அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

பவழ பஸ்பம்
1

“சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப் போக்க, நான் தந்திரமாக என் மதியை உபயோதித்ததால் வந்தது. அவன், இதனை 60 பொன் கொடுத்து வாங்கினான் என்று நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன், அவன் 600 பொன் கொடுத்துப் பெற்ற பொருள் அது என்பது எனக்குத் தெரியும்! அழுதுகொண்டே கொடுத்தான், அதன் முன்புதான் நீ சிரித்துக்கொண்டே நிற்கிறாய், சிங்காரியாக. உன் உடை, உல்லாசம், மாளிகை, தோட்டம், வண்டி வாகனம், வேலையாள், இவற்றை வேதாந்தம் தேடித் தரவில்லை, மாயாஜாலப் பொருள்களல்ல! மக்கள் மன்றத்திலே நீயும் உன் சகாக்களும் பேசினீர்களாமே, கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று; அந்தக் கொள்ளை இலாபம் கொடுத்த பொருட்குவியலிலே நீ இருக்கிறாய்! ஏழைகளின் இரத்தத்தை நாங்கள் குடிக்கிறோம் என்று ஏசினீர்களாமே, கூட்டத்திலே.அந்த இரத்தத்தை, நான் கெட்டவாடை போக்கித் தங்கக் கோப்பையிலே ஊற்றித் தந்தேன் உனக்கு, அதை நீயும் பருகினாய். உனக்காகத்தான் நான் அந்த வேலையையும் செய்தேன். உன் அழகுக்கேற்ற அந்தஸ்து தேடிக்கொடுத்தேன். கண்டவர் மெச்சும் காட்சிப் பொருளாக்கினேன். பரிபூரண திருப்தியுடன் பாலும் பழமும் சாப்பிட்டுக் கொண்டு பரிமளவாடை கொண்ட பஞ்சணையில் நீ படுத்துத் தூங்கின போதெல்லாம், நான் பாழும் கணக்கு கணக்கு என்று அதிலே மூழ்க, இவ்வளவு போக போக்கியங்களை உனக்கு அளித்தேன். நீ, மக்கள் மன்றத்தில் பேசுகிறாய்! மக்கள் கூட்டத்திலிருந்து உன்னைத் தேடி எடுத்து, சீமாட்டியாக்கினேன். நீ சீறிச் சீறிப் பேசினாயாம், மன்றத்திலே. அறிவுகெட்டவளே! நான், வணிகன். இலாபம் பெறுவது என் தொழில். அதை அனுபவிப்பவள் நீ. அனுபவிக்கும் சுகத்தையும் மறந்து, அந்தச் சுகத்தை உனக்கு அளிக்கவே, சுவடியும் கையுமாகக் கிடக்கும் எனக்கு நன்றி செலுத்துவதை விட்டு, யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு, தாறுமாறாகப் பேசிவிட்டு வந்தாயே, இது தகுமா? நான் சாமர்த்தியமாகத் தொழிலை நடத்தியிரா விட்டால், நீ எங்கு இருப்பாய்! என்ன செய்துகொண்டிருப்பாய்! பாவம் சுடச்சுட நடுப்பகல் வெயிலில் தலையில் சோற்றுச் சட்டியைச் சுமந்துகொண்டு, அங்காடிச் சாவடிக்கு வந்து, எனக்குப் பரிமாறும் பணிப்பெண்ணாக இருந்திருப்பாய். பட்டமகிஷிபோல் உன்னை இப்போது வைத்திருக்கிறேன்; பக்குவம் பெறவில்லையே, நீ. வியாபார முறையை மாற்றப்போகிறீர்களாமே நீங்கள்! வஞ்சனையை வாட்டி வதைத்து, கருணையை முடிசூட்டப் போகிறீர்களாமே. உங்கள் முதுகுக்குச் சூடிட மன்னன் கட்டளை பிறப்பிக்கப் போகிறான். ஜாக்ரதை. நாளை முதல் நீ அந்த நாசகாலர்களுடன் சேராதே. நமக்கிருக்கும் மதிப்பைக் கெடுக்காதே. இந்த மண்டலத்தில் நான் வியாபாரம் செய்வதுபோலச் செய்து பொருள் திரட்டுபவர்கள் பலர் உண்டு. அதிலே பாதகம் இல்லை! வல்லவன் வாழ்வது இயற்கை. இதை மாற்ற முயலும் பேர்வழிகள் வெறும் வீணர்கள். அரசன் அடங்காக் கோபம் கொண்டுள்ளான். நீ என் மனைவி என்பதை மறவாதே. வணிகனுக்கு வாழ்க்கைப்பட்ட உனக்கு வாயாடி வேலை வேண்டாம்!”

