அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இலவுகாத்த கிளி!
1

அமைச்சர் ந.ந. இராமசாமி -
வன்னியர் குலம் -
ஜாதி முறை -
புதுச்சேரி பொம்மைகள்

தம்பி!

மருத்துவர்களிலே பலவகை உண்டல்லவா - நோயின் மூலம் கண்டறியாமல், மருந்து கொடுத்துவிடுபவர்கள் - மருந்து பலனளிக்காமற்போனால், அதனை உண்டவன் பத்தியம் தவறிவிட்டான் என்று பழிபோடுபவர்கள் - மருந்து அபூர்வமானதுதான், ஆயிரம்போர் இதிலே குணம் கண்டனர், ஆனால், உன் "கிரஹம்' சரியாக இல்லை, அதனாலே பலன் ஏற்படவில்லை என்று கூறி கையை விரிப்பவர்கள்; இப்படிப் பல வகையினர் உண்டல்லவா! ஆனால், எந்த மருத்துவரும், தன் மருந்துண்டவனுக்கு நோய் தீராதது தெரிந்தும், அதனை மறைத்துவிட்டு, தன் மருந்து அபூர்வமானது, கைகண்டது, உண்டோரனைவரும் பலன் கண்டனர் என்று கூறிக்கொண்டி ருக்கமாட்டார். ஆனால், ஒரு மருத்துவர் தன் மருந்துதான் கைகண்டது, அதனையேதான் அனைவரும் உட்கொள்ள வேண்டும் என்று அங்காடியில் நின்று கூவுகிறார்; அவருடைய மருந்தை உட்கொண்டவரோ மனையில் இருந்து கொண்டு, ஐயோ! மார்வலி தாளமுடியவில்லையே! மயக்கம் வேறு மேலிடுகிறதே! குலையில் ஏதோ குத்துவதுபோலிருக்கிறதே! -- என்று கதறுகிறார்.

மருத்துவர் அளித்த மருந்து, நோயைத் தீர்க்கவில்லை என்பதைக் கூறிக் குமுறுவதுடன், மருத்துவர் தந்தது மருந்தே அல்ல, அவரை மருத்துவராகக் கொண்டதே பெருந்தவறு, தீங்கிழைத்துவிட்டது என்று கூறிக் கைபிசைந்து கொள்கிறார்; அட பாவமே! மிகமிக நம்பிக்கையுடன், மருந்து உட்கொண் டாயே, பலனே இல்லையா? என்று பச்சாதாபத்துடன் கேட்பவரிடம், "ஆமய்யா ஆம்! நம்பினேன், ஏமாற்றம் கண்டேன்; மருத்துவர் கேட்ட தொகையை முகங்கோணாமற் கொடுத்தேன், ஆனால் நோய் போகவில்லை, நொந்துகிடக்கிறேன், மனம் வெந்துகிடக்கிறது' என்று கூறுகிறார்.

அதேபோது, வேறோர் புறத்திலே மருந்தளித்த மருத்துவர் மார்தட்டுகிறார், மன்றத்தில் கூறுகிறார்.

நல்ல மருந்து
நலிவு தீர்க்கும் மருந்து
நான் கண்ட மாமருந்து
நமது பிணி எலாம் ஒழித்திடும் ஒரே மருந்து!

என்று புகழ்ப்பண்ணே பாடுகிறார்.

மருந்து பலனளிக்கவில்லை என்பதைக் கூறிக் குமுறும் நோயாளியின் குரலில், வேதனை ததும்புகிறது! நான் கண்டறிந்த மருந்து கைகண்டது என்று பெருமை பேசும் மருத்துவரின் குரலிலேயோ, பெருமிதம் பொங்குகிறது!

எங்கு நடைபெறுகிறது இத்தகைய நிகழ்ச்சி என்று கேட்கிறாயா தம்பி! எங்கு நடைபெறும்? எதையும் எளிதாக நம்பிடும் நல்லவர்கள் ஏராளமாக உள்ள தமிழகத்தில் தவிர!

