அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

வேலப்பனும் வீரப்பனும்

வேலப்பன்:
ஆளுங் கட்சியான பிறகு
ஐயோ காங்கிரஸ் கட்சியிலே
கண்டவர் நுழைந்து கொண்டனரே!
கதருடை போட்டுக் கபடமுடன்
மாண்பும் மதிப்பும் மடிகிறதே
மகாத்மா கண்ட காங்கிரசில்.
சஞ்சலத்துடன் இதைச் சொல்லுகிறார்
சஞ்சீவியார், காங்கிரஸ் தலைவர்!

வீரப்பன்:
சஞ்சலப் படுவதில், புண்யமில்லை
வஞ்சகர் நுழைவைத் தடுத்திடலாம்
நடப்பது முற்றிலும் வேறப்பா!
நாடுகிறார்! ஓடித் தேடுகிறார்
பாடு பாடுபோரை அல்ல! அல்ல!
ஊரை அடித்து உலையில் போடும்
உத்தமரை! எத்தர்களை!!
தேர்தலில் பணத்தைச் செலவுசெய்ய
தேடுகிறார், பணமூட்டைகளை!
வலையை வீசுது காங்கிரஸ்
வஞ்சகர், சூதர், யாவருக்கும்.

வேலப்பன்:
ஆமாம், அதுவும் உண்மைதான்!
ஆகாதென்பது உண்மையென்றால்
அவர்களைக் காங்கிரஸ் சேர்க்கலாமா?
சேர்த்துக் கொண்டவரே, ஒருநாள்
கன்றும் பன்றியும் ஒன்றாச்சே எனக்
கதறிவிடுவதால் பயனில்லை.

வீரப்பன்:
காங்கிரசிலுள்ளவர் இலட்சணத்தை
காங்கிரஸ் தலைவரே, சொல்-விட்டார்.
காங்கிரசுக்கா, "ஓட்டு' இனி?
கபடம், சுயநலம், முடிசூடவா?
கேட்டிடுவோம். வா, நாட்டினரை.

வேலப்பன்:
கழகம் அதைத்தான் சொல்கிறது
அதன் கரமும் வலுத்தால், நீதிவெல்லும்.
கபடம் சுயநலம் உடைபட நாம்
போட்டிடுவோம் நம் ஓட்டுகளை.
"உதய சூரியன்' சின்னம் அதற்கே!

ஓட்டுக்கேட்குது காங்கிரசு
என்னை
ஓட்டாண்டியாக்கிவிட்டு

ஐயா! சோறு!
என்று
ஏழை
கேட்கிறான்
காங்கிரசார்
பதில், என்ன
தருகிறார்கள்
இதோ! நேரு பாரு!

(திராவிடநாடு - 10.12.1961)