“சதாசிவம்! முழுத்தோல்வி!
அந்த மங்கா என்னைப் பற்றி மலர்க்கொடியிடம் ஏதேதோ கூறிவிட்டாள்.
இனி என்னால் அவளை அடைய முடியாது. கலியாணம் செய்து கொள்வதனாலும்
நடக்காது. என் மீது அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பு உண்டாகிவிட்டது”
என்றான் சங்கரன். “நான்சென்ஸ்! அப்படித்தான் இருக்கும்
முதலிலே, பாபம்! நீ கலியாணம் செய்து கொள்வாய் என்று நம்பினார்கள்.
இப்போதுதானே விஷயம் தெரிந்தது. அதனால்தான் ஆத்திரம் அவர்களுக்கு.
போகப் போகத் தணிந்து விடும். நீ மட்டும் சற்று பிகுவாக
இருக்க வேண்டும். ஏதோ சோகமடைந்தவனைப் போல இருந்தால்
அவர்கள் வழிக்கு வரமாட்டார்கள்” என்றான் சதாசிவம். ‘நண்பா!
எனக்கு ஒரு பயமிருக்கிறது. வேறு யாராவது மலர்க்கொடியை
மணம் புரிந்து கொண்டால் என்ன செய்வது. பிறகு நான் என்னாவது?’
என்றான்.
“அதற்கெல்லாம் தக்க ஏற்பாடுகள் செய்கிறேன். எழுந்திரு!
வெளியே போய் சற்று ‘ஜாலியாக’ இருப்போம், உன் மனமும்
சாந்தியடையும். வா போவோம்!” என்றழைத்தான் சதாசிவம்.
“எங்கே போவது?”
“ஜீவா வீட்டுக்கு”
“ஜீவாவா, யாரது?”
“வந்து பார்! உன் மலர்க்கொடி, கிலர்க்கொடியை எல்லாம்
தூக்கித் தூரப்போட்டு விடுவாள். மந்திரசாமித் தெருவுதாசி,
ஜீவா தெரியாதோ உனக்கு.”
“சீச்சி! நான் வரமாட்டேன். யாராவது கண்டால் ஏதாவது சொல்வார்கள்.”
“சொன்னார்கள்! வா, போவோம்” - என்று வலிய சங்கரனை அவன்
தோழன் தன் கூத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
* * *
ஜீவா ஜடைவாரிக் கொண்டிருந்தாள். மேற்பூச்சு வேலைகள் இல்லை.
அது மாலையிலே நடக்கும். இருந்த போதிலும் பரவாயில்லை.
கண்ணுக்குக் காட்சியாகத்தான் இருந்தாள். ஆனாலும் அதனை
உணர்ந்தவர் அநேகர் என்பது, ஜீவாவின் கன்னங்களிலே பளபளப்பு
குறைந்ததிலிருந்தே தெரிந்து கொள்ளக்கூடும். “சங்கர்!
இதோ பார், என் ஜீவாவை. மலர்க்கொடி மலர்க்கொடி என்று
அழுகிறாயே தம்பி, இதோ பாரப்பா பார்” - என்றான் சதாசிவம்.
சங்கரனுக்குக் கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருந்தது, என்னடா
இது - இவ்வளவு பச்சையாகப் பேசுகிறானே என்று. ஒரு மாதின்
எதிரிலே அவளைவிட மற்றொருத்தி அழகு என்று சொல்வதைப்போல்
ஆபத்துண்டோ! “சொல் அப்பா! யார் அழகு? என் ஜீவாவா மலர்க்கொடியா”
- என்று மறுபடியும் கேட்டான் சதாசிவம்.
“உனக்கு ஜீவா அழகு - எனக்கு மலர்க்கொடி” என்று சமரசமாகக்
கூறினான் சங்கரன்.
“எந்த மலர்க்கொடியைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்த நாடகக்காரி
பெண்ணா!” என்று ஜீவா கேட்டாள். “ஆமாம்” என்றான் சதாசிவம்.