அண்ணா! உனக்கு ஏதோ உடல் நலமில்லையாமே, அதனாலே உள்ளம் உறுத்தி, மருத்துவ முறைகள் குறித்து எழுதத் தலைப்பட்டனையோ என்று கேட்கத் தோன்றும். தம்பி, நான் குறிப்பிடுவது உடற்கூறு பற்றிய மருத்துவம் அல்ல; சமூகத்திலே நெளியும் நோய் நீக்குவதற்கான மருத்துவர்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்; அதிலே ஏற்பட்டுள்ள வேதனை தரும் நிலைமையை விளக்க, எடுத்துக்காட்டாக, மருத்துவர் கதை சொன்னேன்.

இனி, நோயாளி கதறுவதைக் கேள், தம்பி!

அன்றைக்குச் சுமை தாங்கிய வன்னியன் இன்றைக்கும் சுமைதாங்கிதான்.

அன்று கழனியிலே கஷ்டப்பட்ட வன்னியன் இன்று அதிகமாகக் கஷ்டப்படுகிறான்.

அன்று குமாஸ்தாவாக இருந்த வன்னியன் இன்றும் குமாஸ்தாவாகவே காட்சியளிக்கிறான்.

குலையில் குத்தல் - கண்களில் எரிச்சல் - மண்டையில் குடைச்சல் - என்று நோயாளி கூறித் தவிப்பதுபோலில்லையா, இந்தப் பேச்சு.

மருந்து உட்கொள்ளுவதற்கு முன்பு இருந்ததைவிட, நோய், அதிக வேதனை தருவதாகிவிட்டது என்றல்லவா நோயாளி கூறுவது கேட்கிறது.

நோயாளி யார்? வன்னிய சமூகம்!

மருந்து என்ன? இரண்டு அமைச்சர்களைப் பெற்றது.

மருந்து சாப்பிட்ட பலன் என்ன? நோய் அதிகமாகி விட்டது என்று அவதிக்கு ஆளான வன்னியத் தோழர் கூறுகிறார்.

வன்னிய சமூகத்தின் உரிமை இதழாகத் திகழ்ந்துவரும் "உழைப்பாளி'யில், வன்னியன் அன்றுபட்ட அவதி இன்று குறையக் காணோம் என்று வன்னிய குலத்தவர் ஒருவரே மனம் நொந்து எழுதுகிறார்.

மருத்துவரோ, கூசாமல், குன்றாமல், அச்சம் காட்டாமல், பச்சாதாபப்படாமல், மறுப்பார்களோ, கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாமல், தமது மருந்தினைக் கூவிக் கூவி விற்கிறார்.

"வரப்போகும் பொதுத் தேர்தலில் மக்கள் ஒன்று பட்டு, காங்கிரஸ் வெற்றிபெறப் பாடுபடவேண்டும். அதன் மூலம் பிற்பட்ட மக்கள் பல நன்மைகளை அடையமுடியும். இதர கட்சிகளின் பிரசாரங்களுக்குச் செவி சாய்க்கக் கூடாது!''

அமைச்சர் S.S. இராமசாமிப் படையாச்சியாரின் பேச்சு, தெற்கே, அவர் வரவேற்கப்பட்ட ஓரிடத்தில் திருவாய் மலர்ந்தருளியது!

காங்கிரஸ்தான், பிற்பட்ட மக்களின் பிணிபோக்கும் மாமருந்து என்று, அம்மருந்தினை வன்னிய மக்கள் உட்கொள்ளச் செய்த அரசியல் மருத்துவர், கூறுகிறார், தம்பி! மருத்துவர் இப்படிப் பேசுகிறார், நோயாளி மனம் நொந்து பேசியதை (முழுவதும் அல்ல) நான் முதலிலே, எடுத்துக் காட்டினேன்.