சீறிச் சீறிப் பேசினான், கணவன்; சிந்திய கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி, அவன் உரையைக் கேட்டுக் கலங்கினாள், அவன் துணைவி, புருஷன் கோபத்தால் காரசாரமாகப் பேசுகிறானே என்பதல்ல. அவள் கலக்கத்துக்குக் காரணம் அவன் கூறினது உண்மை; அவற்றை அவள் உணராமலேயேதான் இருந்து வந்தாள். அவன் சொன்னபிறகுதான், உண்மை அவளை உறுத்தத் தொடங்கிற்று. அதனாலேயே, அவள் அவ்வளவு கலங்கினாள்.
* * *

புத்தருடைய பொன்மொழிகள் நாட்டிலே பரவிக் கொண்டிருந்த காலம். பூபதிகள், சிலர் புத்தமார்க்கத்தையே தழுவியும் கொண்டனர். பண்டைய மார்க்கம் நிலைத்திருந்த சில மண்டபங்களிலேகூட, சிலர், புத்தமார்க்கத்தைக் கடைப்பிடித்த, பிக்ஷûக்களாகிவிட்டனர். ஓங்கி வளரும் புத்த சமயத்தைத் தடுப்பது, பலமான புயலை விலைகொடுத்து வாங்குவதற் கொப்பாகும் என்று யூகமுள்ள மன்னர்கள் உணர்ந்து நடந்தனர். ருத்ரதேவன் ஆலயமும் அதற்குப் பக்கத்திலேயே புத்தமடமும் கட்டலாயினர். புத்த பிக்ஷûக்களைக் கண்டவுடனே, தமது ஆதிக்கத்துக்கு உலை வைக்கிறார்களே இந்தப் புதுமுறைக்காரர்கள், என்று கோபம்தான் சனாதனமார்க்கப் பூஜாரிக் கூட்டத்திற்கு. ஆனால் வெளியே தெரியவிடுவதில்லை. பௌத்தம், அரிய பெரிய உண்மைகளுக்கு இருப்பிடம். தூய்மைக்குப் பிறப்பிடம், என்று பாராட்டிப் பேசுவர்; இந்த உத்தமமான கோட்பாடுகள் சாமான்யமானவைகள் அன்று, என்று புகழ்வர். இங்ஙனம் புகழுரைகூறிப், புதுமுறைக்காரரை மயங்க வைத்து
விட்டு, மெல்லத் தமது மாக்கத்தைப்பிணைப்பர்; இம்முறைகள் அனைத்தும் உபநிஷத்துக்களிலே உள்ளன, வேதசாரம் அது என்று கூறுவர். அவர்களின் வஞ்சகம், பசும் புற்றரையிலே, வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம்போல் உலவிற்று, வேங்கை போலப் பாயமுடியாது, வேந்தர் பலர் புதிய மார்க்கத்தை ஆதரித்து வந்ததால் சனாதன மார்க்கம் சாகசத்தால் மட்டுமே சாகாது தப்பமுடியும் என்ற நிலை. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு வந்தது மக்களிடை. அதாவது போக போக்கியங்களிலே ஒருவகைச் சலிப்பு, கொஞ்சம் வெறுப்பு. புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை, பிக்ஷûக்கள் கூறிடக்கேட்டு நெஞ்சு நெகிழ்ந்த மக்களுக்குச், சுகம் சுகம் என்று அலைவது, கானல்நீர் வேட்டை என்ற எண்ணம் ஏற்பட்டது. போக போக்கியத்திலே பலன் இல்லை என்ற எண்ணம், வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. ஏன் சிலர் போக போக்கியத்திலே புரளவேண்டும்? ஏன், மக்கள் கஷ்டத்தில் உழலவேண்டும்? மக்களை இந்த நிலையில் வைத்திருப்பது கொடுமை அல்லவா? இந்தக் கொடுமையைச் செய்து சிலர் கொள்ளைப் பணத்தைக் குவித்துக்கொண்டு, கோபுரம் அமைத்த மாளிகையும், தடாகம் உள்ள தோட்டமும், அமைத்துக் கொண்டு வாழுவானேன். முத்து, பவழம், வைரம், வைடூரியம், பட்டு முதலியவற்றை, நாட்டுக்கு நாடு எடுத்துச் சென்று விற்றும்; உள் நாட்டிலேயே பொருள்களை, ஒன்றுக்குப் பத்தாக விற்பதும், ஏழைகள் தலையிலே தாங்க முடியாத சுமையை ஏற்றுவதும் கொடுமை. பாடுபடும் மக்களைப் பராரியாக்கிவிட்டு, ஒரு சிறு கூட்டம் மட்டும் பல்லக்குப் பரிவாரத்துடன் வாழ்வது, அக்கிரமமல்லவா, என்ற எண்ணம் தோன்றி, மக்கள் மன்றம், என்ற ஓர் சபை அமைத்தனர். மரத்தடியில் தோன்றி, சாவடியில் குடி ஏறி, பிறகு ஓர் அழகிய மாடி வீட்டிலேயே, நடைபெற ஆரம்பித்தது, மக்கள் மன்றத்தின் கூட்டம்.
* * *