“அவள் அழகுதான்! டிராமாகாரிகள் அழகில்லாமல் இருப்பார்களா!
அவர்களுடைய பார்டர் சேலையும், கர்ல் கூந்தலும், தளுக்கும்
குலுக்கும், எங்களுக்கு எங்கிருந்து வரும்? நாங்கள் பரம்பரையாகப்
பார்த்தசாரதி கோவிலுக்கு முத்திரை! ஏதோ ராமா, கோவிந்தா,
கிருஷ்ணா என்று காலங்கழிப்பது” என்று ஜீவா தன் பெருமையைப்
பேசினாள். “கேள் ஜீவா கதையை, அந்தக் கூத்தாடி சிறுக்கியை!
கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம் இவர்! நான் மட்டும்
இல்லாவிட்டால், அந்த மங்கா மெதுவாக என் நண்பனை மாட்ட வைத்து
விட்டிருப்பாள். ஆசாமி தலைகால் தெரியாமல் ஆடினான்” என்றான்
சதாசிவம்.
சங்கரன் “இதேது தொல்லையாகப் போச்சு! நான்தான் விட்டுவிட்டேனே
அந்த எண்ணத்தை” என்று கூறினான்.
“அது இல்லை, என்ன அவள் அவ்வளவு அழகு? அவளைக் கண்டு இவர்
எப்படிச் சிக்கிக் கொண்டார்! இவரைப் பார்த்தால் ராஜா
போல இருக்கிறதே. அவள் என்ன ஏதோ சிவப்புத் தோலும், நாரும்
நரம்புமாக இருக்கிறாள். அவ்வளவு அழகா அவள்” என்று ஜீவா
சங்கரனைக் கேட்டாள். “என் கண்களுக்கு...” என்று இழுத்தாற்போல்
பதில் சொன்னான் சங்கரன்.
“ராஜா மெச்சினது ரம்பை” என்றாள் ஜீவா. சம்பாஷணை வளர்ந்து.
கடைசியிலே ஜீவா மலர்க்கொடியைப் பற்றி சொல்லாத ‘சொட்டு’
இல்லை. ‘அவள் கண் திருட்டுக் கண். கைகால்கள் நோயாளிக்கு
இருப்பதைப் போல் இருக்கிறது. தலைமயிர் ஆயிரத்தெட்டு கோணல்!
ரொம்ப கர்வம்; நடப்பது அசல் டிராமா நடை. சிரிப்பு வெறும்
சூது” என்று ஜீவா அடுக்கடுக்காக அடுக்கினாள்.
சங்கரன் அவ்வளவையும் கேட்டுக் கொண்டே இருந்தான்.
ஒரு வாரத்துக்கு முன்பு மட்டும், வேறு யாரேனும் மலர்க்
கொடியைப் பற்றி ஜீவா சொன்னதைப் போல ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும்
சங்கரன் துள்ளியிருப்பான். இப்போது அப்படியில்லை.
முன்பு மலர்க்கொடி காதலி; இப்போது டிராமாக்காரி. எனவே,
தன் எதிரிலேயே அவள் இழிவாகப் பேசப்பட்டும், காது கொடுத்துக்
கேட்டுக் கொண்டும், இடையிடையே சிரித்துக் கொண்டும் இருந்தான்
சங்கரன்.
அன்று ஆரம்பமான பொழுதுபோக்கு, அன்றோடு நின்று விடவில்லை;
ஜீவா வீட்டுக்குத் தினமும் இரு தோழரும் போக ஆரம்பித்தனர்.
அங்குதான் மாலை வேளையிலே ‘டீ’. பல நாட்கள் அங்கு விருந்து.