மருத்துவர்களிலே, இப்படிப்பட்ட மனதிடமும், உண்மையை மறைத்திடும் திறமும், அநேகருக்கு ஏற்பட முடியாது! புடம்போட்டதில் தவறோ, அரைவையில் பதம் இல்லையோ, காய்ச்சியதிலே தரம் குறைந்ததோ, ஒரு குண்டு மணி "வீரம்' அதிகமோ, பூரம் போதுமான அளவு சேர்க்கவில்லையோ என்று தமது மருந்து முறையிலே ஏற்பட்டுவிட்ட குறை ஏதேனும் இருக்கக்கூடும் என்றுதான் எந்த மருத்துவரும் எண்ணுவாரே தவிர, சுமைதாங்கி சுமைதாங்கி யாகவே இருந்து கஷ்டத்தைச் சுமக்கிறோமே! என்று வேதனையுடன், வன்னியர் நிலை குறித்து, வன்னியரின் உரிமைக்காகப் பாடுபடும், "உழைப்பாளி'யில் ஒரு வன்னியர் எழுதி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியும், அதனை மறைத்து விட்டு, அல்லது அலட்சியப்படுத்திவிட்டு, வன்னியர் போன்ற பிற்பட்ட வகுப்பாருக்குள்ள பிணிபோக்கும் மாமருந்து காங்கிரஸ் ஒன்றுதான் என்று அரசியலில் மருத்துவராக உள்ள இராமசாமி மந்திரியார் கூறுவதுபோல, எந்த மருத்துவரும் கூறத் துணிய மாட்டார்கள்!

மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியாரும் மந்திரிகள்!!

தம்பி! இவர்கள், மந்திரிகளாக மட்டுமல்ல, மந்திரி சபைகளை அமைக்கும் உரிமையும் வலிமையும் பெறவேண்டு மென்பதிலே, நான் மிகுந்த அக்கறை கொண்டவன்; ஆனால் எந்த நோக்கத்துக்காக இவர்களை, வன்னிய சமூகம், தலைவர்களாகக் கொண்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்கான, முழு அதிகாரமும் வசதியும் பெற்ற நிலையில், மந்திரிகளாகத் திகழவேண்டும் என்று ஆசைப்பட்டவன்.

எனக்கு, மாணிக்கவேலரிடம் தொடர்பு அதிகம் ஏற்பட்ட தில்லை; ஆனால் S.S. இராமசாமி அவர்களிடம், தோழமை அளவுக்குச் செல்லக்கூடும் என்று நான் ஆசைகொள்ளும் தன்மையில், எனக்குத் தொடர்பு இருந்தது.

அவர், தமக்குக் கிடைத்த வலிவையும் வாய்ப்பையும், வகுப்பு மூலம் கிடைத்த ஆதரவையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே, பதவிப்பாசம் விட்டுப்பணியாற்றி, பிற்பட்ட வகுப்பினரின் நம்பிக்கைக்கும் பிரியத்துக்கும் உரிய பெருந்தலைவ ராக உருவெடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையும், ஆவலும் கொண்டிருந்தேன்; ஆனால் ஆசையுடன் காய் கனியட்டும் என்று நாம் இருக்கும் நேரத்தில், அணில் கொத்தித்தின்று விடுவதுபோல, பிற்பட்ட வகுப்பினரின் பெருந்தலைவராக வளர்ந்திருக்கவேண்டியவர், மந்திரியானார்; அந்தப் பதவியில் சிக்கிக்கொண்டதும், வகுப்புக்குக் கட்டுபடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமற் போனதுடன், வன்னிய சமூகப் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் அமைத்த உழைப்பாளிக் கட்சியை, அவரே, கூசாமல் குமுறாமல், வெட்டிப் புதைத்துவிட்டார்!

அவர் பேசுகிறார், பிற்பட்ட மக்களுக்குப் பிணிபோக்கும் மாமருந்து, காங்கிரஸ் ஒன்றுதான் என்று!

அவரால் ஊட்டப்பட்ட மருந்து, நோயைத் தீர்க்கவில்லை, என்பதை நொந்த உள்ளத்துடன் "உழைப்பாளி' எடுத்துக் காட்டுகிறது.

வன்னியர் இருவர் அமைச்சர்களாகி விட்டனரே என்று பொறாமை கொண்ட, பிற வகுப்பு ஏட்டிலே, யாரோ வழிப் போக்கன் எழுதுவதல்ல; இந்த இருவர் அமைச்சர் கோலம் பூண்டது கண்டு குதூகலம் கொண்ட வன்னிய சமூகத்தின் ஏட்டில், ஒரு வன்னியர் எழுதுவது என்பதை, ஏனோதானோ என்ற போக்கினருக்கும், இவர்கள் இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவர் என்று நமது கழகம்பற்றி அலட்சியம் காட்டுவோருக்கும் எடுத்துக் கூறு, தம்பி!