மருதவல்லி, அகவல் அம்பலவாணக் கவியின் அழகு மகள். வணிகருக்கு வாழ்க்கைப்பட்டவள். அமபலவாணரின், கவிதைகளிலே, சமுகத்திலே ஏழைகள் படும்பாடுகளே, கருத்தாக இருக்கும். எனவே, மருதவல்லியின் மனத்திலே, மக்கள் மன்றத்தார் பேசியவற்றின் வித்து ஏற்கெனவே ஊன்றப்பட்டிருந்தது. மக்கள் மன்றத்தினர் பேசப்பேச அவன் மனத்திலே, வித்து முளைவிட்டுச் செடி கொடியாகிவிட்டது. அவளுடைய முயற்சியாலும் உதவியாலுமே, - அந்த அழகான மாடி வீட்டிலே, மக்கள் மன்றம்கூட ஆரம்பித்தது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் நிலை மாறி, மருதம், பேச ஆரம்பித்தாள் மன்றத்திலே, அம்பலவாணரின் அருங்கவிதைகளால் உண்டான அரிய கருத்துக்களை, மருதவல்லி, மக்கள் மன்றத்திலே, எடுத்துக் கூறி, மன்றத்தினருக்கே புதிய பார்வை பிறக்கச் செய்தாள். சில புத்த பிக்ஷûக்களும், மக்கள் மன்றத்தினருக்கு உதவி செய்யலாயினர். மன்னன், மக்களை ஏய்ப்பதில் மதிமிக்கவன்; ‘மொட்டைத்தலையருக்கு மடமும், கொட்டை கட்டிகளுக்குக் கோவிலும் கட்டிக் கொடுத்துவிட்டால், சட்டமும் சாந்தியும் நிலைத்துவிடும், பயம் என்ன,” என்பது அவனுடைய ஆட்சிமுறை மக்கள் மன்றத்தின் வளர்ச்சிபற்றி, அவன் கேள்விப் பட ஆரம்பித்ததே, மருதவல்லியின் புகழ் ஓங்கிய பிறகுதான். மன்னன் முதலிலே கொஞ்சம் கவலைப்பட்டான், பிறகோ, “ஓ! நமது நவகோடியாரின் மனைவி மருதவல்லிதானா மக்கள் மன்றத்துக்கு ஜீவன். அவ்விதமாயின் அஞ்சவேண்டுவதில்லை; மன்றத்தின் சக்தியை, சிறியதோர் யுக்தியால் போக்கிவிட முடியும்” என்று யோசித்தான். வழக்கப்படி, கைகட்டி வாய்பொத்தி நின்று, காரியம் ஏதேனும் உண்டோ என்று கேட்க வந்த வணிகர் நவகோடியாருக்கு, அன்று மன்னன் ஆசனம் தந்தான். குளிர்ந்தபானம் கொடுக்கச் செய்தான் பணியாளை ஏவி; புன்னகையுடன் பேசலானான்.

“நவகோடியாரே! நமது எல்லையில் உள்ள சந்தனக் காட்டிலே, இரண்டாண்டு கட்டை வெட்டி, விற்பனை செய்யும் உரிமையை உமக்கு அளித்திருக்கிறோம். அதற்கான பட்டயம் தயாராகிவிட்டது” என்றான் மன்னவன். நவகோடியார், மன்னன் முன் மண்டியிட்டுத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “காட்டிலே சந்தனக் கட்டை வெட்டும்போது, ஏதேனும் ஆபத்து ஏற்படக் கூடுமல்லவா! அதற்காக, பத்து போர் வீரர்களின் நீர் பணிபுரிய அமர்த்திக்கொள்ளலாம் என்றும் ஓர் உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று மன்னன் கூறினான். நவகோடியாருக்கு, காவலனின் கருணையின் காரணம் புலப்படவில்லை. அரசனுடைய அன்பு, சில சமயங்களிலே ஆபத்தின் முன்அறிவிப்பு என்பது மட்டும் தெரியும். வணிகருக்கு எனவே, யோசிக்கலானான்!