மேலும் கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு சதாசிவம் வராவிட்டாலும்
சங்கரன் போவது என்ற முறை வளர்ந்து முடிவிலே ஜீவாவே சங்கரனின்
வைப்பாட்டியாகவும், சதாசிவம் சங்கரனின் விரோதியுமாகி
விட்டான். பரீட்சையில் சங்கரன் தோற்றான். சதாசிவம் ஊர்
பூராவும் சங்கரன் மீது பழி தூற்ற ஆரம்பித்து விட்டான்.
எங்குப் பார்ப்பினும் சங்கரன் பேச்சுதான். “இப்படியா இந்தப்
பிள்ளை கெட்டுவிட வேண்டும். ஐயோ பாவம்! ஏதோ படித்தான்,
கொண்டான்; கடைசியில் ஜீவா வீட்டிலேயே குடிபுகுந்து விட்டானாமே”
என்று ஊரார் பேசிக் கொண்டனர்.
மலர்க்கொடிக்கும் இந்தச் சேதி எட்டிற்று. மிக மனம் வருந்தினாள்.
என் செய்வாள் மங்கை. ஏங்கினாள் தன் காதலனுக்கு நேரிட்ட
கதியை எண்ணி!
மலர்க்கொடியின் மனம் புண்ணாவது தெரிந்த மங்கம்மாள் சில
காலம் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று வருவது என்று
தீர்மானித்தாள். சிலோனுக்குப் போக ஏற்பாடு செய்து விட்டார்கள்.
புறப்படுவதற்கு முன்னால் மலர்க்கொடிக்கு எப்படியாவது
சங்கரனைக் கண்டு பேசிவிட்டுப் போக வேண்டுமென்ற எண்ணம்.
ஜீவா வீட்டுக்கு ஆள் விட்டார்கள். சங்கரன், “ஆகட்டும்;
நாளைக்கு வந்து பார்க்கிறேன்” என்று கூறி முடிப்பதற்குள்,
“அவர் அங்கே வரமாட்டார். ஏன் அந்தச் சிறுக்கிதான் இங்கு
வருவதுதானே! வந்தால் அவள் கௌரவம் குறைந்து விடுமா, என்ன?”
என்றாள் ஜீவா.
வந்த வேலையாளுக்குச் சங்கரன் ஒரு காலத்தில் மலர்க் கொடியிடம்
எவ்வளவு அன்பு வைத்திருந்தான் என்பது தெரியும். எனவே,
அவன் ஜீவாவின் துடுக்கான பேச்சுக்குச் சங்கரன் என்ன பதில்
கூறுவானோ என்று எதிர்பார்த்தபடி இருந்தான். ஜீவா தயாரித்த
கிராமபோன் பிளேட்டைச் சங்கரன் பாடினான். “ஆமாம், அவ்வளவு
அக்கறை இருந்தால் அவளை இங்கு வரச் சொல்” என்று கூறினான்.
மலர்க்கொடியும் மங்கம்மாளும் சிலோனுக்குச் சென்று பல
மாதங்களாகி விட்டன. சங்கரன் அவர்களை மறந்தும் விட்டான்.
ஜீவாவிடம் ஜீவனைக் கொடுத்ததுடன் நிற்காது, மேலும் பல
தொல்லைகளைத் தானாக வரவழைத்துக் கொண்டான். பெண்களிடம்
அவனுக்கு அதுவரை இருந்து வந்த கூச்சம் பறந்து விட்டது.
ஜீவாவுக்குத் தெரிந்த பெண்களிடமெல்லாம் வெகு தாராளமாகப்
பழக ஆரம்பித்தான். அது ஜீவாவுக்குக் கொஞ்சம் கஷ்டந்தான்.
தாசி என்றபோதிலும் அவள் ஒரு பெண்ணல்லவா! அதிலும் இவன்
மீது அவளுக்குக் கொஞ்சம் இஷ்டமுங்கூட. சொத்துப் போய்,
பரீட்சை போய், வேலையின்றிக் கிடந்த சங்கரனின் வீண் அதிகாரத்தைக்
கூட ஜீவா பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள்.