முன்பு இருமி ஈளைகட்டிக் கிடந்தது, என் மருந்து உட்கொண்ட பிறகு, வாலிப முறுக்கு வந்துவிட்டது.

உருகிக் கருகி இருந்தவன், இன்று என் மருந்தின் பலனால், இரும்பையொத்த வலிவும், பொன்னையொத்த பொலிவும் பெற்றுத் திகழ்கிறான்.

எடுத்தடி வைத்தால் மேல் மூச்சு வாங்கும் நிலையில் இருந்தவன், நான் தந்த மாமருந்தை உட்கொண்டதால், புலியை வேட்டையாடிக் கொல்லும் வீரம் பெற்று விளங்குகிறான், என்றெல்லாம், விவரம், விளக்கம் அளித்துவிட்டு, மருத்துவர் தம்மிடம் உள்ள மருந்து அபூர்வமான சக்தி வாய்ந்தது என்று சொன்னாலாவது, பரவாயில்லை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை, நான் அமைச்சராவதற்கு முன்பு, இத்துணை அலங் கோலமாக இருந்தது - நான் பதவியில் அமர்ந்த பிறகு, இந்த அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது என்று எடுத்துக்காட்ட முடிந்ததா? முடியுமா?

பிற்படுத்தப்பட்ட மக்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு கல்வித்துறையிலே, இத்துணை மோசமான நிலையில் இருந்தனர், நான் அமைச்சரான பிறகு, அவர்களின் நிலைமை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டது! என்று காட்டினாரா? காட்டவில்லை! காட்டுவதற்கு ஒன்றும் இல்லை!

பிற்பட்ட மக்களுக்குச் சமூகத்தில தரப்பட்டுள்ள இடம், அநீதி நிரம்பியதாக இருந்தது, நான் அமைச்சராகா முன்பு; இப்போது அவர்களின் நிலைமை உயர்ந்திருக்கிறது என்று கூற முடிகிறதா? அதுவுமில்லை! ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ்தான் இரட்சகன் என்பதற்கு, அவர் காட்டும் ஆதாரம் என்ன?

வேறென்ன ஆதாரம் காட்டவேண்டும், என்னைப் பாருங்கள்! என்றுதான் அவரால் கூற முடியும்!

ஆனால், பிற்பட்ட வகுப்பினரின் பிரச்சினைக்குப் பரிகாரம் காணவும், அவர்களை முன்னேறச் செய்யவும் அதிகாரமோ, சட்டபூர்வமான வாய்ப்போ பெறாமல், அமைச்சராகமட்டும் இருப்பதனால், பிற்பட்ட வகுப்பு மக்களுக்கு, என்ன பலன்? என்று கேட்டால் என்ன பதிலளிப்பார்?

ஆனால் யார் கேட்பார்கள்? கேட்பவர்களை, தேசத் துரோகி - காங்கிரஸ் விரோதி - என்று கூறினால், வாயடைத்துப் போகிறார்கள்; அதற்கா நமக்கு வழி தெரியாது! என்றெண்ணி மகிழ்கிறார்கள், இந்தத் தலைவர்கள்.

ஆனால், அமைச்சர்கள் இருவர் நம் வகுப்பினர் என்பதிலே இயற்கையாக எழக்கூடிய, எழவேண்டிய மகிழ்ச்சியால், அந்த வகுப்பு இளைஞர்கள் அனைவரும், மயங்கிக் கிடந்துவிட வில்லை; உண்மை அவர்கள் உள்ளத்தை உறுத்தத்தான் செய்கிறது; ஓரோர் சமயம், அவர்களால் தம் மனக்குமுறலை வெளியே கொட்டிக் காட்டாமலுமிருக்க முடியவில்லை. அதனாலேதான்,

"நாம் அன்று எந்த இலட்சியத்துக்காக பொதுக்கூட்டங்கள் போட்டு, ஊர்வலங்கள் நடத்தி, மாநாடுகள் கூட்டி, முரசு முழங்கினோமோ, அந்தக் கோரிக்கைகள் இன்று வரை கண்டோமில்லை''

என்று, 1-7-56-ல் "உழைப்பாளி' எழுதுகிறது.

