகமும் புறமும் உங்கட்கு நன்க தெரியும் – புன்னகைப் புலிகளும், நயவஞ்சக நரிகளம் உலவுகின்றன – எனினும், கடமை துணை கொண்டு, அவைகளை விரட்டும் ஆற்றல் நமக்கு உண்டு, என்பதை உணர்கிறேன் – மகிழ்கிறேன்.

நாங்கள் உள்ளே இருக்கும்போது, கழகத்தின் கண்ணியத்தைப் பன்மடங்கு பொலிவுள்ளதாக்கும் வகையில், பணியாற்றுங்கள்.

இல்லந்தோறும் நல்லவர் உள்ளந்தோறும், தி.மு.க. சென்று இடம் பெற வழிவகை செய்யுங்கள்.

கழக இதழ் ‘நம் நாடு‘

பலாத்காரத்துக்குத் துளியும் இடம் தராதீர்கள், தாக்கினால் தாக்குவர் தாங்கிக் கொள்ளுங்கள் – தாயகத்தி்ன் தளைகளை உடைத்தெறியும் பணியில், ஈடுபட்டுள்ளோருக்கு, இந்த நெஞ்சு உரம் நிச்சயம் தேவை.

கழகத்தின் அன்றாடக் காரியங்களை, நாங்கள் வெளியே இருப்பதாக எண்ணிக்கொண்டே, எப்போதும்போல் செய்து வாருங்கள். கழக இதழ், ‘நம்நாடு‘ வளரும் ஏடு – அதனை வனப் புள்ளதாக்கும் பெரும் பொறுப்பும் உங்களைச் சார்ந்ததே அந்தக் கடமையை மறவாதீர்.

கழகத்தின் தலைமை நிலையப் பொறுப்புகளை ஏற்று நடத்த தோழர் ஏ.கோவிந்தசாமி, எம்.எல்.ஏ. முன்வந்துள்ளார். அவருக்கக் கழகத் தோழர்களும், கிளைக் கழகங்களும் முழு ஒத்துழைப்பை நல்கி, கழகத்தின் செயல் முறைகளையும், கட்டுப்பாட்டையும் வெற்றிகரமாக நடத்தித்தர வேண்டுகிறோம்.

சென்று வருகிறோம், செயலாற்றுங்கள்!

தூத்துக்குடி, கல்லக்குடி ஆகிய இடங்ககளில் நடைபெற்ற சம்பவங்களைப் பொறுத்து வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை வெற்றிகரமான முறையில் நடத்த, கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான எல்லாவிதமாக உதவிகளையும் – பொருள் உதவி உட்பட, செய்ய வேண்டும்.

போராட்டங்களில் ஈடுபட்டு மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தார் தக்க நஷ்ட ஈடு அளிக்கும்படி செய்வதுடன், கழகத் தோழர்களம் தங்களாலான உதவியைச் செய்ய வேண்டுகிறோம்.

சென்று வருகிறோம், தோழர்களே! சென்று வருகிறோம் செயலாற்றுங்கள்.

சி.என். அண்ணாதுரை
இரா. நெடுஞ்செழியன்
ஈ.வெ.கி. சம்பத்
கே.ஏ. மதியழகன்
என்.வி. நடராசன்

(நம் நாடு 1-9-1953)