“இன்னும் ஒரு மாதத்திலே வேலை வரப்போகிறது. அதுவரை பல்லைக்
கடித்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன செய்வது ஜீவா.
உன்னாலே நான் கெட்டேன். என்னாலே நீ கெட்டாய்” என்பான்
சங்கரன்.
“எனக்கென்னமோ உங்கள் போக்கே பிடிக்கவில்லை. நல்ல குடும்பத்திலே
பிறந்து, செல்வமாய் வளர்ந்து, படித்து, கடைசியில் இப்படிக்
கெட்டுவிட்டீர்கள். என்னமோ என் மீது ஆசை வைத்து வந்தீர்கள்.
அத்தோடு நின்றீர்களா? ஏதோ வேலை பார்த்து, சம்பாதித்து
எனக்குக் கொடுத்து, நாம் குடியும் குடித்தனமுமாக இருக்கக்
கூடாதா? போன மாதத்திலே ‘செயின்’ மார்வாடி கடைக்குப் போச்சு.
இந்த மாதம் இந்த வளையல் போகப் போகிறது” - என்று அழுதபடி
சொன்னாள் ஜீவா.
“அழாதே, ஜீவா! நான் நிச்சயம் அந்த நகைகளை எல்லாம் மீட்டுக்
கொடுக்கிறேன். அடுத்த மாதம் வேலை நிச்சயம் கிடைக்குமாம்.
எதிர்வீட்டில் இருக்கிறாரே, எத்திராஜ் நாயுடு அவர் சொன்னார்”
என்றான் சங்கரன்.
மறுநாள் ஜீவா, எதிர்வீட்டு எத்திராஜலு நாயுடுவை அழைத்துக்
கேட்டாள். அவர் ஒரு சீமை சாராயக் கம்பெனியிலே வேலை பார்த்துக்
கொடுப்பதாகச் சொன்னார். ஜீவா தனது கஷ்டங்களை அவரிடம்
கூறி, “எனக்கு அவரை விட்டால் கதி இல்லை. அவரும் உற்றார்
உறவினரை எல்லாம் விட்டு என்னிடமே வந்து விட்டார். ஏதோ
நீங்கள் இந்த உதவி செய்தால் மெத்த புண்ணியமுண்டு” என்று
வேண்டிக் கொண்டாள். ‘ஆகட்டும்’ என்று கூறிவிட்டுப் போனார்
அவர். எதிராஜலு நாயுடுவை ஜீவா கூப்பிட்டுப் பேசிய சேதி
சங்கரனுக்குத் தெரிந்தது. அவ்வளவுதான். அவனுக்குக் கோபம்
பொங்கி விட்டது. குதித்தான். கோபித்தான். “காட்டி விட்டாயே
ஜாதி புத்தியை” என்றான். “ஏண்டி ஜீவா! மெல்ல எதிர்வீட்டு
நாயுடுவை இழுக்கப் பார்க்கிறாயோ? ஜாக்கிரதை. அப்படி ஏதாவது
நடந்தால், கொலை நடக்கும் இங்கே” என்று கூறினான் சங்கரன்.
‘உனக்காகத்தானே நான் அவரைக் கூப்பிட்டுப் பேசினேன்’ என்று
வாதாடினாள் ஜீவா.
“தெரியும், உன் சால் ஜாப்பு! எனக்காக வாதாடினாளாம். புதுமாப்பிளை
தேடுகிறாயோ...?”
“இதென்ன சனியனா போச்செ, நான் ஏன் தேடுகிறேன்...?”
“நீலி! அப்படியே உருகுகிறாள். என்னைக் கெடுத்தது மன்றி...?”
“யார் யாரைக் கெடுத்தது? ஏன் சும்மா பேசுகிறீர்கள். உன்னாலேதான்
ஊரார் சொன்ன சொல்லையும் கேளாது-, மேலே இருந்த நகைகளை
விற்று உன் இழவுக்குப் போட்டேன்.”