“நவகோடியாரே! உம்மிடம் ஓர் இரகசியம் கூற விரும்புகிறேன். ஆண்டவன் விதித்த முறைப்படி, அரசனும் ஆண்டியும் அனைவரும் தத்தமக்கு ஒரு நிலை எனப் பெற்று உள்ளனர். இந்தத் தத்துவம் தவறானது என்று பேசுவது, பாபச் செயல். ஏழை எளியோருக்கு உபகாரம் செய்யத்தான் வேண்டும். தயாபரன் தனம் தருவதே அதற்காகத்தானே! ஏழைகள் தங்குமிடம், சாப்பாட்டு விடுதி, சாவடி, இவை அமைக்கவேண்டும். ஆனால், ஏழையைப் படைத்தவன் இறைவனாகமாட்டான் என்று பேசுவதா? ஏழையின் நிலைமைக்குக் காரணம், அவனுடைய ‘விதி’ அல்ல, பிரபுக்களின் சூழ்ச்சி என்று பேசுவதா? இதுபோன்ற பாப மொழி பேசுவோர் படுபாதாளத்திலே வீழ்வது மட்டுமல்ல, மக்களையுமன்றோ மீளா நரகுபுகவைப்பர்” என்று கூறினான் மன்னன். நவகோடியார், “அரசே! அதற்கென்ன சந்தேகம்” என்றான்; அவனுடைய வழக்கமான பாடம் அது. “இத்தகாச்செயல் புரிவோரைத் தண்டிக்க நெடுநேரம் பிடிக்காது” என்றான் மன்னன். “ஒரு வார்த்தை சொன்னால் போதாதோ, உளறி உலகைக் கெடுக்கும் அந்தக் கும்பலைத் தூக்கு மேடைக்கே இழுத்துச் சென்றுவிட மாட்டார்களோ, படையினர்” என்று, வீராவேசத்தோடு வணிகர் பேசினார். “உண்மை! ஆனால், அங்ஙனம் நான் உத்தரவு பிறப்பித்தால் உமது உத்தம மனைவியார், மருதவல்லி அம்மையாருமன்றோ சாக வேண்டும்!” - மன்னன் கடைசியில் அம்பை எய்தான். அடிவீழ்ந்து எழுந்தான் வணிகன், கெஞ்சினான்; மன்னன், பிறகு மக்கள் மன்றத்திலே மருதவல்லி பேசுவது பற்றிக்கூறி, உடனே, மருதவல்லியைக் கண்டித்து, மன்றத்துடன் கொண்டுள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளச் செய்யவேண்டும், என்று எச்சரித்தான். நவகோடியார், அதன்பிறகே, மருதவல்லியைக் கண்டித்தார்.

மருதவல்லி, பணம் தேடித்தேடி பண்பை இழந்துவிட்ட, தன் கணவனிடம் வாதாடி, அவனைத் திருத்துவது முடியாத காரியம் என்பதை உணர்ந்தாள். கணவனுடைய கருத்திலே நெளிந்துகொண்டிருந்த சுயநலத்தையும் பேராசையையும் சாகடிக்கத் தக்கதிறமை தனக்கு இல்லை என்பதையும் உணர்ந்தாள். இவற்றை விட அதிகத் தெளிவாக வேறொன்றையும் மருதவல்லி உணர முடிந்தது. கணவன் மனம் கோணாமல் நடந்து கொள்வோம், நாட்டிலே உள்ள காட்டு முறையைப் போக்க நாம் தானா இருக்கிறோம். மற்றவர்கள் அக்காரியத்தைக் கவனித்துக் கொள்ளட்டும், நாம் ‘குடும்ப விளக்காக’ இருந்து விடுவோம் என்ற எண்ணத்தைத் தன்னால் கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்தாள். வாழ்வுக்காகக் கொள்கையை மறந்துவிட முடியாத அளவுக்கு, மருதவல்லியின் மனம் உரம் பெற்றுவிட்டது. எனவே, இனிக் கொள்கைக்காகப் பணிபுரிவது, அதற்காக, ‘விடுதலை’ பெறுவது என்ற துணிவும் பிறந்துவிட்டது.

அந்த அழகிய முகத்தோற்றத்தையும் அன்பு வழியும் விழிகளையும் கண்டு, நவகோடியார், பரவசமடைந்த காலம் ஒன்று உண்டு; அது பேழைகளிலே, முத்து, பவழம், வைடூரியம் நிரம்பாததற்கு முன்பு!