"வன்னியர் முன்னேற்றத்திற்காகத்தான் மந்திரிப்பதவி வகித்து வருகிறேன் என்று மார்நிமிர்ந்து கூறும் நம் இன மந்திரியைக் கேட்கிறோம், நீங்கள் பதவியேற்று ஆண்டுகள் சில உருண்டோடியதே இதுவரை சாதித்தது என்ன?'' என்று "உழைப்பாளி' உரிமையுடன் இடித்துக் கேட்கிறது.

கைகண்ட மருந்து என்று வேறோரிடத்தில், அங்காடியில் கூவிக் கூவி விற்கிறார் அமைச்சர்.

ஊர்சுற்றிவருவதில் பயனொன்றும் இல்லை என்றும், இம்மாதிரி சூழ்நிலையை வளரவிடுவது நம் சமூகத்திற்கே ஆபத்து, என்றும் "இலவு காத்த கிளிபோல்' ஆகிவிட்டோம் என்றும், கோபம், சோகம், திகைப்பு, கண்டனம் எனும் எல்லாவற்றையும் கொட்டிக்காட்டுகிறது, "உழைப்பாளி'!

தம்பி! அரசியலில் இப்படிப்பட்ட மருத்துவர்கள் இடம் பெற்றுவிட்டதால், பிணி குறையாததுடன், பிணி போக்கிக் கொள்ளும் முறையையும் மறந்துபோய், உழைப்பாளிகள் நோயாளிகளாகி நொந்துகிடக்க நேரிட்டுவிடுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவன் யார்? பிணிபோக்கும் மாமருந்து யாது? என்பதைக் கண்டறிந்து பலன் காணுமுன்பு, நோய் என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதல்லவா தெரிய வேண்டும்.

ஏழ்மை, அறியாமை என்பவைகள், சமூகம் முழுவதிலும் கப்பிக்கொண்டிருக்கும் பிணி.

உழைப்பின பலன் உலுத்தருக்குப் போய்ச் சேரும் விதமாக அமைந்துவிட்டிருக்கும் அக்ரமத் திட்டம்; மனதில் குருட்டறிவும் இருட்டு நிலையும் மூட்டப்பட்டுவிட்டதால் ஏற்பட்டுவிட்ட கேடு, ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம்.

ஏழ்மை, அறியாமை எனும் பிணிபோக்கப்பட வேண்டும் என்று பொதுவாகப் பேசி, பொதுவான பரிகாரம் தேடாமல், பொதுவான மருத்துவ முறையை நாடாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சினை என்று, தனியாகக் கோடிட்டுக் குறிப்பிடப்பட்டு வருகிறதே, அதன் உட்பொருள் என்ன?

அதனை அறிந்துகொள்ள, தம்பி, பிற்பட்ட வகுப்புப் பிரச்சினையையே ஆராய வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்ச - ஐரோப்பிய நாடுகளிலே அதிகம் அடிபடுவதில்லை.

மலை ஜாதி மக்கள் - நாடற்றவர்கள் - என்று சில சமயம் பேசப்படுவதுண்டு. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற பேச்சுக்கு அங்கெல்லாம் உள்ள சமூக அமைப்பு இடமளிப்ப தில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைமை அங்கெல்லாம் இல்லை.

"இந்தியா'வில்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சமூகத்தில் ஒரு பிரிவு காணப்படுகிறது; இந்தப் பிரிவும் மிகப் பெரிது.

தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசிகள், மலைஜாதியினர், நாடோடிக் கூட்டத்தார், என்போர்களைச் சேர்த்தல்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்று பேசுவது; இவர்களையும நீக்கிவிட்டுப் பார்த்திடும் போதே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொகை, மிகப் பெரிதாகக் காணப்படுகிறது.

இதனைக் கவனிக்கும்போது, இங்குள்ள சமூக அமைப்பின் அவலட்சணம் விளக்கமாகத் தெரியும் - வேதனையும் பிறக்கும்.