“ராஸ்கல்! என்னடி ஏதேதோ பேசுகிறாய், உதைப்பேன்.”
“சும்மா நிறுத்து! உதைக்க மாட்டீர்களா என்ன.”
இந்தச் சம்பாஷணையின் காரம் அதிகமாயிற்று. சங்கரன் ஜீவாவை
அடிக்கலானான். அவள் ஐயோவென அலறினாள். தெருவில் போவோர்
வருவோர் நின்றனர். கும்பல் கூடி விட்டது. அக்கம் பக்கத்து
வீட்டார் வந்து சமாதானம் சொன்னார்கள். அன்றுதான் ஒரு
விஷயம் விளங்கிற்று ஜீவாவுக்கு. அதாவது சங்கரன் குடிக்கிறான்
என்பது.
கெட ஆரம்பித்து விட்டால் அதற்கு ஓர் எல்லையுண்டோ! ஜீவாவின்
மனம் கொதிக்கும்படியும், சங்கரன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
நாயுடு சொன்னபடி வேலை பார்த்துக் கொடுத்தார். வந்த சம்பளத்திலே
பாதி சாராயக் கடைக்குச் சென்றது. பாதி பார்வதி வீட்டுக்குப்
போயிற்று. பார்வதி ஜீவாவுக்குத் தெரிந்தவள். எவ்வளவோ
வற்புறுத்திக் கூறினாள். சங்கரனைத் தன் வீட்டுக்கு வர
வேண்டாமென்று கேட்கவில்லை சங்கரன். உருட்டி மிரட்டி அவளையும்
சிநேகம் பிடித்துக் கொண்டான். ஜீவா அந்தச் சமயத்தில்
கர்ப்பம்! குழந்தை பிறந்து இரண்டொரு மாதம் ஆவதற்குள்
சங்கரனை வேலையினின்றும் நீக்கிவிட்டார்கள். அதுமட்டுமல்ல,
கணக்கிலே தகராறு என வழக்குத் தொடுத்து விட்டார்கள். போலீசார்
தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஜீவாவுக்குக் கடுமையான
ஜுரம். வீடு சோதனை போடப்பட்டது. சங்கரனை ஒளித்து வைத்துக்கொண்டே
ஜீவா போலீசை ஏய்க்கிறாள் என எண்ணிப் போலீசார் அவளைக்
கண்டித்துப் பேசினார்கள். தூற்றினார்கள். இவ்வளவு தொல்லைகளுக்கிடையே
வறுமை அவளை வாட்டிவிட்டது. சங்கரனோ ஊரைவிட்டு ஓடிவிட்டான்.
ஜுரமோ குறையவில்லை. குழந்தையோ கோடி சூரியப் பிரகாசமாக
இருந்தது. அதைக் காணக்காண, “ஐயோ! எப்படி இதைவிட்டு நான்
பிரிவேன். என் கண்ணே செல்வமே! கட்டிக் கரும்பே - உன்னை
விட்டுப் போவதா?” என்று புலம்பினாள் ஜீவா. ஜுரம் போக
வைத்திய வசதி செய்துகொள்ள மிச்சம் மீதி இருந்த சொத்தும்
போய்விட்டது. கடைசியில் பிழைப்பது கஷ்டம் என டாக்டர்
கூறிவிட்டார். ஜீவாவுக்கு என்ன செய்வதெனத் தோன்றவில்லை.
பார்வதிக்கு ஆள் விடுத்தாள். பார்வதி வந்ததும் குழந்தையை
அவள் வசம் ஒப்புவித்தாள். இரண்டொரு நாளிலே ஜீவா இறந்தாள்
பாபம்!
இந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்ட சங்கரன் உள்ளபடி வருத்தப்பட்டான்.