அரண்மனையிலே செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில்; இருக்கிறோம் - இந்த மருதம் அரசிளங்குமரிகளுடன் அளவளாவி அகமகிழ்வதைவிட்டு, அறமாம், நெறியாம், அன்பாம், அருளாம், சங்கமாம், சன்மார்க்கமாம், இவ்விதமான கவையற்றவற்றைக் கட்டி அழுகிறாளே என்று கவலைப்பட்டான் முதலில்; மன்னன் மிரட்டியபிறகோ, மருதவல்லிமீது நவகோடிக்கு வெறுப்பே பிறந்துவிட்டது - வெண்ணிலாவின் மீது ஏற்பட்ட மோகம், அந்த வெறுப்பை அதிகமாக்கிவிட்டது. வெண்ணிலா, அரண்மனைப் பணிப்பெண். அலங்காரத்தால் அழகுக் குறைவையும், ஆடல் பாடலால் வஞ்சகத்தையும் மறைத்துக்கொண்டிருந்த மயக்க மொழியினள்.

நவகோடியாரின் மனைவியாக இனியும் இருத்தல் இயலாது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாள் மருதம். நள்ளிரவுச் சந்திப்புகளும், அவசர அணைப்புகளும் போதாது, மாளிகையிலேயே வெண்ணிலா வந்திருக்கவேண்டும் என்ற அளவுக்கு ஆசைக்கனல் புகுந்துவிட்டது நவகோடியார் உள்ளத்தில். எனவே, கவிராயருக்கு ஓலை அனுப்பப்பட்டது. மகளைக் கண்டு அறிவுரை கூறி, ஒழுங்காக நடந்துகொள்ளச் சொல், இல்லையேல், உன்னோடு அழைத்துச் செல், என்பதே ஓலையின் கருத்து - வெண்ணிலாவின் வெற்றிகளிலே அதுவும் ஒன்று - அதிக விலை கொடுத்தும் அந்த வெற்றியை அவள் பெறவில்லை, இரண்டொரு ‘இச்’சொலிகள் மட்டுமே செலவிட்டாள்.

மக்கள் மன்றத்தின் எதிர்காலமே, மருதவல்லியின் நிலை என்ன ஆகிறது என்பதைப் பொறுத்திருந்தது. பொறி பறக்கப் பேசினாள்! அறம் என்றாள், போர் என்றாள், முழக்கத்துக்குத் குறைவில்லை. எனினும், வசதியான மாளிகை வாழ்வை இழக்க நேரிடும் என்ற தெரிந்ததும், மருதவல்லி, கொள்கையைக் கட்டிப் பரண்மீது போட்டுவிட்டு, சீமாட்டி வாழ்வையே நடத்துகிறாள் என்று நிலை ஏற்பட்டுவிட்டால் மன்றத்திலே திகைப்பு மிகுந்து
விடும், மூடுவிழாத்தான் பிறகு! மருதவல்லி இதனை நன்கு அறிந்திருந்தாள். மனப் போர் பலமாக, மக்கள் மன்றத்தின் எதிர்காலம், தன் முடிவுடன் இணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள், காட்டிக்கொடுக்கும் கயமைக்குணம் அவளிடம் தலைகாட்ட மறுத்தது. ஆனால், கணவனைவிட்டு விலகுவது, கொள்கைக்காக என்ற உண்மையை அறியாத மக்கள் கோணல் நடத்தைக்காரியோ என்று சந்தேகித்தால் என்ன செய்வது என்ற சஞ்சலம் மட்டும் அவளை வாட்டி வந்தது. வெண்ணிலா வீண்வதந்திகளைப் பரப்புவாள் என்ற அச்சமும் இருந்தது மருதவல்லிக்கு. தலையணை நனைந்தது, கூந்தல் பளபளப்பை இழந்தது, இறுதியில் சஞ்சலத்தையும் அச்சத்தையும் கடந்தாள். கவிராயரிடம் தன் உள்ளக்கிடக்கையை ஒளிவு மறைவு இன்றி எடுத்துரைத்தாள்.

“நான் பெருமை அடைகிறேன் மகளே! பெருமை அடைகிறேன்! வீரமும் அறமும் உருவெடுத்ததுபோல் இருக்கிறாய். வா, அம்மா! இனி நாம் நமது இல்லம் செல்வோம்” என்று கவிராயர் கூறியபோது, நீண்ட நாட்களாக அவளை விட்டுப் பிரிந்திருந்த புன்னகை திரும்பிவந்து தவழ்ந்தது.