சமூகத்தில் மிகப் பெரும் அளவு மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்.

பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அரசியலிலும் அலுவலகங்களிலும் இடம், எனும் இவைகளிலெல்லாம் பிற்படுத்தப்பட்டு, தாழ்நிலை தரப்பட்டு, கவனிப்பாரற்று, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு உழல்பவர்கள் என்பது பொருள்.

உழைக்கவும் அதன் உறுபயனைப் பிறருக்குக் கொட்டி ஏமாறவும், உழைக்கவும் அதன் காரணமாகவே தாழ்நிலையில் தள்ளிவைக்கப்படவும், உழைக்கவும் அதனாலே, கல்வித் துறையில் முன்னேற உத்தியோகத் துறையிலே இடம்பெற, அரசியலில் அந்தஸ்து பெற இயலாமல், உழைத்துக் கிடப்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள் போன்றதோர் நிலை பெற்று நொந்து கிடப்பவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

உடலில் திடமுண்டு, உழைப்பில் தரம் உண்டு, உள்ளத்தில் திண்மை உண்டு, ஆனால் சமூக அமைப்பிலேயோ, இவர்களுக்கு, நாலாந்தர, ஐந்தாந்தர இடமும் தரப்படுவதில்லை.

உழைப்பின் பலனாகக் கிடைக்கும் "விளைவுகள்' அவ்வளவும், மேலும் மேலும் இவர்களைப் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இறக்கிவிடத்தான் செய்கிறதே தவிர உழைத்தனர், உயர்ந்தனர் என்று பேசத்தக்க நீதியான நிலை ஏற்படச் சமூக அமைப்பு இடம் தரவில்லை.

நல்ல உழைப்பாளி! - என்று பேசும்போது, பாராட்டு கிறார்கள் என்று பொருள் அல்ல, எஜமானர்கள் தம் ஊழியர்களின் "சேவை' கண்டு மகிழ்கிறார்கள் - தட்டிக் கொடுக்கிறார்கள் என்றுதான் பொருள்.

இந்த வேதனையை, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள், இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்கள்.

அவர்களிடம் உள்ள தொழில் திறமை - கைவண்ணம் - அவர்கட்கு, சமூகத்தில் உரிய இடத்தைப் பெற்றுத் தருவதில்லை, "ஜாதி முறை' தான், அவர்களுக்கு இன்னதுதான் இடம் என்று நிர்ணயிக்கிறது.

அரசிளங்குமரியின் அழகுக்கு அழகு தரும் அற்புதமான நவரத்ன மாலை செய்தளிக்கவல்ல தொழில் திறமை இருக்கலாம் - ஆனால் அந்தத் திறமையை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலால் சமூகம் பெறக்கூடிய பயனை அளவுகோலாகக் கொண்டோ, அந்தத் தொழிலில் ஈடுபட்டவனுக்கோ - அந்த வகுப்புக்கோ இடம் அளிக்கப் படுவதில்லை - அந்த வகுப்புக்கு உரிய இடம் இது என்று ஜாதி முறை குறிப்பிட்டு, சமூகச் சம்பிரதாயமும், அதற்கு அரணாக அமைந்த சட்டமும் எந்த இடத்தைத் தருகிறதோ, அதுதான், அந்த வகுப்பினருக்குக் கிடைக்கிறது.

கடினமான உழைப்பினைத் தந்து, சமூகம் நிலைக்கவும், வளரவும், நேர்த்தி பெறவும் தேவைப்படுகிற தொழில்கள் செய்து 798 தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி ஒன்று 799 வரும் உழைப்பாளர்கள், பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வைக்கப் பட்டு, இந்தச் சூதான திட்டத்தைக் கண்டறிந்ததிலும், நிலைநாட்டினதிலும், பாதுகாப்பதிலும் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் திறமையைக் காட்டி வந்தவர்கள், முற்போக்கு வகுப்பினராகவும் இருந்துவரும், மோசமானதோர் சமூக அமைப்பு இங்கு இருப்பதுபோல, வேறு எங்கும் இருந்திட அனுமதித்ததில்லை.