ஆனால் தலையை வெளியே காட்டுவதற் கில்லை. கிராமத்திலே தனது
மாமன் வீட்டில் ஒளிந்து கொண்டு, வாழ்க்கை, சமரசத்துக்குக்
கொண்டு வர முயன்றான். அது முடிந்த பிறகுதான் வெளியே வர
முடியும்.
சங்கரனின் மாமா, ரிடையர்டு பென்ஷனர். அவர் வழ்க்கை ஒரு
சமரச முடிவுக்குக் கொண்டு வந்தார். கம்பெனிக்காரருக்குப்
பணம் கொடுத்துப் பைசல் செய்து விட்டார். சங்கரன் ‘இந்தப்
பூனையும் பால் குடிக்குமா’ என்றபடி மாமன் வீட்டிலே இருந்து
வந்தான். ‘இனியாவது புத்தியாகப் பிழை. எனக்கும் வேறே பிள்ளைக்குட்டி
கிடையாது. என் சொத்து உனக்குத்தானே சொந்தம்” என்று கூறினார்.
சங்கரனுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது. மாதத்துக்கொருமுறை
பார்வதி வீடு சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு வருவான்.
சங்கரனின் மாமன் அதற்காக ஒன்றும் குறை சொல்வதில்லை. இவ்வளவாவது
நல்லபடி திரும்பினானே என்ற சந்தோஷம் அவருக்கு.
மலர்க்கொடி சிலோனில் ‘நர்சு’ வேலைக்குச் சென்று விட்டாள்.
சங்கரன் தன்னைக் கைவிட்டதால் மனம் உடைந்தது மாறவே இல்லை.
உயிரையே கொடுத்து விடுவதாகச் சொன்ன சங்கரனே தன்னைக்
கைவிட்டு விட்டபோது, வேறு யாரைத்தான் நம்புவது அவள்.
மலர்க்கொடி ‘நர்சு’ வேலைக்காகப் பயிற்சி பெறத் தாயிடம்
அனுமதி கேட்டாள். தாயும் கொடுத்தாள், சில ஆண்டுகள் சிலோன்
வைத்தியசாலை ஒன்றில் அவள் நர்சாக இருந்தாள். இடையே சங்கரன்
சென்னைக்கே திரும்பிச் சென்று ஒரு பிரபல மருந்துக் கம்பெனியில்
கிளர்க்காக வேலைக்கு அமர்ந்தான். அந்தச் சமயத்தில்தான்
அவனுக்கு, சிலோன் வைத்தியசாலையில், மலர்க்கொடி நர்சாக
இருப்பது தெரிய வந்தது. ஏதோ சில மருந்துகள் தேவை எனச்
சிலோன் வைத்தியசாலைக்காக மலர்க்கொடி எழுதிய கடிதமொன்று
சங்கரனுக்குச் சிக்கிற்று. அதைக் கண்டதும் அவனுக்கு முன்னாள்
நினைவுகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. தன்னைத்தானே
கெடுத்துக் கொண்டதை எண்ணி வருந்தினான். சிலோன் ‘நர்சு’
தான் காதலித்த மலர்க்கொடிதான் என்பதைத் தெரிந்து கொண்டான்.
அவனுக்குப் பிறகு எப்படியேனும் மலர்க்கொடியைக் காண வேண்டும்
என்ற எண்ணம் உண்டாயிற்று. சிலோனுக்குச் செல்வதெனத் தீர்மானித்தான்.
நேரே, தன் மாமன் வீடு வந்தான். தன் மனத்தில் ஒன்றைக் கூட
ஒளிக்காது கூறினான்.
“நாம் கொங்கு வேளாளக் குடியில் பிறந்து நாடகக்காரியை
மணப்பதா என்று எண்ணத்திலே என் இன்பத்தை விடுத்தேன்” என்றான்
சங்கரன்.