“தொலைந்தால் போதும். மனைவியாகக்கொண்ட தோஷத்துக்காகப் பணம் வேண்டுமானாலும் அழுகிறேன்” என்று நவகோடியார் கூறியபோது “பணமா! வேண்டாமப்பா... உன்னிடம் இருப்பது அது ஒன்றுதானே, கட்டிக்காத்துக் கொண்டிரு” என்று முதியவர் கூறினார். மருதவல்லி தாக்கவந்து நவகோடியாரைத் தைரியமாகவே தடுத்து நிறுத்தினாள். தந்தையும் மகளும், மாளிகையைவிட்டு வெளி ஏறினார்கள் - மன்னன் மகிழ்ந்தான், வெண்ணிலா விருந்தளித்தாள் தோழிகளுக்கு!

விளக்கமில்லாத மக்கள், தன் மகளைக் குறித்துக் கேவலமாகப் பேசுவர் என்பதை எண்ணி, கவிராயர் சிறிது ஆயாசமடைந்தார் எனினும், தூற்றலைத் தாங்கிக் கொண்டு, தூயவாழ்க்கையாலும், தொண்டின் சிறப்பாலும், மக்களின் ஏளனத்தையும் வீழ்த்தவல்லவள் மருதவல்லி என்ற தைரியம் அவருக்கு இருந்தது. கிராமம் சென்று, சிறார்களுக்கெனப் பணியாற்ற ஏற்பாடு செய்வது என்று திட்டமிட்டார். மருதவல்லியோ மனத்திலே வேறோர் திட்டம் வகுத்து வைத்திருந்தாள். ஊர்க்கோடி வந்ததும், தந்தையின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, மருதம் “அப்பா! இனித் தாங்கள் வீடு செல்லலாம் நான் போகவேண்டிய இடம் இதோ” என்று கூறி, புத்தமார்க்க போதனைக்காக அமைந்திருந்த மடாலயம் ஒன்றைக் காட்டினாள். ஒரு கணம் திகைத்துப்போனார் கவிராயர் - எனினும் மாற்ற முடியாத முடிவு அது என்பதையும், மக்களின் கேலியும் எதிர்ப்பும்கூட மகளைத் தீண்டமுடியாத நிலையைத் தரத்தக்க திரு அகம் அந்த இடம் என்பதையும் உணர்ந்தனர். “மகளே! தடைகூற நான் யார்! தள்ளாத பருவம் எனக்கு; உன் துணை கிடைக்கும் என்று எண்ணினேன். தூயஒளி உன்னை அழைக்கிறது. குழந்தாய்! சென்று சேவை செய்! நான் என் கடைசி மூச்சு இருக்கும்வரையில் பறிவுப் பணிபுரிந்தே வருவேன்” என்று கூறினார். மருதவல்லி மடாலயம் சேர்ந்தாள், கவிராயர் கிராமம் சென்றார், வெண்ணிலா நவகோடியார் மாளிகை புகுந்தாள்!
* * *

மக்கள் மன்றம் மகிழ்ந்தது. மருதவல்லியின் ‘தியாகம்’, மன்றத்தின் பெருமையை மண்டிலம் அறியச் செய்தது. கொள்கைக்காக வாழ்வின் சுவையை இழக்கும் பண்பு வளரும் புத்தமார்க்கம் செல்லும் என்ற நம்பிக்கை பலப்பட்டது. மன்னன் மார்த்தாண்டனுக்கு அடக்க முடியாத கோபம். இனித் தாக்கித் தீருவது என்ற முடிவுக்கு வந்தான் - தாக்கீதுகள் கிளம்பின, புத்த மடாலயங்களைக் கலைத்து விடும்படியும், சதிகாரர்களைச் சிறைப்படுத்தும்படியும், மருதவல்லி தங்கியிருந்தது, புத்த மடாலயம் கூட அல்ல, புத்த மார்க்கம் அளித்த நன்னெறியின் மாண்புகளை மக்களிடம் எடுத்துரைத்து, மாசுதுடைக்கும் பிரசாரம் புரியும் அமைப்புத்தான் எனினும், அந்த மடாலயத்துக்கும் மக்கள் மன்றத்துக்கும் இருந்த தொடர்பைக் காரணமாகக் காட்டி, புதிய மார்க்கப் போதனை என்ற திரை மறைவில் வெளிநாட்டு வேந்தனை வரவழைத்து அரநாட்டைத் தாக்கச் சதி செய்கிறார்கள் என்று மன்னன் மார்த்தாண்டன் கூறினான் - சட்டம் கொட்டலாயிற்று. மருதவல்லி மகிழ்ந்தாள். அறநெறிப் போதனையில் ஈடுபட்ட மக்கள் மன்றம், ஆதிக்கம் புரியும் அரசனை அச்சமடையச் செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொண்டாள். இவை கத்திக் காணப்போகும் காரியம் என்ன, இவர்கள் என்ன செய்து விட முடியும், என்று இறுமாந்து கிடந்த மன்னன், இவர்களைச் சிறையிலே தள்ளினால் மட்டுமே அரநாடு தன் ஆதிக்கத்தில் இருக்கும் என்று எண்ணிட வேண்டிய கட்டம் இவ்வளவு விரைவிலே வந்து விட்டதே என்பதை எண்ணிப் பூரிப்பும் பெருமையும் அடைந்தாள். சிறைக்குமட்டுமல்ல, சித்ரவதைக்கே தயாராக இருக்கிறார்கள் தன் நண்பர்கள் என்பதைக் கண்டறிந்த போது, மருதவல்லிக்குப் பெருமை ஓங்கி வளர்ந்தது. வெற்றி! வெற்றி! என்று தனக்குள் கூறிக்கொண்டாள். பிடி! அடி! என்று மன்னனுடைய போர்வீரர்கள் கொக்கரித்தனர், மருதவல்லியின் செவியிலே, வெற்றி! வெற்றி! என்ற சத்தமே கேட்டது.

“உண்மை கூறிவிடு. சதித்திட்டம் என்ன?”

“திட்டம் என்ன என்று கேள் - சதி ஏதும் கிடையாது. மமதை நிறைந்த மன்னன், கபடம் நிறைந்த குரு, இந்த இடுக்கிலே சிக்கிச் சீரழியும் மக்களை அறிவு பெறச் செய்து, விடுவிப்பதே எமது திட்டம்”

“விடுதலைப் போரா! வீராங்கனையே! விழி, வேலா குமோ! மொழி, கணையோ! மன்றமாம், மன்றம்! நாட்டுக்கும் மதத்துக்கும் நாசம் தேடும் காலிகள் கூடிடும் குகைக்குப் பெயர், மன்றம்!”

“எது அப்பா, காலிகள் கூட்டம்? உத்தமமான கொள்கைக்காக உயிரையும் இழக்கத் துணிந்து, ஊராள்வோனிடம் ஊழியம் செய்து, கொழுக்கும் உலுத்தர்களின் உறுமலைச் சட்டை செய்யாது மக்களின் நல்வாழ்வுக்காகவும், மார்க்கத்தின் மாசுபோக்கவும் பாடுபடும் நாங்களா காலிக்கூட்டம்”

சிறைவிசாரணைக் கூடத் தலைவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. மருதவல்லியின் பேச்சிலே கனல் தெறித்தது. உடலிலே இரத்தம் பீறிட்டு வருமளவு சவுக்கடி விழுந்தது. பதறவில்லை! மருதவல்லியின் அஞ்சா நெஞ்சு கண்ட மற்றவர்கள், கொஞ்ச நஞ்சம் கொண்டிருந்த அச்சத்தையும் நீக்கிக் கொண்டனர். விடுதலை தருவதாயினும், தமது பிரசாரத்தை விட முடியாது என்று சூள் உரைத்தனர். எங்கிருந்து ‘இதுகளுக்கு’ இவ்வளவு துணிவு பிறந்தது? எங்கோ உலவிய புத்தனுக்கு, புத்தனுக்கு, இப்படி, நாடெங்கும் படைகளா! என்ன ஆச்சரியம்! என்று எண்ணினான், சிறைக் கூடத் தலைவன் - அவனையும் புத்தமார்க்கம் தழுவ முனைந்து - மிக்க சிரமப்பட்டு அதனைத் தடுத்து நிறுத்தினான்.
* * *

அரநாடு புரட்சியைப் பொசுக்கியே தீரும், புதுமார்க்கம் புக இடமளிக்காது, என்று முழக்கமிட்ட மார்த்தாண்டன்,அறநெறிப் பிரச்சாரம் செய்து வந்த மருதவல்லி போன்றாரைச் சிறையிலே தள்ளியதோடு விடவில்லை, இதனையே வாய்ப்பாகக் கொண்டு, ‘வருவாய்’ தேடவும் ஒரு வழி வகுத்துக்கொண்டான். புரட்சிக்காரர்கள், புது மார்க்கத்தைப் புகுத்த முனைவோர், ஆகியோரைச் சிறைப்படுத்துவதுடன், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது என்று திட்டமிட்டான். துளியும் தொடர்பு அற்ற பல செல்வர்களையும், புது மார்க்கத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, தேரும் திருவிழாவும் அபிஷேகமும் ஆராதனையும் பழைய கடவுளருக்குச் செய்து, ‘பக்தர்’ கோலத்தைக் காட்டினர், பலர். வெண்ணிலா வேலுடையான் கோவிலுக்கு நடத்திய உலாஉற்சவம், நவகோடியாரின் அடிவயிற்றைக் கலக்கிவிட்டது - அவ்வளவு பெரும் செலவு - வெண்ணிலாவுக்கு ஊர்ப்பிரமுகர்கள், உயர் குடும்பத்தினரின் புகழ்மாலை கிடைத்தது! வெண்ணிலாவின் ‘பக்தி’ ஒளி குறித்து அரண்மனையிலும் பேசப்பட்டது. நவகோடியாருக்கு வர இருந்த ஆபத்தை நீக்கிவிட்டதாக வெண்ணிலா கருதி மகிழ்ந்தாள் - ஆனால், வேல் பாய்வதுபோலச் சேதி வந்தது, மருதவல்லியின் மாஜி கணவன் என்ற காரணம் காட்டி நவகோடியாரையும் மன்னன் குற்றம் சாட்டப்போகிறான் என்று தெரிந்தது. வெண்ணிலா விம்மினாள்.
* * *