“நாடகக்காரியை மணம் செய்து கொண்டால் நாடு கேலி செய்யும்
என்று எண்ணினாயே, பிறகு நடந்த சம்பவங்களைப் பற்றி அவ்விதம்
எண்ணினாயோ?” என்று கேட்டார் மாமன்.
“இவை வெளிக்கு வராது என்று எண்ணினேன். அப்படி வரினும்,
அதைப் பற்றி அவ்வளவு கேவலமாகக் கருத மாட்டார்கள். கலியாணம்
செய்து கொண்டால்தான் ஜாதி கெட்டவன் எனச் சொல்லுவார்கள்
என்று எண்ணினேன். அதுதான் நான் செய்த தவறு” என்றான் சங்கரன்.
“சிலோனுக்கு நீ போக வேண்டாம். மலர்க்கொடியும் மங்கம்மாளும்
இங்கு வரும்படி நான் ஏற்பாடு செய்கிறேன். மலர்க்கொடி,
வேறு யாரோ என்று எண்ண வேண்டாம். அவள் என் மகள்தான். மங்கம்மாளை
நான் காதலித்து அவளோடு வாழ்ந்து வந்தேன். ஆனால் உன்னைப்
போலத்தான் நானும் ஊருக்கஞ்சி விஷயத்தை வெகு இரகசியமாக
வைத்துக் கொண்டிருந்தேன். மங்கா, நாடகத்திலே சென்று விட்டாள்.
நான் அவளை விட்டுப் பிரிந்தேன். ஆனால், எங்களிருவருக்கும்
மனக் கசப்பு கிடையாது.
என் பொருட்டு மங்கா எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தாள்.
நான் மணம் செய்து கொள்ள மறுத்தபோது மங்காதான், என்னை
வற்புறுத்தினாள். நானும் அவளும் பிரிந்தோம். அப்போது
மலர்க்கொடி ஐந்து வயது குழந்தை. பிறகு அவர்களைப் பற்றி
நான் அக்கறை எடுத்துக் கொள்ளாதிருந்தேன். நான் “சிங்களச்
சீமாட்டி” என்று எழுதிய நாடகத்திலே எங்கள் இருவரின் காதல்
சம்பவத்தை எழுதியிருந்தேன். அதனை நடத்தி மங்கா பெரும்
பெயரெடுத்தாள்” என்று சங்கரனின் மாமன் தன் சுயசரிதையைச்
சொன்னபோது சங்கரன் ஆச்சரியப்பட்டான்.
“ஆனால் மலர்க்கொடிக்கு இந்நேரம் மணம்...” என்று கேட்டான்
சங்கரன்.
“இல்லை! மணம் ஆகவில்லை. நான் அதைப்பற்றி விசாரித்து வைத்துள்ளேன்.
அது மட்டுமல்ல் சங்கரா! உன் விஷயம் பூராவும் எனக்குத்
தெரிந்ததும், மலர்க்கொடிக்கு அவற்றை விளக்கி எழுதிவிட்டேன்.
அடுத்த கப்பலில் சிங்களச் சீமாட்டியும் அவளுடைய தங்கப்பதுமையும்
வந்து சேருவர்” என்றார். அதைப்போலவே தாயும் மகளும் வந்தனர்.
மலர்க்கொடி ஒரே புன்சிரிப்பால் சங்கரனை மன்னித்து விட்டாள்.
மணம், வெகு எளிய முறையிலே நடந்தது. பார்வதியிடம் வளர்ந்து
வந்த குழந்தை குமுதா, சங்கரன் வீட்டில் சேர்ப்பிக்கப்
பட்டது. எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தனர். ஊரார் ஏதேதோ
பேசினார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் ஆனந்தத்தை ஊரார்
என்ன அறிவார்கள். அளவு கடந்த ஆனந்த வாழ்வு வாழ்ந்தனர்
அவர்கள்.
‘பரதன்’ என்னும் புனைபெயரில்,
குடியரசு இதழில்,
1939 ஜூலையில் எழுதப்பட்டது.