“கடுகடுத்த முகமல்லவா காட்டினாய், கள்ளி! காவி உடைக்கு ஏற்றபடி நடந்துகொள் என்று ஏசினாயே! உன் கண்கள் கமலம் என்றேன், பவளம் உன் அதரம் என்றேன். முத்துப் பற்கள் என்றேன், செந்தேனே! என்றேன் – ஆண்டிக்கு ஆகாது இந்தக் காரியம் என்றல்லவா, அன்று சொன்னாய். அறிவிலி! அன்று நான் ஆலயத்துக்கு மலர்கொடுத்து அளிப்பவனாக இருந்தேன் என்கிற அலட்சியம்தானே உனக்கு! இன்று நான் மார்க்க விசாரணைகூடத் தலைவனாகிவிட்டேன்; காலடி வீழ்கிறாய்; அல்லவா? உன் மயக்குமொழிக்கு நான் வீழ்வேன் என்று எண்ணாதே. நவகோடி கிடைத்துவிட்டான் என்ற மண்டைக் கர்வத்தில், இருந்தாய். படு! படு! அவன் சொந்தப் பறிமுதலாகும்! அவனுடன் இருந்த உனக்கும் சிறைதான்! சிரிக்கவும் தைரியம் வருகிறதே. உனக்கு! இந்தச் சாகசத்துக்கு, நான் பலியாகமாட்டேன்! மோகனப் பார்வையைக் கண்டு நான் ஏமாறமாட்டேன்! ஏ! வெண்ணிலா! சற்று விலகியே நில்! ஆடை நெகிழ்ந்தால், என் உறுதி ஒன்றும் கவிழ்ந்துவிடாது. அந்த ஆட்கொல்லிப் பார்வையை வேறு ஏமாளிமீது செலுத்து. போ! போ! இங்கு ஏன் நிற்கிறாய்! என் அருகே வராதே! சீ! எழுந்திரு, என் பக்கத்தில் ஏன் உட்காருகிறாய். பத்தினித் தங்கமல்லவா நீ! என்னைத் தொடலாமா! வேண்டாம்; வேண்டாம், உன் சரசம்! விளக்கை அணைக்காதே! விடு! விடு! போடி மாயக்காரக் கள்ளி! யாருக்கு வேண்டும் உன் முத்தம்! உஹு... முடியாது... வேண்டாம்... கீழே தள்ளிவிடாதே... வெண்ணிலா! வெண்ணிலா... அன்பே! இவ்வளவு ஆசையை எங்கே ஒளித்து வைத்துக் கொண்டிருந்தாய்... இந்த இன்பத்தைப் பெற நான் எவ்வளவு ஏங்கிக்கிடந்தேன்... இன்று தான் உன் திருஉள்ளம் இடமளித்ததா... தேனே! தேவாம்ருதமல்லவா தருகிறாய்! பேசாதே... நீ பேசவே கூடாது... உன்னை நான் விடவே மாட்டேன்... தன் உடலில் பாதியை உமையவனுக்குத் தந்த சிவமதக்காரனல்லவா நான்! சக்தி! நம் சக்தி!... ஆஹா! இந்த விருந்தை நவகோடியானல்லவா பெற்று வந்தான்... கண்ணே! வெண்ணிலா!... கட்டளையிடு... என்ன செய்ய வேண்டும், அவனைக் காப்பாற்றுவதா, உனக்காகச் செய்கிறேன்... காரியம் முடிந்ததும் மறந்து விடுவாயோ என்னை... இந்த அன்பு நிலைத்து இருக்குமா... அடிக்கடி வருவாயல்லவா... அன்பே! இன்பமே!...